வியாழன், 10 ஜூன், 2021

தடுப்பூசி அறிவியலும், போர்ச்சூழலும்..



என்ன ஒற்றரே பல நாட்களாக தங்களை காணவில்லையே.. என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்..

என்னத்த சொல்ல நெடுஞ்செழிய மாமன்னனே, உங்கள் மீது எதிரி நாடு படையெடுத்து வரப்போகிறான்..
அப்படியா..
ஆமாம் மாமன்னா.. ஆனால் அவர்கள் இங்கு வந்து சேர இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அரசனுக்கு கையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.. எதிரி நாட்டுப்படை நினைத்தபடி நடந்துவிட்டால், நம் மக்கள் அடியோடு அழிக்கப்படுவார்களே என்ற அய்யம் அரசனுக்கு.
நாட்டின் மக்கள் மீது அன்பு கொண்ட அரசனாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நினைக்கிறார் அரசன்..
ஆனால் தன் படைகளை பார்வையிட சென்றபின்தான் அறிந்தார், இங்கு முன்களத்தில் களமாட தகுதியான குதிரைகள், யானைகள், ஆயுதங்கள், போர் வீரர்கள் யாரும் போதுமானதாக இல்லை..
பலரிடம் கலந்தாய்ந்து சில முடிவுகளை எடுக்கிறார் அரசன்.. அது மிக முக்கியமான திட்டங்கள்..
திட்டம் 1: நம்நாடு நோக்கி வரும் எதிரி நாட்டு படைகள் எங்கேனும் ஓய்வெடுப்பார்கள், அவர்களில் சிலரை நம் குதிரைப்படையை அனுப்பி கடத்திவருவது.. கடத்திவரப்பட்ட சில வீரர்களை எதிர்த்து நம் வீர்ர்களை போர்புரிய செய்வது.. இதன் மூலம் நம் வீரர்கள் எதிரிகளின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பெரும்படைவரும்பொழுது எளிதில் தாக்க ஏதுவாக இருக்கும்..
திட்டம் 2: எதிரி நாட்டு படைகள் போல ஒரு படையை செட்டப் செய்து அவர்களின் போர் தந்திரங்களையும் கொண்டு நம் வீரர்களோடு போர் புரிய வைப்பது.. இதனால் நம் வீரர்களுக்கு, எப்படி அந்த எதிரி நாட்டு வீரர்கள் போர் புரிவார்கள் என்று தெரிந்துவிடும்.. எதிரி நாட்டு படை வரும்பொழுது துவம்சம் செய்துவிடுவார்கள்..
திட்டம் 3: எதிரி நாட்டு படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை, நாட்டின் திருடர்களை வைத்து கவர்ந்துவரசொல்வது.. கவர்ந்துவந்த ஆயுதங்களைக்கொண்டு நம் வீரர்களைவைத்தே நம் ஆயுதங்களுடன் இருக்கும் நம் வீரர்களை போராடவைத்து பயிற்சி கொடுப்பது.. இதனால் அயுதங்களின் பலமறிந்து எதிர்த்து நிற்க நம் வீரர்களுக்கு பயிற்சி கிடைக்கும்..
திட்டம் 4: எதிரி நாட்டு வீரர்களுக்கு ஆயுதம் செய்யும் கொல்லரை கடத்திவருவது.. அவரை வைத்து நம் உலோகங்களைக்கொண்டு கேடயங்களையும் ஆயுதங்களையும் செய்து வாங்குவது.. இதன்மூலம் நம் வீரர்கள் எதிர் நாட்டு வீரர்களின் ஆயுதங்களுக்கு பதிலடி கொடுக்கவல்ல ஆயுதங்களை பெற்றிருப்பார்கள்..
மொத்தத்தில் ஏதேனும் ஒரு திட்டத்தை நிகழ செய்து, நம் வீரர்களை உருவாக்கி, அவர்களை ஊர் எல்லையில் பல பெரிய பெரிய குதிரை சிலைகளை நிறுவி அதனுள் ஒளித்துவைப்பது..
இதுதான் திட்டம்..
அருகிலிருந்த அமைச்சர், என்ன கதை அளக்கிறீர்கள் தமிழ்நாட்டின் தலைமகனே.. ஏதும் கனவு கினவு கண்டீரோ.. நாங்கள் இந்த தொற்றை எதிர்கொள்ள உங்களிடம் ஐடியா கேட்டால் இப்படி ஏதோ உளறுகிறீர்கள்..
ஏது நான் உளறுகிறேனா.. யோவ் இவ்ளோநேரம் நான் என்ன சொன்னன்னு நெனச்ச.. தடுப்பூசிய பத்திதான் பேசிகிட்டு இருந்தேன்..
என்ன சொல்றீங்க..
ஆமா.. முதல் திட்டம் எதிரிகளில் சிலரை கடத்திவந்து நம்மவர்களுடன் போரிட வைத்து நம்மவர்களை திடமாக்குவது - Covaxin (கோவேக்சின்) மற்றும் sinovac (சினோவேக்) - ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட கொரனா மாதிரி வைரஸ்களை, மலடாக்கி உட்செலுத்துதல்.. இதனால் நம் உடல் கோவிடிற்கி (COVID) எதிராக போராடும் ஆற்றலை பெறும்..
இரண்டாவது திட்டம் நம் வீரர்களையே அவர்களைப்போல் செட்டப் செய்வது - கோவிஷீல்ட் (Covishild) மற்றும் ஸ்புட்னிக் (Sputnik).. இதில் வைரசின் உட்பொருட்களை வேறு ஒரு பொது வைரசின் உடலுள் வைத்து, நம் உடலில் செலுத்துவது.. இதனால் நம் எதிர்ப்பாற்றல் தூண்டப்படும்..
மூன்றாவது திட்டம், எதிரி நாட்டு வீரர்களின் ஆயுதத்தை அறிதல் மூலம் அவர்களுக்கு எதிரான பலத்தை உருவாக்குதல்.. அதாவது வைரசின் முதன்மை ஆயுதமான ஸ்பைக் புரதத்தை இரத்தத்தில் செலுத்துவது.. வைரசின் மீது இருக்கும் இந்த ஸ்பைக் புரதம்தான் மனித செல்லிற்குள் வைரசை எடுத்துச்செல்லும் சாவி.. அதனை முன்பே தனியாக இரத்தத்தில் கலக்கவிடுவதால் அதனை குறிப்பாக தாக்கும் ஏவுகணைகளை நம் உடல் பெற்றுவிடும்.. அப்புறம் என்ன, வைரஸ் வரும்பொழுது தடபுடலாக விருந்து வைத்து நரகத்திற்கு அனுப்பிவிடும்.. அந்த வேலையை செய்வதற்கு நோவவேக்ஸ் (Novavax) அல்லது கொவவேக்ஸ் (Covavax) இருக்கிறது.
நான்காவது திட்டம், சற்று மாறுபட்டது.. எதிரிக்கு ஆயுதம் செய்துகொடுக்கும் கொல்லரை கொணர்ந்து ஆயுத தயாரிப்பு பயிற்சி பெறுதல்.. Pfizer, Moderna போன்ற தடுப்பூசிகள்.. இது m-RNAவை (messanger RNA) உட்செலுத்தும் முறையாகும்.. அது உடலினுள் சென்று ஸ்பைக் புரதத்தை உற்பத்தி செய்யும்.. இதனால் நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை எளிதில் நம் உடல் பெற்றுவிடும்.. பின்ன என்ன, வைரஸ் உள்ளே வந்தா ஊஊஊ தான்..
ஆகா அருமை அருமை.. ஆனால் அந்த பெரிய குதிரை சிலைகளுள் பயிற்சிபெற்ற வீரர்களை அனைவரையும் அடைத்துவைப்பதாக கூறினீர்களே.. அது என்ன..
அது ஒன்றுமில்லை.. ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan horse).. அதாவது எதிரி நாட்டுப்படை நம் நாட்டினுள் நுழைந்தபின், அவர்களுக்கான பதிலடி கிடைக்குமென தெரிந்திருக்காது.. அந்த நேரத்தில் அந்த குதிரை சிலைகளை உடைத்து நம் பயிற்சி பெற்ற வீரர்கள் வெளிவந்து திடீரென போர் புரிவார்கள்.. அந்த திடீர் தாக்குதலுக்கு எதிரிகள் நிலைகுலைந்து போவார்கள்..
ச்சோ ஸ்வீட்.. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்கள் குறிப்பிட்ட தடுப்பூசிகளில் எது சிறந்தது..?
எது நமக்கு கிடைக்கிறதோ, அதுவே சிறந்தது.. அதனால் மக்கள் எதற்காகவும் காத்திருக்காமல் கிடைக்கும் தடுப்பூசியை பெறுவது முக்கியம்..
-சகா..
06/06/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக