புதன், 27 மே, 2026

மரபும், மரபணுவும்

 “மரபணு சார்ந்த குறைகள் அதனால் ஏற்படும் நோய்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே.. அதையெல்லாம் ஏற்க இயலாது.. அது என்ன பிறப்பின் அடிப்படையில் சாதிபோல, பிறப்பின் அடிப்படையில் நோயா” என்று.. நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு எழுதாளர், அதுவும் சாகித்ய அகாடமி விருது பெற்ற, மரபு சார்ந்த மருத்துவத்தை உயர்த்திப்பிடிக்கும் எழுத்தாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.. அதற்கான எதிர் கருத்தை வைத்ததும் அவரின் கோபத்திற்கு அன்று ஆளானேன்..


உண்மையில் மரபணு சார்ந்த, அதாவது பிறப்பால் ஏற்படும் நோய் என்று ஒன்று உண்டா என்றால், உண்டு என்பதே அறிவியல் தெரிந்தவர்கள் கூறுவார்கள். அதற்காக அதனை நாம் சாதியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது சிறப்பானதாக இருக்காது. ஆனால், அந்த சாதிய பகுப்புமுறையும் இங்கு அந்த மரபணு சார்ந்த நோய்களை, குறைகளை தோற்றிவிக்க மிகமுக்கிய காரணமாக இருக்கிறது.

முதலில் மரபு பஞ்சாயத்தை தீர்த்துவிடலாம்..

தமிழர்கள் தன்னுடைய பாரம்பரியம், பண்பாடு போன்ற தொன்றுதொட்டு தொடரும் ஒரு நடைமுறையை மரபு என்று அழைக்கிறார்கள்.
அதே வேளை, ஜீன் எனக்கூறப்படுகிற சொல்லையும் மரபுடன் இணைத்து மரபணு என்று வழங்குகிறார்கள்.
மரபணு என்பது சிறப்பான மொழியாக்கம். இது தமிழின் மரபிற்கு கிடைத்த வெற்றி.. மரபணு என்று வழங்கப்படுவதன் நோக்கம், அது மீண்டும் மீண்டும் தொடர்வதால்தான்.. மரபு என்ற சொல்லின் பொருளை தாங்கிவருவதால், பண்பாட்டு மரபுக்ளுடன் இதனை கலப்பது, சிறந்த அறிவாகிவிடாது. ஆனால் பண்பாட்டு மரபுகள், இந்த மரபணுவில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே வேளை, மரபு - பாரம்பரியம் - பண்பாடு என்பது ஒரு புறவெளியில் ஒரு குழுவாலோ, தனி மனிதனாலோ ஏதோவொரு காரணத்திற்காக செய்யப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டு, தொன்றுதொட்டு காரணம் அறியாமலேயே அதனை பின்தொடர்தல்... மரபும் ஒரு அறிவியல் இல்லையா என்றால், அதுவும் அறிவியல்தான்.. ஆனால், அறிவியல் தொடர்ச்சியற்ற, ஆரம்ப புரிதலுடன் நின்றுபோன ஒரு அறிவியல்.

எளிமையாக புரிந்துகொள்ள ஒரு ஒப்புமையை பார்க்கலாம்,

ஒருவரிடம் எழுதப்பட்ட காகிதத்தை கையில் கொடுத்து, அதனை பிரதி எடுத்து வர அனுப்புகிறீர்கள் என்றால், அவர் அதற்கான கடையைத்தேடி செல்வார்.. அப்படி ஒரு கடையை கண்டுபிடித்து, அதனை பிரதி எடுத்தும் வருவார்.. அடுத்தமுறையும் அவரிடம் அதே காகிதத்தைக்கொடுக்கிறீர்கள் என்றால், அவர் முன்பே கண்டுவிட்ட அதே கடையையே நாடுவார், பிரதியும் எடுத்துவருவார். இப்பொழுது, அந்த கடையில் இருக்கும் பிரதி எடுக்கும் கருவியில் ஏற்பட்ட சில பிரச்சனையால், இரண்டாவது வரியிலும், நாற்பதாவது வரியிலும் கறுப்பு மை அப்பிவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் இப்பொழுது, வேறு கடைக்கு சென்று பிரதி எடுத்தால் பிரச்சனை இல்லை, ஆனால், அதே கடைக்குதான் செல்வேன் என அடம்பிடித்து, பிரதியும் எடுத்து வருவார் என்றால் அந்த கறுப்பு மை அனைத்து பிரதிகளிலும் படர்ந்திருப்பதை உங்களால் பார்க்கமுடியும். இப்பொழுது, அவரிடம், கறுப்பு மை படர்ந்திருக்கும் பிரதியை கொடுக்கிறீர்கள் என்றால்.. என்னவாகும்..!
பிரதியில் ஏற்கனவே கறுப்பு மை அப்பியிருக்கிறது, மீண்டும் அதே பிரச்சனையான கருவி.. இன்னும் சிக்கல் அதிகமாகும்தானே..

அதே மாதிரிதான், நம்முடைய மரபணுக்களும்.. தொடர்ச்சியாக அந்த மரபணுக்கள் வந்துகொண்டிருக்கும்பொழுது ஏதோவொரு காரணத்தால், (அது புறக்காரணியாக இருக்கலாம், அல்லது அகக்காரணியாகக்கூட இருக்கலாம்..) அந்த மரபணு தொடர்ச்சியில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த கறுப்பு மையாக அப்பியிருக்கும் சிக்கலானது, உறவுக்குள்ளே திருமணம் செய்யும்பொழுதோ, சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும்பொழுதோ, வெளிப்படும் நிகழ்தகவானது அதிகமாகும். அப்படி அந்தக்குறிப்பிட்ட சிக்கல் வெளிப்படும் பட்சத்தில், குறைபாடுகளும், நோய்களும் ஏற்படுகின்றன. இந்த நோய்களைத்தான் மரபணு சார்ந்த நோய்கள் அல்லது குறைபாடுகள் என்கிறார்கள்.
இந்தியாவில், அப்படியான பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன.. அதனால், மரபணு சார்ந்த நோய்களும் அதிகமாக காணப்படுகின்றன.

இதனை தன்னுடைய ஆய்வாக எடுத்து செய்துவரும் ஒரு ஆறிவியல் ஆய்வாளர்தான் முனைவர் கு. தங்கராஜ் அவர்கள்.. அவர் அறிவியலில் ஆற்றிய பணிக்காக, அவருக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டிருக்கிறது..

அவருடைய சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது என்றால், பொதுவாக இந்த அலோபதி மருத்துவமுறை என்பது ஐரோப்பிய மரபணுக்களின் அடிப்படையிலேயே மொத்த மக்களுக்கும் அணுகப்படுகிறது.. ஆனால், அவர்களின் மரபணுக்கள் போலவே உலகத்தில் வாழும் மற்றவர்களின் மரபணுக்களும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. குறிப்பாக, இந்தியாவில் எண்ணெற்ற புதிய மரபணுக்களை காணமுடிகிறது.. அதனால், இந்த தனித்துவம் வாய்ந்த மரபணுக்கள், அந்த ஐரோப்பிய மரபணுக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட மருந்துகளுக்கு சரியாக இயைந்துகொடுக்கும் என்று சொல்லமுடியாது. சிலவேளை, முற்றிலும் எதிரான விளைவு கூட ஏற்படலாம். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிற்கு உள்ளேயே, நிறைய வேறுபட்ட மரபணுக்கள் காணக்கிடைக்கின்றன.. திராவிடம், இந்தோ-ஐரோப்பியம் (ஆரியம்), பழங்குடி இனங்கள் (Dravidian, Indo-European, Tibeto-Burman, Austro-Asiatic, Tibeto-Burman tribe, Indo-European tribe, Dravidian tribe, Austro-Asiatic tribe, etc.) என பல்வேறுபட்ட இனங்கள் இந்தியாவில் வாழ்ந்துவருவதால், ஒரே மருந்துகூட, வெவ்வேறு மரபணுக்கள் கொண்ட இனங்களுக்கு வெவ்வேறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.



இதிலிருந்து என்ன தெரிகிறது,
மருத்துவம் ஒரு இனத்தின் கையில் இருக்கவேண்டும். மாநில அரசு இந்த ஆய்வை இன்னும் முடுக்கிவிட்டு, மக்களையும் அறிவியல் வயப்படுத்தவேண்டும். ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி என்பதெல்லாம் எந்த அளவிற்கு ஏற்றதில்லையோ, அதே போல ஒரே மருத்துவமும் ஏற்றதல்ல.. personalized medicine – தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தின் தேவை அறிந்து, அதை நோக்கி அரசு ஆய்வுகளை நடத்தவேண்டும். அதற்கான வழிகாட்டுதலையும், பொருளாதார பங்கீட்டையும் மட்டுமே ஒன்றிய அரசு செயல்படுத்தவேண்டும்.

- சகா..

(Ref.,
https://www.nature.com/articles/d44151-026-00082-0
https://www.medrxiv.org/content/10.64898/2026.03.20.26348801v1
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக