வியாழன், 24 அக்டோபர், 2019

தமிழில் அறிவியல்

ஒருவரின் எண்ண வெளிப்பாடுகளை அறிவு-சார், உணர்வு-சார் என்று பொத்தாம் பொதுவாக பிரிப்பது நம்முடைய நடைமுறை. ஒரு செயல், அறிவியலுக்கு ஒவ்வாதவையாகவோ, தம்முடைய எண்ணஓட்டத்திற்குள் அடங்காதவையாகவோ இருந்தால் அச்செயலை உணர்வு-சார் பெட்டிக்குள் அடைத்துவிடுவது நம் பழக்கம். அப்படி உணர்வு-சார் செய்கைகளெல்லாம் அறிவுசார்ந்து இருப்பதில்லையா எனக்கேட்டால், இல்லை என்பதே பெருப்பாலானவர்களின் பதிலாக இருக்கக்கூடும்.

இப்படியாய் நாம் புரிதலற்று பொத்தாம் பொதுவாய் உணர்வு-சார் பெட்டிக்குள் மட்டுமே காலம்காலமாய் அடக்கிவைத்த ஒன்றுதான் மொழி. தம் தாய்மொழியைப் பற்றி யாரேனும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்துவிட்டால் போதும், அவர் அன்றிலிருந்து வெறும் அறிவற்ற வெற்று மொழி உணர்வாளர் என்றளவிலேயே மதிக்கப்படுவர். தாய்மொழி என்பது வெறுமனே ஒருவனின் உணர்வு மட்டுமல்ல, அஃது ஒருவனின் மண்சார்ந்த வாழ்வியலை, பண்பை, இயல்பை, கோபத்தை,  கலையியலை, இறையியலை, கற்பியலை, கல்வியை இன்னும் பலவற்றை பறைசாற்றும் ஒரு சாளரம். அப்படியாயின், அந்த சாளரம் அறிவற்றோ, அறிவுக்கு புறம்பாகவோ, அறிவை முற்றிலும் சாராமலோ இயங்க வாய்ப்பே இல்லை.

அறிவின் களஞ்சியம்தான் மொழி. தான் பெற்ற தனியறிவை, மற்றவர்களுக்கு பயன்படும் பொது அறிவாய் மாற்ற இங்கு மொழியென்ற மிகப்பெரிய அறிவு ஆயுதம் இன்றியமையாதது. அப்படி ஆயுதம் ஏந்திய இந்த மொழித்தீவிரவாதியை விருது கொடுத்து தட்டிக்கொடுத்திருக்கிறது கொரிய தமிழ்ச் சங்கம் (KTS).

நான் பெறும் முதல் 'தமிழ்' விருது இது. நான் இதுவரை அறிவியல் ஆய்விற்காக பெற்ற விருதுகள் அனைத்திற்கும் தலையாய விருது இது என்று கூறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழகத் தமிழர்களை விட மூன்றரை மணிநேரம் முன்பே கதிரவனை சுற்றித்திரிந்துகொண்டிருக்கும் கொரிய வாழ் தமிழ் நண்பர்களுக்கும், என்னை இவ்விருதுக்காக வழிமொழிந்த நண்பர்களுக்கும், தமிழிற்கும் எனது நனிமிகு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

-சக்தி

Halo பரிவேடம் அகல்வட்டம்

Halo - பரிவேடம் - அகல்வட்டம்
'அகல்வட்டம் பகல் மழை' என்பர்!
பொதுத்தமிழில் கோட்டை கட்டுதல் என்றுகூட சொல்வர்!
'வானம் கோட்ட கட்டுதுடா, காயவச்ச நெல்ல அள்ளி பத்தாயத்துல கொட்டுங்கடா'ன்னு எங்க அப்பா சொல்வார்!
Halo is nothing but photon (light) refraction by crystalized water.

As like Selected Area Electron Diffraction (SAED) create patterns of crystals, photons that comes from sunlight gets scattered by the crystalized water molecules present in the cloud!
So, this phenomena may be named as Selected Area Photon Refraction (SAPR)!

மிக எளிமையாய் கூறவேண்டுமானால், இது ஒரு நிறப்பிரிகை நிகழ்வுதான். மேகத்தில் ஒருங்கிணையும் நீர் மூலக்குறுகள், தங்களுக்குள் ஹைட்ரஜன் பிணைப்பினை ஏற்படுத்தி ஒத்துருபடிகத்தை (crystalization - ice formation) அடைகின்றன. அப்படிகமான நீர் மூலக்கூறுகள் முப்பட்டக கண்ணாடி (prism) போல செயல்பட்டு பரிதி (கதிரவன்) ஒளியையோ, நிலவொளியையோ சிதறடிக்கின்றன. இப்படியான நிகழ்வால்தான் Halo என்று அழைக்கப்படும் பரிவேடம் - அகல்வட்டம் - கோட்டை கட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

சக்தி.
பதிவு: 08/09/2019, தஞ்சையிலிருந்து.

#தமிழ் #இயற்பியல் #physics #chemistry_of_physics #chemistry #physicalchemistry #physics_of_chemistry #halo #haloscience #refraction #scattering #ramanscattering #ice #cloud #naturephotography #nature #naturelover #cryatalization #crystal #hydrogenwater #hydrogenbonding

வியாழன், 5 செப்டம்பர், 2019

சிறந்த ஆசிரியன்

நண்பரொருவர், உங்கள் அலைபேசியில் MS word இருக்கிறதா என்றார், இருக்கிறதே, ஆனால் தேடுவது கடினம் என்று மைய பொத்தானை (Home key) நீண்ட நேரம் அழுத்தி, Hey google, open MS word என்றேன், உடனே MS word திறக்கப்பட்டது. அதைக் கண்டு அசந்து போன அதில் பரிச்சயம் இல்லா அந்த நண்பர், Google தான் சிறந்த ஆசிரியரென்றார்.

அவர் கூற்றுப்படி, கற்பிப்பவரெல்லாம் ஆசிரியரென்றால் இவ்வுலகின் மிகப்பெரிய அறிவு களஞ்சியமும், செயற்கை நுண்ணறிவை சிறுகச்சிறுக பெற்றுக்கொண்டிருக்கும் கையடக்க மிடுக்கலை பேசியே உலகின் ஆகச்சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும்!

ஆனால், அறிவாற்றல் மட்டுமே ஒருவனை ஆசிரியனாய்  உருமாற்றிவிடாது. அஃது அறிவுடன் கூடிய மனிதத்தின் உச்சமாகவே நான் எண்ணுகிறேன். பொருளிருந்தால் போதும் இவ்வுலகில் எதனையும் எளிதில் பெற்றுவிடமுடியும் என்ற பொதுபுத்திக்குள் அடங்காத ஒரே பண்டம் அறிவுதான். அப்படிப்பட்ட அறிவை ஊட்டவல்ல ஒருவர் எப்படி இருக்கவேண்டும், எப்படியான ஆடையை அணிய வேண்டும், ஆங்கில மொழியில் பேசவேண்டும், என்பதான தட்டை வடிவத்தைதான் சுற்றத்தார் பலர் சிறந்த ஆசிரியனுக்கு கொடுக்கிறார்களே ஒழிய ஆசிரியனின் கற்பித்தல் திறனை மதிப்பிடுவதே இல்லை. கற்பித்தல் திறனென்பது, ஆசிரியர் எவ்வாறு தாம் பெறும் அறிவை, தம்மின் உணர்வுகளுக்கோ, தற்பிடித்தத்திற்கோ, இடமளிக்காமல், ஒரு மாணவனுக்கு மடைமாற்றம் செய்கிறார் என்பதைப் பொறுத்தது!

உணர்வு மற்றும் தற்பிடித்தம் என்பது ஒருவற்கு பாலினம், குடும்பம், அரசியல், மதம், சாதி என்று எந்தவித தளத்திலும் இருக்கலாம். அப்படியான தமக்கான இறுக்கத்தையெல்லாம் பொருட்படுத்தாது, அறிவுக்கு எது உகந்ததோ அதனை மட்டும் மூளைகளுக்கிடையே பகிர்பவரே சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். மற்றபடி அவ்விறுக்கத்தை, தற்பிடித்தத்தை சார்ந்தே ஒருவரின் கற்பித்தல் இருக்குமாயின், அவர் சிறந்த பேச்சாளனாய் ஆகலாம், சிறந்த ஆசிரியனாய் அல்ல!

வாருங்கள் சிறந்த ஆசிரியனை உருவாக்க!

சக்தி.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன்



வானம் நீல நிறம்!
மேகம் வெள்ளை நிறம்!
மாலைக் கதிரவன்
சிவப்பு நிறம்!
சுற்றுச்சூழல் மாசுபாட்டால்
மேலும் அழகாகும் செங்கதிரவன்!
இவை நான்கிற்குமான
தொடர்பு ஒன்று உண்டு!!!
என்ன தெரியுமா?
தொடர்பு: 'ராலே ஒளிச்சிதறல்' (Rayleigh scattering).
நுண்ணிய துகள்களின் வழி ஒளி பயணிக்கும் பொழுது அதிக ஆற்றலும், குறைந்த அலைநீளமும் கொண்ட நீல நிறம் சிதறடிக்கப்படுகின்றன.

1. வானம் - நுண்ணிய துகள்களால் நிரம்பிய ஒரு பகுதி - ராலே ஒளிச்சிதறல் நடைபெறுவதால் நீலமாக காட்சி தருகிறது.

2. மேகம் - சிறிய முதல் பெரிய மூலக்கூறுகளால் நிரப்பப்பட்ட பகுதி - பெரும்பாலான நிறங்கள் சிதறடிக்கப்பட்டு நிறங்களின் கூட்டமைப்பால் வெண்மையாய் காட்சி தருகிறது. மழை மேகமாக இருப்பின், அது ஒளியை எதிரொளித்து மறுபக்கம் ஒளியை ஊடுருவவிடாமல் தடுப்பதால் கருநிறத்தில் காட்சிதருகிறது.

3. மாலையில் கதிரவன் நம் கண்பார்வைக்கு நீண்ட தொலைவில் இருப்பதால் அனைத்து நிறங்களும் வானம் மற்றும் மேக கூட்டங்களால் சிதறடிக்கப்பட்டு அதிக அலைநீலம் கொண்ட சிவப்பு நிறத்தை மட்டும் நம் கண்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறது.

4. எனவே, சுற்றுச்சூழல் அதிகம் மாசடையும் நேரத்தில், அனைத்து நிறங்களும் செவ்வனே சிதறடிக்கப்படுவதால், கதிரவனின் சிவப்பு நிறம் மேலும் மெருகேறும். எனில், சுற்றுச்சூழல் மாசுபட்ட பகுதிகளில் நின்று மிக அழகிய கதிரவ மறைவை கண்டுகளிக்கலாம்.


சக்திவேல்


ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

அதிநுண் கரிக்குழல்களாக உருமாற்றம் பெறும் கரியமில வாயு


உலகில் எந்த மனிதனை தொடர்பு கொண்டு, உங்களுக்கு தவிர்க்கமுடியாத தேவையாக இருப்பது எது என்று கேட்டால், உடனே அவர்களிடமிருந்து வரும் பதில் குருவி கூடுபோலானாலும் சரி ஒரு சிறிய வீடு ஒன்று சொந்தமாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். உலக மக்கள்தொகை 7,495,000,334 (02/04/2017; 07:24:50 வரையிலான நிலவரம்) ஆக இருக்கும் இவ்வேளையில் அனைவருக்குமான இருப்பிடத்தை  உருவாக்க வேண்டுமானால் மணல், செங்கல் மற்றும் மரங்கள் தவிர நமக்கு அதிகம் தேவையாக இருப்பது சிமெண்ட். அந்த சிமெண்டை உருவாக்கும் தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில், அது ஏற்படுத்தும் பச்சை வீட்டு வாயுவான CO2 (கரியமில வாயு) உருவாக்கும் விளைவுகள் எண்ணற்றவை.
கதிரவன் தான் நம் பூமியை சூடாக்கும், ஒளிர வைக்கும் ஒரே மூலம், அந்த கதிரவ ஒளியானது பூமியில் படும்பொழுது ஏறத்தாழ 30% பல்வேறு மூலக்கூருகளால் ஆன மேகக்கூட்டங்களாலும், பனிப்பாறைகளாலும் எதிர்க்கப்பட்டு மேல்நோக்கி செலுத்தப்படுகின்றன. எஞ்சிய 70% பூமியில் உள்ள நீர் நிலைகளாலும், நிலங்களாலும் உறிஞ்சப்படுகின்றன. அந்த உறிஞ்சப்பட்ட வெப்பமானது (வேறுபட்ட அலைநீளங்கள் கொண்ட ஒளியால் ஏற்பட்டது), ஆற்றல் குறைந்த அதீத அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு கதிராக திருப்பி மேல்நோக்கி அனுப்பப்பட்டு அங்குள்ள பச்சைவீட்டு வாயுக்களான மீத்தேன், CO2 ஆல் உறிஞ்சப்படுகின்றன. அந்த வாயுக்கள் ஒரு எரிவூட்டும் கல்லைப்போல் செயல்படும், எடுத்துக்காட்டாக, ஒரு கல்லை அடுப்பில் போட்டு அதனை சூடாக்கி பின் வெளியில் எடுத்துப்போட்டால் அது அடுத்த 30 நிமிடத்திற்கு வெப்பத்துடன்தான் இருக்கும், அதுமட்டுமன்றி தன் சுற்றத்தையும் சூடாக்கிக்கொண்டேயிருக்கும். அதுபோலவே, அந்த அகச்சிவப்பு கதிரால் வெப்பமான வாயுக்கள் தன் பங்கிற்கு தன் சுற்றத்தையும் சூடாக்கும் இயல்புடையது. இப்படியாய் அந்த வாயுக்களில் இருந்து வெப்பம் மீண்டும் உமிழப்பட்டு பூமியின் மேற்புறத்தை சூடாக்கிவிடுகின்றன. இதுபோன்ற வாயுக்கள் இல்லாமல் கதிரவனால் மட்டுமே பூமி வெப்பமடைவதாக வைத்துக்கொண்டால், பூமி மேற்புறத்தின் சராசரி வெப்பநிலை -18 டிகிரி செண்டிகிரேட் (0  deg F) ஆக இருக்கும். இதுவே அந்த வாயுக்களின் இருப்பால் ஏறத்தாழ 15 டிகிரி செண்டிகிரேட் (59 deg F) வெப்பத்தை அடைகிறது பூமியின் மேற்புறம். இப்படியாய், இந்த வாயுக்களின் அளவு கூடிக்கொண்டே இருந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் மேற்புற சராசரி வெப்பநிலை 2 லிருந்து 6 டிகிரி செண்டிகிரேட் வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கிறது நாசா. இந்த எச்சரிக்கையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாது, நம்மைப்போன்ற வளரும் நாடுகளுக்கு பாடம் எடுக்கிறது அமெரிக்கா போன்ற வளர்ந்த வல்லாதிக்க நாடுகள். சரி நாம் மைய நீரோட்டத்திற்கு வருவோம்,
அப்படிப்பட்ட கொடுஞ்செயலை செய்யும் CO2 வாயுவானது சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலிருந்துதான் அதிகம் உமிழப்படுகிறது (ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு அளவு). இவ்வளவு அதிகமான உமிழ்வை எவ்வாறு தவிர்க்கலாம் என்று பல அரசுகள் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகள் குறிப்பாக கொரியா, ஜப்பான் போன்றவைகள் மரவீடுகளை அமைத்தோ, கரியால் செய்யப்பட்ட சிமெண்ட் கற்களை வைத்தோ மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால், அது வேறுசில பிரச்சினைகளை கொடுத்துவிட வல்லது. எனவே இதில் செய்யவேண்டியது நீண்ட நெடிய ஆய்வு. நீரின்றியும் அமையும் உலகு, ஆனால் அறிவியல் ஆய்வின்றி அமையாதுலகு என்று சொல்லுமளவுக்கு, அறிவியல் ஆராய்ச்சி என்பது அதீத தேவைகளை பூர்த்தி செய்வதாக இன்றளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்வு:
கார்பன் நானோ டியூப் என்று சொல்லப்படுகிற அதிநுண் கரிக்குழல்களை கேள்விப்பட்டிருக்கலாம் நீங்கள் (விரைவில் இன்னும் விரிவாக அதிநுண் கரிக்குழல்களை பற்றி பார்க்கலாம்). எளிதில் விளக்க வேண்டுமென்றால், ஒரு ஏணி ஒன்று பூமியிலிருந்து நிலவுக்கு உருவாக்கப்படவேண்டுமென்றால், அது அதிநுண் கரிக்குழல்களைக் கொண்டே உருவாக்க முடியும். அப்படிப்பட்ட அதீத வல்லமை கொண்டது இந்த அதிநுண் கரிக்குழல்கள். இதன் பயன்பாடுகள், மின்கலன்கள், மிடுக்கு அலைபேசிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்றளவில், எவரேனும் ஒருவர் இந்த அதிநுண் கரிக்குழல்களை அதிகப்படியாக உருவாக்கிக்காட்டினார் என்றால், அவர் உலகளவில் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிடுவார் என்பது திண்ணம்.
இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட அந்த அதிநுண் கரிக்குழல்களை, சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரிப்புகை கொண்டு உருவாக்கி காண்பித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது ஒரு எளிமையான அறிவியல்தான், அதாவது ஒரு திடமான, மிகவும் நேர்த்தியான வெளிப்புற கட்டுமானம் கொண்ட ஒரு பொருளின் மீது ஒருவிதமான அதிநுண் கரிக்குழல் உருவாக்கும் வினையூக்கியை கொண்டு ஒரு மிருதுவான அடுக்கை ஏற்படுத்திவிடுகிறார்கள், அதனை அத்தொழிற்சாலை புகைபோக்கியின் மீது வைக்கையில், அதிலிருந்து வெப்பம் உமிழ்ந்து வெளியேறும் புகையானது, வினையூக்கியில் பட்டு அதிநுண் கரிக்குழலாக உருமாற்றம் அடைகிறது. பின் அதனை எளிதில் பிரித்தெடுத்து பல்வேறு பயன்பாட்டிற்காக உட்படுத்திக்கொள்ளலாம். இதே மாதிரியான ஆய்வை உந்துருளி போன்ற வாகங்களின் புகைப்போக்கிகளில் வைத்தும் நடத்தலாம். ஒருவேளை நல்ல தரமான அதிநுண் கரிக்குழல்கள் கிடைத்துவிட்டால், அதற்கு உலகளவில் மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது.

சக்திவேல்


திங்கள், 12 அக்டோபர், 2015

மலேரியா: நோய் முதல் நொபெல் வரை

மலேரியா நோய்க்கான காரணங்களும், அது ஏற்படுத்திய பாதிப்புகளும்

மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) எனும் தாவரத்திலிருந்து ஆர்மிசினின் (Artemisinin) எனும் உயிர்வேதிப்பொருளை பிரித்தெடுத்து, அது மலேரியாவுக்கு எதிராக வேலை செய்கிறது என்றும் நிரூபித்துள்ளார். இந்த தாவரத்தை, பாரம்பரிய சீன மருத்துவ முறையிலிருந்து அவர் தெரிவு செய்திருக்கிறார்.

மலேரியா என்பது ப்ரோட்டோசொவன் எனும் ‘ஒரு செல்’ உயிரியால் உருவாகும், அனபிலஸ் எனும் பெண் கொசுவின் உமிழ் நீரினால் பரப்பப்படும் ஒரு தொற்று நோயாகும். காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். முற்றிய நிலையில் இது மஞ்சள் சுரத்தையும், கோமா நிலையையும் உண்டு செய்யும், மிகவும் முற்றிய நிலையில் இது மரணத்திற்கும் கூட வழி வகுக்கும். தொற்றுநோய்க் கிருமி, கொசுவின் உமிழ் நீரில் இருந்து தாக்கப்படுபவரின் இரத்தத்தில் கலக்கிறது. பின்பு இக்கிருமி கல்லீரலை அடைந்து வளர்ந்து, முதிர் தன்மை அடைந்து மீண்டும் குருதியில் கலக்கிறது. பின்னர் குருதியில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் தங்கி வளர்ந்து, இனவிருத்தி அடைந்து பின்பு இவற்றை அழிக்கின்றன.

பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளின் மலேரியாவின் பாதிப்புகள் அதிகம், குறிப்பாக ஆப்பிரிக்காவில். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி, சுமார் 5,84,000 பேர் மலேரியாவின் கோரப் பிடியில் சிக்கி இறந்திருக்கிறார்கள். ஏழ்மைக்கும் இநோயிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவதில் எந்த அளவு உண்மை இருக்க முடியுமென தெரியவில்லை, ஆனால் தேங்கிய நீர் நிலைகளில் தான் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் குடிகொள்கின்றன. ஆகவே. இந்த கொசுக்களை கொல்வதே தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கை ஆகும். மேலும் இக்கொசுக்களை கொல்ல டிடிடி, சிப்ளுத்ரின் மற்றும் டெல்டாமெத்ரின் போன்ற மருந்துகளை தெளித்து அழிக்கவும், கொசுவலை பயன்படுத்துவதும் சிறந்த தற்காப்பு முறைகளாகும்.

மலேரிய தடுப்பு மருந்தின் ஆரம்ப நிலை

ஆண்டிஸ் மலைத்தொடரில் காணப்படும் ஒரு வகையான மரம் ‘சின்கோனா’. பெரு நாட்டின் மக்கள் இம்மரத்தின் பட்டைகளை ஊறவைத்து, அதன் தண்ணீரை குடிப்பதை (கியாயம்) காய்ச்சலை தணிக்கும் மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற சில மத போதகர்களின் மூலமாக இது லண்டனை அடைந்துள்ளது. சின்கோனா எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து தருவிக்கப்பட்ட வேதிப் பொருளான குய்னைன் தான் மலேரியாவிற்கு சிறந்த மருந்தாக இன்றளவும் பாவிக்கப்படுகிறது. ஆனால் இந்த நோய்க்கிருமிகள் தங்கள் மரபணுக்களை மாற்றியமைத்து இந்த மருந்துகளுக்கு மட்டுப்படாமல் எதிர்ப்புத் தன்மை பெற்றுவிட்டன. இவ்வாறான அக்கிருமியின் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே ஆர்மிசினின் கண்டறிய வேண்டியதற்கான தேவை உண்டானது.

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அமெரிக்கர்களில் சுமார் 60,000 பேர் மலேரியாவால் இறந்ததாக அறியப்படுகிறது. மலேரியா மருந்தான க்ளோரோகுய்நோன் சரிவர செயல்படாததால் (மருந்து செயல்படா தன்மை) தெற்கு வியட்நாமுடனான போரின்போது வடக்கு வியட்நாமின் துருப்புகள் அதிக அளவில் மலேரியாவால் இறந்து போயினர். தென் சீனத்தின் பல பகுதிகளிலும் மலேரியாவின் பாதிப்பு அதிகமாக இருந்ததாலும், வடக்கு வியட்நாம் கேட்டுகொண்டதற்கு இணங்கவும் அப்போதைய சீன அதிபர் சோவ் என்லை அவர்களால் ப்ராஜெக்ட் 523 (May 23, 1967) தொடங்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில், திருமதி டு அவர்கள், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் சீனாவின் ஹெய்னான் மாகாணத்திற்கு, நோயாளிகளை ஆராய்வதற்காக செல்லும்படி பணிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் பீஜிங் பல்கலைகழகத்தில் மருந்தாளுனர் பட்டம் பெற்றிருந்தார். மேலும் மேற்குலக நவீன மருத்துவம் படித்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "சீன பாரம்பரிய மருத்துவ" பயிற்சியையும் முடித்திருந்தார். இளம் தாவர-வேதியியல் அறிஞர்களையும், மருந்தியல் அறிஞர்களையும் உள்ளடக்கிய ப்ராஜெக்ட் 523 அதுவரை ஏதும் சிறப்பான மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், அவர்களின் பார்வை சீன பாரம்பரிய மருத்துவ முறையை நோக்கி விழுந்தது.



படம் 1: ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) தாவரம்.

தற்பொழுதைய மலேரிய தடுப்பு மருந்து உருவாக்கம்

முதலில் சுமார் 2000 தாவர சாறுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன, அதில் 640 மட்டுமே மலேரியாவிற்கு எதிரான செயலபாடுகளை காட்டின. அடுத்த கட்டமாக 200 தாவரங்களில் இருந்து பெறப்பட்ட 380 சாறுகள் சுண்டெலிகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிராக செயல்படுகிறதா என் சோதனை செய்யப்பட்டன. ஆனால் இம்முறையும் அவர்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைக்கவில்லை. ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) மலேரியா எதிர்ப்பு செயல்பாட்டை காட்டிய போதிலும், ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ ஏடுகளில் கொடுக்கப்பட்டுள்ளது போல சிறப்பானதாக இல்லை. அப்போது அவர், மனம் தளராமல் மீண்டும் அந்த மருத்துவ புத்தகத்தை வாசிக்கத தொடங்கினார். ஆழமாக வாசித்த போது ஓன்று புரிந்தது, அது சாறு எடுக்கும் முறையில் உபயோகப்படுத்தும் வெப்பத்தின் அளவை மாற்றம் செய்யலாம் என்பதே. அதிக வெப்பத்தினால், சாறு எடுக்கும் போது சில முக்கிய வேதிபொருட்கள் சிதைவடைய வாய்ப்பு இருப்பதாக கருதினார். அதனால் மீண்டும், அவ்வாய்வுகளை குறைந்த வெப்பத்தில் எடுக்கப்பட்ட சாற்றைக் கொண்டு செய்து பார்த்தார். இது அவருக்கு தக்க பலனை தந்தது, ஆம் இம்முறை சிறப்பான செயல்பாடு காணப்பட்டது. மேலும் அது சில பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, மனிதக் குரங்குகளில் சோதனையிடப்பட்டு, உறுதி செய்யப்பட்டது.

1970களில் புதிதாக கண்டறியப்பட்ட மருந்துகளை சோதிக்க தகுந்த வழியமைப்புகள் இல்லை. ஆகவே திருமதி. டு வும் அவரது குழுவினரும் ஒரு தைரியமான முடிவை எடுத்தனர். அவர்கள் அனைவரும் அந்த மருந்தை அருந்தினர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று உறுதியான பின்னரே, மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹுய்னான் மாகாணத்து நோயாளிகளுக்கு வழங்கி சோதித்தனர். எதிர்பார்த்தபடியே, நோய்க்கான அறிகுறிகள் குறைய ஆரம்பித்தன. மருந்து சிறப்பாக செயல்பட தொடங்கியதை உணர்ந்த குழுவினர், அடுத்ததாக அச்சாற்றின் மூலப் பொருட்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கினர். பின்னர் 1972 ஆம் ஆண்டு, 282 மூலக்கூறு எடையுள்ள ஆர்மிசினினை கண்டறிந்தனர். பீஜிங் அருகில் கிடைத்த செடிகளில் அதிக அளவு ஆர்மிசினின் இல்லை, ஆனால் அதுவொரு தேசிய செயல்திட்டம் என்பதால், தேசத்தில் பிற பகுதிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் மூலம் செறிவான ஆர்மிசினின் உள்ள தாவரம் கண்டறியப்பட்டது. பின்னர் மாத்திரையாக உருமாற்றப்பட்டு சோதித்தனர். ஆனால் பழங்காலத்து மாத்திரை உருவாக்கும் எந்திரத்தில் இருந்த சில குறைபாடுகளினால் எதிர்பார்த்த செயல்பாடு கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் கூடுடை மாத்திரைகள் மூலம் சோதித்தனர், இம்முறை சிறப்பான செயல்பாடு கிடைக்கப்பெற்றது. மேலும் அவர்கள் இதை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல, அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது. அதே சமயத்தில், அந்த தாவர சாற்றில் ஆராய்ச்சி செய்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டனர். ஆனால் சீன அறிவியல் கழகம் இவர்களின் ஆராய்ச்சியை அங்கீகரித்தது. பீஜிங்கில் 1981 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு நடத்திய "மலேரியா மருந்துகள்" எனும் ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கத்தில் திருமதி. டு இவ்வாராய்ச்சியைப் பற்றி பேசினார். பின்னர் இக்குழுவினர் அம்மருந்திலிருந்து பல வேதியியல் வழித்தோன்றல்களை உண்டாக்கி அதையும் பரிசோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டனர். அம்மருந்தை உலக சுகாதார மையம் (எசிடி-ஆர்மிசினின் கூட்டு மருந்து) உலக அளவில் அங்கீகரித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் லட்ச கணக்கானோர் இதனால் பயனடைந்தனர். திருமதி டு அவர்களின் கடும் உழைப்பிற்கு பலனாய், தற்பொழுது அவருக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.


படம் 2: மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டின் (2015) மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்கள்.

நாம் உற்று நோக்க வேண்டிய மூன்று விடயங்கள்

1. மேற்கத்திய அறிவியல் படித்தவர்களுக்கு சீன பராம்பரிய மருத்துவ முறை சார்ந்த பயிற்சியை அளித்தது. இது ஒரு சிறந்த முறை. ஏனெனில் ஒரு துறையில் உள்ளவர்கள், மற்றொரு துறையை பற்றி தெரிந்திருக்கும் பொழுதுதான் நிறைய பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். நிறைய துறை அறிஞர்கள் ஒரு புள்ளியில் கூட வேண்டும். அல்லது பல துறைகளையும் ஒரு அறிஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. சீன அரசின் ப்ராஜெக்ட் 523: அந்தத் துறையில் அனுபவம் மிக்க தேசத்தின் அனைத்து அறிஞர்களையும் ஓர் புள்ளியில் நிற்க வைத்தது. அதற்கான நிதி உதவியை தாராளமாக்கியது.

3. திருமதி. டு, எதிர்மறை முடிவுகளை கண்டு தொய்வுராமல், மீண்டும் மீண்டும் பரிசோதித்தது. மேலும் அந்த மருத்துவ ஏடுகளை மீண்டும் தெளிவாக படிக்க முற்பட்டது.

மேற்கண்ட விடயங்கள் நம்மை நம் சித்த மருத்துவத்தை நோக்கி பார்வையை செலுத்தத் தூண்டுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தின் நிலை மற்றும் எதிர்கால பார்வை

நமது சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் போகாமலில்லை. ஆனால் எந்த அளவு? சித்தர்பாடல்களை புரிந்துகொள்வதில் இருந்தே நமக்கு இடர்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தவறாக பொருள்விளக்கம் கொள்ளப்பட்டு பல மருந்துகள் கைவிடப்படுகின்றன அல்லது செயல் திறன் குறைவாக உள்ளன. சித்த மருத்துவ ஆராய்ச்சி இன்னும் ஏட்டளவில்தான் உள்ளன. சித்த மருத்துவ முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டி தேசிய சித்தா கழகத்தில் (சென்னை) இருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு படையெடுக்கின்றனர். ஒரு தேசிய நிறுவனம், தொன்மை வாய்ந்த ஒரு மருத்துவ முறையை ஆராய்ந்து மேற்குலகிற்கு நிரூபிக்க தேவையான அறிவியல் கருவிகளை கொணரக் கூடாதா? மாநிலத்தின், பல்வேறு பல்கலைகழகங்களில் தாவரவேதியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மேற்குலகம் எற்றுக்கொள்ளும்படியான நிரூபணங்களை தரக் கூடிய கருவிகளுக்கு எங்கே போவது? கூட்டு முயற்சி மட்டுமே ஒரு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பை வெளிக்கொணர உதவும், முக்கியமாக நாம் குறைந்த வசதிகளுடன் ஆராயும் போது. பத்து தமிழ் ஆசிரியர்கள், பத்து தாவரவியலாளர்கள், பத்து சித்த மருத்துவர்கள், பத்து வேதியியல் அறிஞர்கள், பத்து உயிர்-வேதியியல் அறிஞர்கள், பத்து நுண்ணுயிர் அறிஞர்கள், பத்து உயிர்-கணினி ஆய்வாளர்கள், பத்து மருந்தியல் அறிஞர்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கு சிறந்த தலைமையை உருவாக்கி, அவர்களுக்கு நல்ல ஊதியமும், அவர்களின் கீழ் பணிபுரியிம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நல்ல கல்வி உதவித்தொகையும், நுண்-அரசியல் அற்ற ஒரு ஆராய்ச்சிகூட சூழலையும், ஆராய்ச்சியாளர்களுக்கு நடுவே போட்டியற்ற ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவுமேயானால், சித்த மருத்துவத்திற்கு வருடத்திற்கு ஒரு நொபெல் பரிசு சாத்தியமே !!!


முனைவர். இர. வினோத்கண்ணன் தேன்மொழி
https://www.facebook.com/vinothkannan.ravichandiran 

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இயற்கை மருத்துவத்திற்கு கிடைத்த நொபெல் பரிசு

ஒரு மழைக்கால மாலை நேரத்தில், மண்ணில் உள்ள நுண்ணுயிர் கூட்டம் கொடுத்த நறுமணத்தினூடே அம்மண்ணில் சிறுகுழந்தைகள் விளையாட விருப்புவது இயல்பான ஒன்றுதான். அப்படி விளையாடிய பின் மறுநாள் அந்த குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம், பெற்றோர்களோ அதனை மிகவும் எளிதாய் எடுத்துக்கொண்டு அப்பிரச்சினையை வேறுகோணத்தில் அணுகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அக்குழந்தைக்கு இடையூறு அதிகமாகி எதை உண்டாலும் செரிமானமின்றி அப்படியே வெளியேறி, வெளியேறும் பாதைகளில் எரிச்சலையும் கொடுத்து பின் வெளிவரும் கழிவில் சிறு புழுக்களும் தென்படவும் வாய்ப்பிருக்கிறது. புழுதானே என்று இதற்கும் அப்பெற்றோர்கள் நினைப்பார்களாயின் அது பெரிய விளைவை உண்டாக்கும் பொழுதுதான் அறிவார்கள் அது சாதாரண புழுவல்ல, ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த, உயிரை உருக்கிக் கொல்லும், உருளைப்புழுக்களென்று.

அனைத்துவகையான ஓட்டுண்ணி புழுக்களும், இந்த வகையான இடையூறுகளை ஏற்படுத்தாவிட்டாலும் சிலவகை புழுக்களான நெகாடர் அமெரிசானசு, அன்சைகிலோசுட்டமா டியோடினேல் போன்ற புழுக்கள் மிகப்பெரிய பிரச்சினையை மனித சமூகத்திற்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுத்தவல்லது. நம் தமிழ் சமூகத்தால் எளிதாய் பார்க்கப்படும் இம்மாதிரியான ஒட்டுண்ணி உருளை, கொக்கிப்-புழுக்கள் ஏற்படுத்தும் இன்னலானது முதலில் சிறிய துன்பத்தை மட்டுமே கொடுத்தாலும் பின்னர் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்திவிடும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறு, இரத்தசோகை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, எடைகுறைதல் என்று உடலை முழுவதும் சிதைப்பது மட்டுமல்லாது, அறிவு வளர்ச்சியையும் தடைபடுத்தவல்லது. இவ்வொட்டுண்ணி புழுக்களின் முழு வீச்சை, அது ஒரு ஆண்டுக்கு எடுத்துசெல்லும் உயிர்பலியை வைத்து அறிந்துகொள்ளலாம். ஆம், உலக அளவில் ஏறத்தாழ ஆண்டுக்கு 14 மில்லியன் உயிர்களை காவு வாங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த ஒட்டுண்ணி உருளைப் புழுக்களானது, மண்ணில் மிக எளிதாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று. இதனை நுண்ணோக்கியின் உதவியுடன் பார்க்க இயலும். சில வேளைகளில் நம் வெறும் கண்களுக்கு கூட காட்சி கொடுக்கும் அளவுக்கு பெருப்பதும் உண்டு. இப்படிப்பட்ட புழுக்கள் மண்ணிலிருந்து, நம் தோலின் வழியாய் எளிதில் உடலுக்குள் புகுந்துவிடும். மேலும், நீர் மாசுபடுதல், கெட்டுப்போன உணவுப்பொருளை உண்ணுதல், சரியில்லா வாழ்க்கைத்தரம் போன்ற காரணிகளால் மிக எளிதில் அப்புழுக்கள் மனிதர்களின் உடலில் புகுந்துவிடுகிறது.

இந்த ஒட்டுண்ணி உருளைப்புழுக்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு 1970 களில் டிரிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனை. சேப்பல் மற்றும் கிட்டாசேட்டோ கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த முனை. ஒமுரா என்ற இரு நுண்ணுயிரியல் வல்லுனர்கள் தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அவர்களின் முயற்சியாலும், அவர்களுடன் பணியாற்றிய மாணவர்களின் உழைப்பின் விளைவாலும் 1978 ஆம் ஆண்டு ஏவர்மெக்டின் (avermectins) என்ற இயற்கையாய் கிடைக்கப்பெறும் உயிர் வேதிப்பொருளொன்றை கண்டறிந்தனர் [1-4]. இந்த வேதிப்பொருளானது 16 உறுபுகளைக்கொண்ட மிகப்பெரிய லேக்டோன் குடும்பத்தின் வழித்தோன்றலாகும். இது மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரிய நுண்ணுயிரி மூலம் நொதித்தல் மூலம் கிடைக்கப்பெற்ற வேதிப்பொருள் என்பது கூடுதல் தகவல். அதாவது, முனை. ஒமுரா அவர்கள், சப்பானில் உள்ள கிட்டாசேட்டோ கல்விநிறுவனம் அமைந்திருக்கும் கவானா பகுதியிலிருந்து மண்ணை சேகரித்து, அதிலிருந்து ஒருவகை நுண்ணுயிரியை (Streptomyces avermitilis) பிரித்தெடுத்தார், அந்நுண்ணியிரியானது பல்வேறு முறைப்படுத்தப்பட்ட திரவங்கள் நிரப்பட்ட கொள்கலன்களினுள் விடப்பட்ட பொழுது, அந்நுண்ணுயிர்கள் நொதித்தலின் மூலம் உருவாக்கிய பொருட்களே இந்த ஏவர்மெக்டின் என்ற லேக்டோன் குடும்ப வழித்தோன்றிகள். இவ்வேதிப்பொருளானது, சுண்டெலியினுள் செலுத்தப்பட்டு, எந்த வித வீரியமான பக்கவிளைவுகள் இன்றி உருளைப்புழுக்களுக்கெதிராக வேலைசெய்வதை உறுதி செய்தனர். (இந்த ஏவர்மெக்சினின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை வேதிப்பொருள்தான், நாம் எரும்பு மற்றும் சிறு பூச்சிகளைக்கொல்லும் மருந்தாக பயன்படுத்துகிறோம்).

இந்த கண்டுபிடிப்புக்காகத்தான், முனை. சேப்பல் மற்றும் முனை. ஒமுரா என்ற இரு நுண்ணுயிரியல் வல்லுனர்களுக்கும், இந்த ஆண்டின் (2015) மருத்துவத்துக்கான நொபெல் பரிசை கொடுத்திருக்கின்றனர். இவர்களுடன் முனை. யொயொ டு அவர்களும் அப்பரிசினை பகிர்ந்துகொள்கிறார். இவர் ஆர்ட்டிமிசினின் என்ற மலேரியா நோய்க்கான எதிர்ப்பு மருந்தை 1972 ஆம் ஆண்டு மாசிபத்திரி (wormwood - Artemisia absinthium) என தமிழில் வழங்கப்பெறும் [5] மூலிகைச் செடியிலிருந்து பிரித்தெடுத்தார். படம் 1 ல் ஏவர்மெக்டினின், ஆர்ட்டிமிசினின் மூலக்கூறுகளின் வேதிவாய்ப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.


படம் 1. ஏவர்மெக்டின், ஆர்ட்டிமிசினின் மூலக்கூறுகளின் வேதிவாய்ப்பாடு.


இக்கட்டுரையின் முகப்பில் கூறப்பட்டுள்ள மழை ஏற்படுத்தும் மண் நறுமணத்திற்கும், பின் ஏவர்மெக்டின் என்ற உயிர்வேதிப்பொருளை உருவாக்க பயன்படும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. 

இயற்கையே சிறந்த மருந்து:

நான் சிறுவயதாக இருக்கையில் வீட்டிற்கு வரும் நாட்டு மருத்துவர் ஒருவர், வாரம் ஒருமுறை ஞாயிறன்று ஒரு கருப்பு நிற உருண்டையான மாத்திரை ஒன்றைத் தருவார், அதனை வெறும் வயற்றில் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்கிலிருந்து ஆறு முறை கழிவானது புழுக்களுடன் வெளியேறிய பின் குளித்துவிட்டு சாப்பிட சொல்வார். அப்பொழுதைய காலங்களில் நமக்கு, இந்த உருளை, கொக்கிப் புழுக்கள் பெரும் இடையூறுகளை கொடுத்ததில்லை. நாம் அப்படிப்பட்ட இயற்கையான நாட்டுமருந்துகளில் நம் அறிவியல் ஆய்வை செலுத்தியிருந்தால், நாம் நம்மின் மருந்துகளை உலக மருத்துவர்களுக்கு பரிந்துரைத்திருக்கலாம், நம் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலரும் நொபெல் பரிசை பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மலேரியா தடுப்பு மருந்தான ஆர்ட்டிமிசினின் மூலக்கூறை பிரித்தெடுத்த முனை. யொயொ டு அவர்கள் கூட, ‘பல் கூறுகளையும் உள்ளடக்கிய இந்த இயற்கைதான் மருந்து உருவாக்கத்திற்கான ஆரம்பப்புள்ளி’ என்கிறார். நாமும் நம்மின் பண்பாட்டு இயற்கை மருத்துவத்தை மீட்டெடுப்பதற்கான காலம் வந்துவிட்டது என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளல் இன்றியமையாதது.

சுட்டிகள்:

1. http://www.nature.com/news/anti-parasite-drugs-sweep-nobel-prize-in-medicine-2015-1.18507

2. Ōmura, Satoshi; Shiomi, Kazuro (2007). "Discovery, chemistry, and chemical biology of microbial products". Pure and Applied Chemistry 79 (4).doi:10.1351/pac200779040581.

3. Ikeda, H.; Nonomiya, T.; Usami, M.; Ohta, T.; Omura, S. (1999). "Organization of the biosynthetic gene cluster for the polyketide anthelmintic macrolide avermectin in Streptomyces avermitilis". Proceedings of the National Academy of Sciences 96(17): 9509.

4. Burg, R. W.; Miller, B. M.; Baker, E. E.; Birnbaum, J.; Currie, S. A.; Hartman, R.; Kong, Y.-L.; Monaghan, R. L.; Olson, G.; Putter, I.; Tunac, J. B.; Wallick, H.; Stapley, E. O.; Oiwa, R.; Omura, S. (1979). "Avermectins, New Family of Potent Anthelmintic Agents: Producing Organism and Fermentation". Antimicrobial Agents and Chemotherapy 15 (3): 361. doi:10.1128/AAC.15.3.361.

5.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

சக்திவேல்