புதன், 8 ஏப்ரல், 2026

ஆர்டிமிஸ் 2 - விக்டரின் செய்தி

 நிலவை சுற்றிவந்து, இப்பொழுது பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஆர்டிமிஸ் 2 விண்கலன், நாளை காலை (ஏப்ரல் 10, 2026) இந்திய நேரம் 05:37 போல பசுபிக் பெருங்கடலில் தரையிறங்கப்போகிறது.. அந்த விண்கலத்தில் பயணப்பட்டவர்களில் ஒருவரான விக்டர், பூமியில் இருக்கும் நமக்கு கொடுத்த ஒரு முக்கிய செய்தியை கீழே தமிழில் மொழிமாற்றி கொடுத்திருக்கிறேன்..

அனைத்து விண்வெளி வீரர்களும் நாளை நலமுடன் திரும்ப இயற்கை துணைபுரியட்டும்..



“நாங்கள் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கும் பூமியிலிருந்து மிகவும் தொலைவில், ஒரு விண்கலத்தில் இருக்கிறோம். இது மிகப் பெரிய சாதனை என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், நீங்களும் ஒரு விண்கலத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். அந்த விண்கலத்தின் பெயர் பூமி. இந்த பரந்துபட்ட பிரபஞ்சத்தில் வாழ நமக்காக உருவாக்கப்பட்ட ஓர் இடம் அது.

நாங்கள் இவ்வளவு தொலைவிற்கு (4,06,771 கிமீ வரை) பயணப்பட்டு வந்திருப்பதால், இந்த பயணம் சிறப்பானதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறோமோ, அதே தொலைவில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். எனில், நீங்களும் ஒரு சிறப்பான பயணத்தைதான் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த பரந்துதுபட்ட வெற்றிடத்தில், நீங்கள் மிகவும் சிறப்பானவர்கள். வெறுமை மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு அழகான சோலை போல. அப்படியான சோலைதான் நாம் அனைவரும் ஒன்றாக வாழும் இடம்.

ஈஸ்டர் ஞாயிறு நெருங்கும் இந்த நேரத்தில், நீங்கள் அதை கொண்டாடினாலும் இல்லையென்றாலும், நீங்கள் கடவுளை நம்பினாலும் இல்லையென்றாலும், இது ஒரு முக்கியமான சிந்தனைக்கான நேரம்.
நாம் எங்கே இருக்கிறோம், நாம் யார் என்பதைத்தாண்டி நாம் எல்லோரும் ஒன்றே என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம்.
இந்த பயணத்தை நாம் ஒன்றாகத்தான் கடக்க வேண்டும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக