புதன், 6 மே, 2026

பீட்டா லேக்டம் வளையமும், அரசியலும்..

முதல் படத்தில் இருக்கும், பறக்கும் பட்டத்தைப்போல காட்சிதரும் மூலக்கூறு கட்டமைப்பை மட்டும் கொடுத்து, ஒரு கேள்வியை ஆங்கில இந்து நாளிதழில் நேற்று கேட்டிருந்தார்கள்..

பெனிசிலின் மற்றும் கார்பபெனெம் என்ற இருவேறு பாக்டீரியா கொல்லி மருந்துகளில் பொதுவாக காணப்படும் இந்த மூலக்கூறு கட்டமைப்பின் பெயர் என்ன? என்பதுதான்..


இந்த கட்டமைப்பின் பெயர் பீட்டா லேக்டம் வளையம் என்பதாகும்.. இரண்டாவது படத்தில் இந்த கட்டமைப்பு எவ்வாறு இரண்டுக்கும் பொதுவாக இருக்கிறது என்பதைக் காணலாம்.. இந்த குறிப்பிட்ட மூலக்கூறு கட்டமைப்புதான் பாக்டீரியாவின் செல்சுவரை உடைத்து, அதனை அழிக்க பெரும்பங்கு வகிக்கிறது..

பின்குறிப்பு: இந்த தகவலை பாக்டீரியாவிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்..

டேக் டைவர்சன்..

இந்த படங்களில் நீங்கள் பார்க்கும் மூலக்கூறுகளின் வடிவங்களை போடுவதற்கு இளங்கலை வேதியியல் படிக்கும்பொழுது பெரும்பாடு படவேண்டியிருந்தது.. முதுகலை பயிலும்பொழுது, கெம் டிரா என்றொரு செயலியின் அறிமுகம் கிடைத்தது.. அதன் உதவியுடன், எளிதில் பல வேதியியல் மூலக்கூறு வடிவங்களை வரையமுடிந்தது..

அந்த காலகட்டத்தில் ஓஎச்பியில் வரைந்து, அதனை சுவரின் மீது திரையிட்டு, ஆசிரியர்கள் பாடமெடுப்பது வழக்கம்.. அப்பொழுது எனக்கு மெடிசினல் கெமிஸ்ட்ரி பாடமெடுத்த பேராசிரியர் சுலோச்சனா அவர்கள், ஒவ்வொரு பாடவேளையின் பொழுதும் ஏறத்தாழ நூறு ஓஎச்பி தாள்களுடன் வகுப்பிற்கு வருவார்.. அவரின் சிரமத்தைக்கண்டு, அந்த ஓஎச்பி தாள்களை கையாடல் செய்து, அனைத்து மூலக்கூறு வடிவங்களையும் அப்பொழுதைய மாற்று அரசியல் பேசிய கெம் டிரா உதவிகொண்டு வரைந்து, பவர்பாய்ண்டில் போட்டுக்கொடுத்தேன்..

இப்பொழுதும் கெம் டிராவில்தான் வரைகிறேன்.. என்னுடைய ஆய்வு மாணவர்களும் அப்படிதான் செய்கிறார்கள், ஆனால், சிலர் இப்பொழுதெல்லாம் ட்ரெண்டிங்கான செயற்கை நுண்ணறிவின் உதவியையும் நாடுகிறார்கள்.. கடைசியில் ஒரே மூலக்கூறுதான்.. ஒரே வடிவம்தான்.. செய்முறை மட்டும்தான் எளிமையாகியிருக்கிறது..

எனவே மக்களே, நீங்கள் மாற்றமாக நினைப்பதுவும், இப்பொழுது வெறுத்து ஒதுக்கிய அதே வடிவத்தில்தான் இருக்கப்போகிறது என்பதை சொல்லிக்கொண்டு, வேதிவினையைத்தவிர, வேறு யாருக்கும் எந்த வினையும் செய்யாத என்னுடைய, இன்றைய அறிவியல் உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..

சகா...

புதன், 29 ஏப்ரல், 2026

அகலமாக அல்ல… ஆழமாக வளர்ந்தால் தான் ஒரு நாடு முன்னேறும்

 பொழுதுபோக்குவதற்காக என்றில்லாமல், உண்மையிலேயே எதன் மீதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று வரிசைப்படுத்திப் பாருங்கள்.. ஒரு நீண்ட அட்டவணையை கையில் வைத்திருப்பீர்கள்.. எனக்கும் அப்படித்தான்.. என் கையில் இருக்கும் அட்டவணையில், நான் எதில் சிறந்தவனாக இருக்கிறேன் என்றால், எதிலும் இல்லை..


இது என்னுடைய பிரச்சனை மட்டும் இல்லை, மொத்த தமிழர்களின், மொத்த இந்தியர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கொரியாவில், ஒருவன் வேதியியல் படிக்கிறான் என்றால், அதனை மட்டுமே சிந்திக்கும் படி, தன் மூளையை அவன் மாற்றிவைத்திருப்பான்.. குறிப்பாக அந்த வேதியியலில், பருப்பொருள் வேதியியல், அதிலும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் சிலிக்கானை பயன்படுத்தும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் ஒற்றை படிம சிலிக்கான்.. என மிக நுண்ணிய ஒரு பகுதியில், அனைத்து நுணுக்கங்களையும் அறிந்துவைத்திருப்பார்கள்..

அவரிகளிடம், படிகமற்ற சிலிக்கானைப்பற்றி கேட்டாலோ, சிலிக்காவைப்பற்றி கேட்டாலோ, தெரியாது என்று சட்டென கூறிவிட்டு கடந்துவிடுவார்கள். எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபொழுதும் வருவதே இல்லை.

ஆனால், நம்மவர்களுக்கு, ஒரு மணிநேரமும், வாசிக்க ஒரு பக்கத்தையும் கொடுத்துவிட்டால், அந்த பக்கத்தில் என்ன இருந்தாலும் அதில் தனக்கென ஒரு கருத்தை வைத்திருப்பார்கள்.

கொரியாவில், ஒரு தனிப்பட்ட கொரியனை நீங்கள் சந்தித்து உரையாற்றுகிறீர்கள் என்றால், இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி இவர்கள் இவ்வளவு பணக்கார நாடாகவும், என்னெற்ற தொழிற்நுட்பம் கொண்ட நாடாகவும் உருவாகியிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயம் சந்தேகிப்பீர்கள்.. ஆனால், அந்த ஒரு கொரியனின் துறையை அறிந்துகொண்டு, நம்மூரில் அதே துறையில் கொடிகட்டி பறக்கும் ஒருவருடன் உரையாட வைத்தீர்கள் என்றால், உங்களுக்கு புரியும் அந்த கொரியனின் உண்மையான திறமை..

நாம் நிறைய தெரிந்துகொள்கிறோம், ஆனால் நுனிபுல்லை மட்டுமே அசை போட விரும்புகிறோம்.. ஆனால் அவர்கள் ஒற்றை துறையில் தங்களின் முழு ஆற்றலையும் செலவிடுகிறார்கள். அப்படியே, பலரும், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பொழுது, மொத்த நாடும் வளர்ச்சி அடைகிறது.

ஒரு துறை தேர்வு
        ↓
அதன் உட்பிரிவு தேர்வு
        ↓
அதிலும் மிக நுணுக்கமான பகுதி
        ↓
அதிலேயே முழு கவனம்
        ↓
ஆழமான நிபுணத்துவம்

ஆனால், நாம் ஒற்றைத்துறையில் நம்மை வளர்த்துக்கொள்வதற்கான சூழலோ, அதற்காக வகுக்கப்பட்ட திட்டங்களோ இந்தியாவில் இருக்கிறதா..!

இந்தியாவில் இப்பொழுது அடிப்படை அறிவியலுக்கு போதுமான பணத்தை ஒதுக்குவதே இல்லை.. ஆயிரம் ஆய்வு செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டால், அதில் அதிகபட்சம் நூறு செயல்திட்டங்களுக்குக் கூட பண உதவி கிடைப்பதில்லை. அணுக்கரு ஆய்விலோ, ஆற்றல் சம்பந்தமான ஆய்வுகளிலோ, இயற்கை அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல் போன்றவற்றுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை.

அடிப்படை அறிவியலுக்கு குறைந்த நிதி
        ↓
ஆய்வு வாய்ப்புகள் குறைவு
        ↓
அரசு திட்டங்கள் – Trend அடிப்படையில்
        ↓
ஆய்வாளர்கள் திணிப்பு
        ↓
நிலையான வளர்ச்சி இல்லை

அறிவியல் துறையில் அடிப்படை அறியாமல், எந்த தொழில்நுட்பத்தையும் நாம் கண்டறியும் வாய்ப்பு குறைவே.. உலகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதை நோக்கியே ஓடவேண்டும் என்பதற்காக, மொத்த அரசு சார்ந்த திட்டங்களும் அதற்கு மடைமாற்றப்படுகின்றன. ஆய்வு நிறுவனங்களும், அதற்குள் ஒன்றிக்கொள்வதற்காக, ஏற்கனவே நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, புதிய திட்டத்திற்கு செல்வதற்கு ஆய்வாளர்களை நிர்பந்திக்கிறார்கள்.

அடிப்படை அறிவியல் இல்லை
        ↓
புதிய தொழில்நுட்பம் இல்லை
        ↓
மற்ற நாடுகளை பின்தொடரும் நிலை

ஆனால் பெரும்பாலான நாடுகள் அப்படி செய்வதில்லை, அடிப்படை அறிவியலுக்கு செய்துகொண்டிருக்கும் செலவை குறைக்காமல், புதிய திட்டங்கள் வகுக்கப்படும்பொழுது, கூடுதல் பணத்தை அதற்கு ஒதுக்குகிறார்கள்..

அடிப்படை அறிவியல் அற்ற சமூகம் எதை உருவாக்கும், நல்ல வேலையாட்களையும், அடிமைகளையுமே உருவாக்கும். அதனால் நாம் இனியாவது, எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை விடுத்து, ஒற்றை துறையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய மொத்த ஆற்றலையும் செலவு செய்து, கற்க வேண்டும். இனிவரும் நாட்களிலாவது இன்னொரு ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய், போஸ், ராமன், ராமசந்திரன், சந்திரசேகர், இராமானுஜம் உருவாக வேண்டும்..

சகா..

புதன், 8 ஏப்ரல், 2026

ஆர்டிமிஸ் 2 - விக்டரின் செய்தி

 நிலவை சுற்றிவந்து, இப்பொழுது பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஆர்டிமிஸ் 2 விண்கலன், நாளை காலை (ஏப்ரல் 10, 2026) இந்திய நேரம் 05:37 போல பசுபிக் பெருங்கடலில் தரையிறங்கப்போகிறது.. அந்த விண்கலத்தில் பயணப்பட்டவர்களில் ஒருவரான விக்டர், பூமியில் இருக்கும் நமக்கு கொடுத்த ஒரு முக்கிய செய்தியை கீழே தமிழில் மொழிமாற்றி கொடுத்திருக்கிறேன்..

அனைத்து விண்வெளி வீரர்களும் நாளை நலமுடன் திரும்ப இயற்கை துணைபுரியட்டும்..



“நாங்கள் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கும் பூமியிலிருந்து மிகவும் தொலைவில், ஒரு விண்கலத்தில் இருக்கிறோம். இது மிகப் பெரிய சாதனை என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், நீங்களும் ஒரு விண்கலத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். அந்த விண்கலத்தின் பெயர் பூமி. இந்த பரந்துபட்ட பிரபஞ்சத்தில் வாழ நமக்காக உருவாக்கப்பட்ட ஓர் இடம் அது.

நாங்கள் இவ்வளவு தொலைவிற்கு (4,06,771 கிமீ வரை) பயணப்பட்டு வந்திருப்பதால், இந்த பயணம் சிறப்பானதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறோமோ, அதே தொலைவில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். எனில், நீங்களும் ஒரு சிறப்பான பயணத்தைதான் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த பரந்துதுபட்ட வெற்றிடத்தில், நீங்கள் மிகவும் சிறப்பானவர்கள். வெறுமை மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு அழகான சோலை போல. அப்படியான சோலைதான் நாம் அனைவரும் ஒன்றாக வாழும் இடம்.

ஈஸ்டர் ஞாயிறு நெருங்கும் இந்த நேரத்தில், நீங்கள் அதை கொண்டாடினாலும் இல்லையென்றாலும், நீங்கள் கடவுளை நம்பினாலும் இல்லையென்றாலும், இது ஒரு முக்கியமான சிந்தனைக்கான நேரம்.
நாம் எங்கே இருக்கிறோம், நாம் யார் என்பதைத்தாண்டி நாம் எல்லோரும் ஒன்றே என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம்.
இந்த பயணத்தை நாம் ஒன்றாகத்தான் கடக்க வேண்டும்.”

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தொடரும் ஆய்வுப்பணி..

இந்த ஆண்டின் உங்கள் ரிசொலியூசன் என்ன என்று கேட்டார் ஒரு மாணவர்.. அப்பொழுது இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டு பிறந்திருந்தது.. எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லாமல், இந்த ஆண்டாவது நான் முனைவர் பட்ட ஆய்வை முடித்துவிடவேண்டும் என கூறினேன்..
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் என்னால் முடிக்கமுடிந்தது..

நான் ஆய்வகத்தில் உருவாக்கிய மெட்டீரியல்ஸ் பல நாடுகளுக்கு பறந்துசென்றிருந்தது.. குறிப்பிட்ட சில கருவிகளைத்தவிர ஏனையவற்றை நான் எங்கோ யாரிடமோதான் உதவியாக கேட்டு பெறமுடிந்தது.. இந்தியாவிற்குள் கூட TIFR, AIIMS, IISc, IITM என பல ஆய்வு நிறுவனங்களையும், TA instruments, Bruker, Micromeritics, Perkin Elmer, Agilent போன்ற ஆய்வு கருவிகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களையும் சார்ந்து இருக்கவேண்டி இருந்தது..

சுருக்கமாக சோல்லவேண்டுமானால், காந்தத்தன்மை வாய்ந்த சிலிக்காவை, 7 நானோமீட்டர் துளைகளுடன் உருவாக்கி அதன் உட்புறத்தில் புற்றுநோய்க்கான மருந்தை புற தூண்டல் மூலம் (எக்ஸ்டர்னல் ஸ்டுமுலய்) வெளியேறுவது போல வைத்து வெளிப்புறத்தில், புற்று நோயை சரியாக கண்டறிந்து, அதனை சென்றடைவது என்றவாறு வேதியியல் மாற்றம் செய்யப்பட்டது. பிற்பாடு சில காரணங்களுக்காக 7 நானோமீட்டர் துளைகளின் சுவர்கள் எங்கும் 1-2 நானோமீட்டர் அளவுள்ள துளைகள் உருவாக்குவது என முடிவு செய்து, அதுவும் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டது..

மூன்று கோணங்களில் இந்த மெட்டீரியலை ஆய்வு செய்யவேண்டியிருந்தது.
1. மெட்டீரியல் சரியாக உருவாக்கப்பட்டிருக்கிறதா?
2. துளைகளுக்குள் உட்பொதிக்கப்பட்ட, காந்தப்புலம் கொடுக்கும் இன்னொரு பொருளான அயர்ன் ஆக்ஸைடு வெளியில் வராமலும், அதே வேளை சரியாகவும் வேலை செய்கிறதா?
3. இன்விட்ரோ என்று சொல்லப்படுகிற, எந்த ஒரு உயிரியல் சூழலின் சார்பற்ற நிலையில் (Cell viability, Bioimaging, in-vitro MRI imaging) அந்த மெட்டீரியல் எவ்வாறு தீங்கிழைக்காமல் வேலை செய்கிறது? இன்வைவோ எனப்படுகிற ஒரு உயிர்ச்சூழலில், ஒரு மாதிரி விலங்கின் உட்புறத்தில் (Biodistribution, Biocompatibility, Tissue compatibility, in-vivo MRI imaging, Theranostics) எவ்வாறு தீங்கிழைக்காமல் செயல்படுகிறது?

இவற்றை எல்லாம் செய்துமுடிக்க அன்றைய காலகட்டத்தில் எங்களிடம் பெரும்பாலான கருவிகள் கைவசம் இல்லை. என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளரும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலரும் உறுதுணையாக என்னை ஆதரித்ததன் விளைவால், பல ஊர்களுக்கு பயணப்பட்டேன்.. TEM, BET, 29Si NMR, MRI, VSM, ICPMS, SAXS என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்..

மும்பையில் தங்கி ICPMS எடுத்தபொழுதும், பெங்களூரில் தங்கி TGA, DSC எடுத்தபொழுதும் ஒரு நாள் கூடுதலாக தங்கி அந்தந்த கருவிகளை தனியாக இயக்க கற்றுக்கொண்டது, இதுநாள் வரையில் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.. AIIMSக்கு சென்று விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் சிறப்பு MRIஐ பயன்படுத்த கற்றுக்கொண்டபொழுது, யாரிடமும் சொல்லாமல் ஆக்ராவிற்கு சென்று தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு திரும்பியது எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது..

நான் என்னதான் இந்தியா முழுவதும் இதற்காக சுற்றித்திரிந்தாலும், என்னுடைய மெட்டீரியல்ஸ் அதனையும் தாண்டி நாடு நாடாக சுற்றித்திரிந்தது.. என்னைவிட என் மெட்டீரியல்ஸ்தான் அதிகமாக தன்னை விளங்கிக்கொள்ள பெரிய சிரத்தை எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன்..

எல்லாம் முடிந்து, ஒருவழியாக ஆய்வறிக்கை முடித்து அனுப்பியவுடன் காத்திருந்தது இன்னொரு சோதனை.. ஆமாம், 300க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட அந்த ஆய்வறிக்கை, பரிசோதனைக்காக சென்று சேர்ந்த இடம் ஐஐடி கல்கத்தாவில் பணியை நிறைவு செய்யும் நிலையில் இருந்த பேராசிரியரின் கையில்.. அவர், வைவாவிற்கு வந்திருந்தபொழுது சொன்ன முதல் சொல், இன்னொரு ஆய்வறிக்கை இருந்தால் எனக்கு அனுப்பிவை, என்னுடைய மனைவிக்கும் ஒரு தலையணை வேண்டுமாம் என்றார்..

ஆனால் அந்த வைவா எனக்கு ஆய்வின் மீதான தாகத்தை குறைந்திருந்தது.. வேறு ஏதேனும் செய்யலாமே தவிர எதற்கு மேலும் ஆய்வுப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது அந்த ஐஐடி பேராசிரியரின் கேள்விகள்.. பெருங்கூட்டத்தின் மத்தியில், என்னுடைய ஆய்வறிக்கையிலிருந்து ஒரு கேள்வியை கூடவா அவரால் எடுத்துவைக்கமுடியவில்லை என பெருத்த ஆதங்கம் என்னுள் தேங்கத்தொடங்கியது.. கண்களிலும் அது வெளிப்பட்டது, யாருமில்லா தனியரங்கில்.. இருந்தாலும் அவர் கேட்ட மிகவும் எளிமையான கேள்விகளுக்கு பதில்சொல்லமுடியாத நிலை எனக்கு ஏற்பட்டதற்கு காரணமும் இருந்தது, அது அவரின் ஸ்லாங்.. அவரின் ஆங்கிலம், பெங்கால் சாயலில் இருந்தது.. அப்பொழுது எனக்கு பீடித்த பதட்டமும் என் காதுகளை இறுக்கமாக அடைத்துக்கொண்டது.. பல ஆண்டுகளாக என் தூக்கத்தையும், என் உணவுகளையும், மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் பறித்துக்கொண்ட அந்த முனைவர் பட்டம், என்னை வந்து அணைக்கையில்,  அவ்வளவாக அது மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை..

இருந்தும், காலம் என்னை ஆய்வுப்பணியிலேயே தொடர நிர்பந்தித்தது.. இதோ தொடர்ந்துகொண்டிருக்கிறேன், வெற்றியும் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.. ஆனால், திருப்தி அடைந்தேனா என்றால்.. இல்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும்.. இந்த 2008 முதல் 2025 வரையான ஆய்வுப்பணி, எனக்கு பல மனிதர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது, பலவற்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.. என்றோ கற்றுக்கொண்ட பாடங்கள் இன்றும் எனக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன, நானும் பலருக்கு முகம் சுளிக்காமல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.. கற்றுக்கொள்ளுவதைவிட, கற்றுக்கொடுப்பது ஒரு மகிழ்ச்சியை உணரவைத்திருக்கிறது.. ஆனாலும் ஏதோ ஒன்று என்னை நிம்மதியாக இருக்கவிடமறுக்கிறது.. அது என்ன என்பதை இப்பொழுது ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறேன்..


- சகா..
04/01/2025