வியாழன், 24 அக்டோபர், 2019

தமிழில் அறிவியல்

ஒருவரின் எண்ண வெளிப்பாடுகளை அறிவு-சார், உணர்வு-சார் என்று பொத்தாம் பொதுவாக பிரிப்பது நம்முடைய நடைமுறை. ஒரு செயல், அறிவியலுக்கு ஒவ்வாதவையாகவோ, தம்முடைய எண்ணஓட்டத்திற்குள் அடங்காதவையாகவோ இருந்தால் அச்செயலை உணர்வு-சார் பெட்டிக்குள் அடைத்துவிடுவது நம் பழக்கம். அப்படி உணர்வு-சார் செய்கைகளெல்லாம் அறிவுசார்ந்து இருப்பதில்லையா எனக்கேட்டால், இல்லை என்பதே பெருப்பாலானவர்களின் பதிலாக இருக்கக்கூடும்.

இப்படியாய் நாம் புரிதலற்று பொத்தாம் பொதுவாய் உணர்வு-சார் பெட்டிக்குள் மட்டுமே காலம்காலமாய் அடக்கிவைத்த ஒன்றுதான் மொழி. தம் தாய்மொழியைப் பற்றி யாரேனும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்துவிட்டால் போதும், அவர் அன்றிலிருந்து வெறும் அறிவற்ற வெற்று மொழி உணர்வாளர் என்றளவிலேயே மதிக்கப்படுவர். தாய்மொழி என்பது வெறுமனே ஒருவனின் உணர்வு மட்டுமல்ல, அஃது ஒருவனின் மண்சார்ந்த வாழ்வியலை, பண்பை, இயல்பை, கோபத்தை,  கலையியலை, இறையியலை, கற்பியலை, கல்வியை இன்னும் பலவற்றை பறைசாற்றும் ஒரு சாளரம். அப்படியாயின், அந்த சாளரம் அறிவற்றோ, அறிவுக்கு புறம்பாகவோ, அறிவை முற்றிலும் சாராமலோ இயங்க வாய்ப்பே இல்லை.

அறிவின் களஞ்சியம்தான் மொழி. தான் பெற்ற தனியறிவை, மற்றவர்களுக்கு பயன்படும் பொது அறிவாய் மாற்ற இங்கு மொழியென்ற மிகப்பெரிய அறிவு ஆயுதம் இன்றியமையாதது. அப்படி ஆயுதம் ஏந்திய இந்த மொழித்தீவிரவாதியை விருது கொடுத்து தட்டிக்கொடுத்திருக்கிறது கொரிய தமிழ்ச் சங்கம் (KTS).

நான் பெறும் முதல் 'தமிழ்' விருது இது. நான் இதுவரை அறிவியல் ஆய்விற்காக பெற்ற விருதுகள் அனைத்திற்கும் தலையாய விருது இது என்று கூறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழகத் தமிழர்களை விட மூன்றரை மணிநேரம் முன்பே கதிரவனை சுற்றித்திரிந்துகொண்டிருக்கும் கொரிய வாழ் தமிழ் நண்பர்களுக்கும், என்னை இவ்விருதுக்காக வழிமொழிந்த நண்பர்களுக்கும், தமிழிற்கும் எனது நனிமிகு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

-சக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக