புதன், 29 ஏப்ரல், 2026

அகலமாக அல்ல… ஆழமாக வளர்ந்தால் தான் ஒரு நாடு முன்னேறும்

 பொழுதுபோக்குவதற்காக என்றில்லாமல், உண்மையிலேயே எதன் மீதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று வரிசைப்படுத்திப் பாருங்கள்.. ஒரு நீண்ட அட்டவணையை கையில் வைத்திருப்பீர்கள்.. எனக்கும் அப்படித்தான்.. என் கையில் இருக்கும் அட்டவணையில், நான் எதில் சிறந்தவனாக இருக்கிறேன் என்றால், எதிலும் இல்லை..


இது என்னுடைய பிரச்சனை மட்டும் இல்லை, மொத்த தமிழர்களின், மொத்த இந்தியர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கொரியாவில், ஒருவன் வேதியியல் படிக்கிறான் என்றால், அதனை மட்டுமே சிந்திக்கும் படி, தன் மூளையை அவன் மாற்றிவைத்திருப்பான்.. குறிப்பாக அந்த வேதியியலில், பருப்பொருள் வேதியியல், அதிலும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் சிலிக்கானை பயன்படுத்தும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் ஒற்றை படிம சிலிக்கான்.. என மிக நுண்ணிய ஒரு பகுதியில், அனைத்து நுணுக்கங்களையும் அறிந்துவைத்திருப்பார்கள்..

அவரிகளிடம், படிகமற்ற சிலிக்கானைப்பற்றி கேட்டாலோ, சிலிக்காவைப்பற்றி கேட்டாலோ, தெரியாது என்று சட்டென கூறிவிட்டு கடந்துவிடுவார்கள். எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபொழுதும் வருவதே இல்லை.

ஆனால், நம்மவர்களுக்கு, ஒரு மணிநேரமும், வாசிக்க ஒரு பக்கத்தையும் கொடுத்துவிட்டால், அந்த பக்கத்தில் என்ன இருந்தாலும் அதில் தனக்கென ஒரு கருத்தை வைத்திருப்பார்கள்.

கொரியாவில், ஒரு தனிப்பட்ட கொரியனை நீங்கள் சந்தித்து உரையாற்றுகிறீர்கள் என்றால், இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி இவர்கள் இவ்வளவு பணக்கார நாடாகவும், என்னெற்ற தொழிற்நுட்பம் கொண்ட நாடாகவும் உருவாகியிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயம் சந்தேகிப்பீர்கள்.. ஆனால், அந்த ஒரு கொரியனின் துறையை அறிந்துகொண்டு, நம்மூரில் அதே துறையில் கொடிகட்டி பறக்கும் ஒருவருடன் உரையாட வைத்தீர்கள் என்றால், உங்களுக்கு புரியும் அந்த கொரியனின் உண்மையான திறமை..

நாம் நிறைய தெரிந்துகொள்கிறோம், ஆனால் நுனிபுல்லை மட்டுமே அசை போட விரும்புகிறோம்.. ஆனால் அவர்கள் ஒற்றை துறையில் தங்களின் முழு ஆற்றலையும் செலவிடுகிறார்கள். அப்படியே, பலரும், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பொழுது, மொத்த நாடும் வளர்ச்சி அடைகிறது.

ஒரு துறை தேர்வு
        ↓
அதன் உட்பிரிவு தேர்வு
        ↓
அதிலும் மிக நுணுக்கமான பகுதி
        ↓
அதிலேயே முழு கவனம்
        ↓
ஆழமான நிபுணத்துவம்

ஆனால், நாம் ஒற்றைத்துறையில் நம்மை வளர்த்துக்கொள்வதற்கான சூழலோ, அதற்காக வகுக்கப்பட்ட திட்டங்களோ இந்தியாவில் இருக்கிறதா..!

இந்தியாவில் இப்பொழுது அடிப்படை அறிவியலுக்கு போதுமான பணத்தை ஒதுக்குவதே இல்லை.. ஆயிரம் ஆய்வு செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டால், அதில் அதிகபட்சம் நூறு செயல்திட்டங்களுக்குக் கூட பண உதவி கிடைப்பதில்லை. அணுக்கரு ஆய்விலோ, ஆற்றல் சம்பந்தமான ஆய்வுகளிலோ, இயற்கை அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல் போன்றவற்றுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை.

அடிப்படை அறிவியலுக்கு குறைந்த நிதி
        ↓
ஆய்வு வாய்ப்புகள் குறைவு
        ↓
அரசு திட்டங்கள் – Trend அடிப்படையில்
        ↓
ஆய்வாளர்கள் திணிப்பு
        ↓
நிலையான வளர்ச்சி இல்லை

அறிவியல் துறையில் அடிப்படை அறியாமல், எந்த தொழில்நுட்பத்தையும் நாம் கண்டறியும் வாய்ப்பு குறைவே.. உலகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதை நோக்கியே ஓடவேண்டும் என்பதற்காக, மொத்த அரசு சார்ந்த திட்டங்களும் அதற்கு மடைமாற்றப்படுகின்றன. ஆய்வு நிறுவனங்களும், அதற்குள் ஒன்றிக்கொள்வதற்காக, ஏற்கனவே நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, புதிய திட்டத்திற்கு செல்வதற்கு ஆய்வாளர்களை நிர்பந்திக்கிறார்கள்.

அடிப்படை அறிவியல் இல்லை
        ↓
புதிய தொழில்நுட்பம் இல்லை
        ↓
மற்ற நாடுகளை பின்தொடரும் நிலை

ஆனால் பெரும்பாலான நாடுகள் அப்படி செய்வதில்லை, அடிப்படை அறிவியலுக்கு செய்துகொண்டிருக்கும் செலவை குறைக்காமல், புதிய திட்டங்கள் வகுக்கப்படும்பொழுது, கூடுதல் பணத்தை அதற்கு ஒதுக்குகிறார்கள்..

அடிப்படை அறிவியல் அற்ற சமூகம் எதை உருவாக்கும், நல்ல வேலையாட்களையும், அடிமைகளையுமே உருவாக்கும். அதனால் நாம் இனியாவது, எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை விடுத்து, ஒற்றை துறையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய மொத்த ஆற்றலையும் செலவு செய்து, கற்க வேண்டும். இனிவரும் நாட்களிலாவது இன்னொரு ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய், போஸ், ராமன், ராமசந்திரன், சந்திரசேகர், இராமானுஜம் உருவாக வேண்டும்..

சகா..

புதன், 8 ஏப்ரல், 2026

ஆர்டிமிஸ் 2 - விக்டரின் செய்தி

 நிலவை சுற்றிவந்து, இப்பொழுது பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஆர்டிமிஸ் 2 விண்கலன், நாளை காலை (ஏப்ரல் 10, 2026) இந்திய நேரம் 05:37 போல பசுபிக் பெருங்கடலில் தரையிறங்கப்போகிறது.. அந்த விண்கலத்தில் பயணப்பட்டவர்களில் ஒருவரான விக்டர், பூமியில் இருக்கும் நமக்கு கொடுத்த ஒரு முக்கிய செய்தியை கீழே தமிழில் மொழிமாற்றி கொடுத்திருக்கிறேன்..

அனைத்து விண்வெளி வீரர்களும் நாளை நலமுடன் திரும்ப இயற்கை துணைபுரியட்டும்..



“நாங்கள் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கும் பூமியிலிருந்து மிகவும் தொலைவில், ஒரு விண்கலத்தில் இருக்கிறோம். இது மிகப் பெரிய சாதனை என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், நீங்களும் ஒரு விண்கலத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். அந்த விண்கலத்தின் பெயர் பூமி. இந்த பரந்துபட்ட பிரபஞ்சத்தில் வாழ நமக்காக உருவாக்கப்பட்ட ஓர் இடம் அது.

நாங்கள் இவ்வளவு தொலைவிற்கு (4,06,771 கிமீ வரை) பயணப்பட்டு வந்திருப்பதால், இந்த பயணம் சிறப்பானதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறோமோ, அதே தொலைவில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். எனில், நீங்களும் ஒரு சிறப்பான பயணத்தைதான் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த பரந்துதுபட்ட வெற்றிடத்தில், நீங்கள் மிகவும் சிறப்பானவர்கள். வெறுமை மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு அழகான சோலை போல. அப்படியான சோலைதான் நாம் அனைவரும் ஒன்றாக வாழும் இடம்.

ஈஸ்டர் ஞாயிறு நெருங்கும் இந்த நேரத்தில், நீங்கள் அதை கொண்டாடினாலும் இல்லையென்றாலும், நீங்கள் கடவுளை நம்பினாலும் இல்லையென்றாலும், இது ஒரு முக்கியமான சிந்தனைக்கான நேரம்.
நாம் எங்கே இருக்கிறோம், நாம் யார் என்பதைத்தாண்டி நாம் எல்லோரும் ஒன்றே என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம்.
இந்த பயணத்தை நாம் ஒன்றாகத்தான் கடக்க வேண்டும்.”