வியாழன், 10 ஜூன், 2021

மின்மினியுடன் ஒரு உரையாடல் # 1 (How to teach science to your stars?)


தென்னங்காற்று சிலுசிலுவென மேனியை முத்தமிட்டு சென்றுகொண்டிருந்தது.. கும் இருட்டு.. சென்ற வாரம் இறந்துபோன அந்த முக்கத்து வீட்டுப் பெண், வெள்ளை வெளேரென்று புடவை கட்டிக்கொண்டு வந்து நின்றாலும் அந்த இருட்டில் தெரிவதிற்கில்லை.. அப்படி ஒரு இருட்டு.

பல்லாயிரக் கணக்கான மின்மினிகள் வானத்தில் பறப்பது போல விண்மீன்கள் வீற்றிருந்தன.. மின்மினிகளின் வெளிச்சம் ஒரு நாளும் நிழலைக் கொடுத்ததில்லை.. இல்லையேல் அந்நிழலைக் கண்கள் கண்டதில்லை..
கொட்டாங்கச்சி ஓட்டை வழியாக, அப்பாவிடம் அடிவாங்கி ராப்பகலாய் கண்ணயர்ந்து திரித்து உருவாக்கப்பட்ட தேங்காய் நார் கயிற்றால் வேயப்பட்ட கட்டிலின் மீது, நார் பிசிறுகள் தென்றல் முத்தமிடும் மேனியை சீண்டாமலிருக்க சற்றே தடிமனான சமுக்காலத்தை போட்டு, ஒற்றை தலையணையின் மீது பின்மண்டையை, அவதாரில் சடையை குதிரை பிடரியுடன் பொருத்துவது போல அழுத்திவிட்டு, கண்களும் கண்கள் வழி மூளையும் அந்த மின்மினிகள் மீது வீழ்ந்துகிடந்தன..
என்னையா இந்த இயற்கை, இப்படியான அழகை எப்படி அது உருவாக்கியிருக்க முடியும் என்றவாறான நியூட்ரான்களின் இடப்பெயர்ச்சிகளால் கிரங்கடிக்கப்பட்டு எண்ணத்தை பல வண்ணங்களாக வானின் மீது சிதறடித்துக்கொண்டிருந்தான் அந்த சிறுவன்...
இயற்கையா கடவுளா என்றொரு பெரும் கேள்வி அவனுள்.. கடவுள் என்று நம்புபவர்களுக்கு அவனிடையே ஒற்றை கேள்வி இருந்தது.. அந்த கடவுளை உருவாக்கியது யார் என்பதே அது..!
அது எளிமையான கேள்வியும் கூட.. அந்த கேள்வியினால் அவனை ஒரு நாத்திகவாதியாக அந்த மின்மினிகள் நினைத்துவிடவில்லை.. மாறாக அவனிடம் மிகவும் எளிமையாக உரையாடிக்கொண்டிருந்தன அவைகள்..
நீ கடவுளை யார் உருவாக்கினார் எனக் கேட்கிறாய், இது எப்படி இருக்கிறதென்றால் உன் தாத்தாவின் தாத்தா பெயரை கேட்பது போல இருக்கிறது... உனக்கு அவரின் பெயரோ, அவரைப்பற்றியோ தெரியுமா என்ன..
எளிதில் கேள்வி அம்பை எய்தவனுக்கு, மின்மினி எய்த எதிர் அம்புகளை எதிர்கொள்ள தயங்கிப்போனான் சிறுவன்..
சற்றே விழி பிதுங்க தன் வியாக்யானத்தை எடுத்துரைக்க முற்படுகிறான் அவன்.. உனக்கு பெருவெடிப்பு தெரியும் தானே..
என்ன வெடிப்பு அது.. நீங்கள் நிகழ்த்திய உலகப்போரில் வெடித்த வெடிப்புகளை விட என்ன பெரிய வெடிப்பு...
அது பல கோடி ஆண்டுக்கு முன் நிகழ்ந்த ஒன்று.. அந்த பெரு வெடிப்பிலிருந்து வெளிவந்த தீப்பொறிகள்தானே நீங்களெல்லாம்..
அதை மின்மினிகள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.. நாங்கள் கடவுள்கள் கைப்பட கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணை திரட்டுகள் என்றே சொல்லிக்கொள்ள விருப்பப்பட்டன.. ஆனால் அவற்றுக்கான சாட்சி எதுவும் அவைகளிடம் இல்லை..
ஆனால் மின்மினிகளைவிட பல லட்சம் கோடி அளவுக்கு சிறிய அந்த மனிதனின் மூளை சில அறிவியல் துணைகொண்ட பதில்களை வைத்திருந்தது..
பெரு வெடிப்பில் நீங்கள் பிறந்தவுடன் சிறியதாகத்தான் இருந்திருந்தீர்கள்.. பூ தெரியுமா உங்களுக்கு.. அந்த பூவின் உள் கட்டமைப்புகளை கண்டிருக்கிறீர்களா.. அது போலத்தான் நீங்கள்.. ஒரு விதையிலிருந்து வெடித்துவரும் செடியில் முளைக்கும் மொட்டு இருக்கிறதே, அதிலேயே அந்த பூவின் உட்கட்டமைப்பு இருந்திருக்கும்.. பூ பெருக்க, பெருக்க அதன் உள் அமைப்புகள் விரிந்து அழகாகுமே.. அது போலத்தான். நீங்களும் பெரு வெடிப்பில் பிறந்து பின் பெருத்தீர்கள்..
நீ நாத்திகன்தான்... புரிந்துவிட்டது..
ஹஹ.. அது சரி.. உனக்கு E = mc2 தெரியுமா!
அது என்ன எழவோ, எனக்கு தெரியாது..
அது ஒன்றுமில்லை, ஆற்றலானது நிறையுடன் நேரடித் தொடரிபில் இருக்கும்.. நிறை கூட கூட, ஆற்றல் அதிகமாகும்.. இல்லையேல் ஆற்றல் அதிகமாக அதிகமாக நிறை அதிகரிக்கும்..
புரியலையே..
ஒரு 10 கிராம் மற்றும் 10 கிலோகிராம் எடை கொண்ட இரு பந்துகளை எடுத்துக்கொள்ளலாம், அதனை ஒத்த திசைவேகத்தில் ஒரு சுவற்றின் மீது அடித்தால் என்ன நிகழும்...
இது நேத்து பொறந்த புது மின்மினிக்கே தெரியுமே.. 10 கிலோகிராம் பந்து பட்ட இடத்தில் பாதிப்பு அதிகமிருக்கும்..
அதேதான்.. நிறை கூடும்பொழுது ஆற்றல் அதிகமாகிறது..
இதுதான் அந்த எழவு அறிவியலா.. நல்லாருக்கே. எங்கே இன்னும் கொஞ்சம் சொல்லேன்..
பெருவெடிப்பு நிகழ்ந்த மாத்திரத்தில் உருவான நெருப்பு குழந்தைகள், அவர்களின் நிறை மற்றும் திசைவேகத்தை பொறுத்து ஆங்காங்கே சிதறுண்டனர்.. அப்படி சிதறுகையில் ஆங்காங்கே உருவாகியிருந்த கருந்துளை ஏற்படுத்தியிருந்த வளைவுகளுள் வீழ்ந்தனர்..
இந்தபாத்தியா. அறிவியலில் புரியாத கெட்டவார்த்தைகள் அதிகம். இதுக்குத்தான் கடவுளென்ற ஒற்றை சொல்லோடு கடந்துவிடுவதை விரும்புகிறேன்..
எளிமையாக சொல்கிறேன்.. ஒரு பெரிய புடவையை நான்கு பக்கங்களையும் இறுக்கமாக கட்டிவிடு.. இப்பொழுது ஒரு பெரும் குழி ஒன்றை நடுவில் உருவாக்கிவிட்டு, நான்கைந்து கோள உருண்டைகளை அந்த புடவைக்குள் தூக்கி எறிந்தால் என்னவாகும்..?
அனைத்து கோள உருண்டைகளும் அந்த பெருங்குழி உருவாக்கிய வளைவுகளுக்குதான் செல்லும்..
சரியாக சொன்னாய்.. இப்பொழுது, இரண்டு பெரிய கோள உருண்டைகளையும் பத்து சிறிய உருண்டைகளையும் தூக்கி எறிந்தால் என்னவாகும்..
அனைத்தும் அந்த பெருங்குழி உருவாக்கிய வளைவுக்குள்தான் செல்லும்.. அதே வேளை இரண்டு பெரும் கோள உருண்டைகள் என்பதால் அவைகளும் அவைகளின் எடைகளுக்கு தகுந்த வளைவுகளை உருவாக்கும், அந்த வளைவுகளுக்கு மிக அருகில் எந்தெந்த சிறு கோள உருண்டைகள் செல்கின்றனவோ அவைகளனைத்தும் அந்த வளைவுகளால் உள்ளிழுக்கப்படும்..
அட இதுதான் அறிவியல்.. பெரு வெடிப்பில் உருவான பிள்ளைகள் சிதறுண்டு, அவரவர் நிறைக்கு தகுந்தார் போல ஆற்றலை வெளிப்படுத்தி, space fabricல் சிறு சிறு வளைவுகளை ஏற்படுத்த, அந்த வளைவுக்கு அருகாமையில் உள்ள சிறு சிறு பிள்ளைகள் உள்ளிழுக்கப்பட்டன.. இதற்கு பெயர்தான் ஈர்ப்பு விசை.. இப்படித்தான் கதிரவன் என்றொரு மின்மினி உருவாக அதன் அதீத நிறையால் உருவான குழி அருகிலிருந்த எட்டு கோள்களையும் உள்ளிழுக்க, அந்த ஒவ்வொரு கோள்களும் அவரவர்கள் நிறைக்கு தகுந்தாற்போல மேலும் space fabricல் வளைவுகளை உருவாக்க, அதனுள் வீழ்ந்தன இந்த துணைக் கோள்கள்..
அடடடா.. இது தெரியாம இருந்துட்டேனே... ஆனா ஒரு சந்தேகம்.. அதென்ன சில வேளைகளில் நிறை என்றும், சில வேளைகளில் எடை என்றும் குறப்பிடுகிறாய்.. ஒற்றை சொல்லில் குறிப்பிட்டால் என்னவாம்.. இதற்குதான் இந்த அறிவியலாளர்களை பிடிப்பதில்லை..
அட அன்பு மின்மினியே, எடை ஈர்ப்புவிசைக்கு உட்பட்டது நிறை அப்படியல்ல.. எங்கும் நிறை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.. மீண்டும் ஒருமுறை நான் சொன்னவற்றை நினைத்துப்பார், எங்கெங்கு எடை நிறையானது என்பதை..
ஓ.. இதுல இவ்ளோ செய்தி இருக்கா..
இது மட்டுமல்ல.. நீங்களெல்லாம் மின்மினிகள்.. உங்களிடம் வேதிவினைபுரிந்து எரியும் வேதி பொருட்கள் இருக்கின்றன.. அதாவது எரி பொருட்கள்.. அதனால்தான் ஒளி கொடுக்கிறீர்கள் நீங்கள்... கதிரவனை எடுத்துக்கொண்டால், அதில் ஹைட்ரஜன் வாயு அதிகமாக இருக்கிறது.. இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் உருவாவது மூலமாக கதிரவன் எங்களுக்கு கதிர்களை ஏவி விடுகிறான்..
அந்த கதிரவன் அண்ணன் எரிந்து கொண்டேதான் இருப்பாரா கடைசி வரையில்..
ஒரு வேளையில் அனைத்து எரிபொருளும் தீர்ந்துபோகும் அப்பொழுது அனைத்து ஹைட்ரஜனும் ஹிலியமாக மாறும்.. ஹைட்ரஜனைவிட ஹீலியம் பருத்த ஆள் என்பதால், கதிரவனின் விட்டம் பெருக்கும், புதனின் சுற்றுவட்டபாதை வரைகூட வரலாம்.. அப்படி பெருக்கையில் பூமியில் வெப்பம் அதிகமாகும்.. பின் அந்த மின்மினி முற்றிலுமாக அழிந்து கருந்துளையாக மாறும் வாய்ப்பிருக்கிறது.. கருந்துளைக்கு ஈர்ப்புவிசை அதிகம், நிறை அதிகரிப்பால்.. எனவே அனைத்து கோள்களையும் உள்ளிழுக்கும் ஆபத்து ஏற்படலாம்.. ஆனால் கிதிரவன் கருந்துளையாக மாறும் அளவுக்கு அதற்கு ஆற்றல் இல்லை என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.. இருந்தாலும் என்றோ ஒரு நாள் கதிரவன் அழிவான்.. அவனின் எரிபொருள் ஒருநாள் இல்லை ஒரு நாள் முடியதானே செய்யும்..
அப்டினா, ஏன் அங்கே படுத்துக்கொண்டு கதை அளந்துகொண்டிருக்கிறாய், ஒரு ராக்கெட் எடுத்து செயற்கைகோள் மூலமாக எங்காவது போய்விடவேண்டிதானே..
ஹஹ... அது நடக்க பல கோடி ஆண்டுகள் ஆகும்.. இருந்தாலும் நாங்கள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம், ஏதேனும் மற்ற மின்மினி குடும்பத்திலுள்ள கோள்களில் உயிர் வாழ முடியுமா என்று...
என்னது, அப்ப எல்லா கோள்களிலும் உயிர் வாழ முடியாதா..
முடியாது.. உயிர் வாழவென ஒரு சூழல் வேண்டும்..
அதென்ன சூசல்.. சாரி, சூழல்..
பூமி, பெருவெடிப்பிலிருந்து சுகப்பிரசவத்தில் பிறந்து வந்த பிறகு, இங்கு வெறுமனே பாறைகளும், நெருப்பும்தான். பின் பலமுறை வால்நட்சத்திரங்கள் படையெடுக்கவே, நீர் கட்டிகள் இடம்பெயற, பின் அமிலக் குளங்கள் உருவாகின.. பல இடி மின்னல்கள் தாக்குதலால், அமிலக்குளங்களில் இருந்த நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன், ஆக்ஸிஜன் அனைத்தும் சேர்ந்து அமினோ அமிலங்கள் உருவாகி பின் அதிலிருந்து ஒரு செல் உயிரிகள் தோன்றி, பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவாகினான்.. இது நேரம், காலநிலை என பல கூறுகள் ஒரே நேர்கோட்டில் அமைந்ததால் ஏற்பட்ட விளைவு.. இதே விளைவு வேறு எங்கும் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறியே..
அய்யடா.. தம்மாதுண்டு அறிவ வச்சி வளரவும் செய்றீங்க, உங்கள நீங்களே அழிச்சிக்கவும் செய்றீங்க... ஏதோ நாங்கள் மின்மினிகளாக பிறந்தோம்.. மனிதர்களாக பிறந்திருந்தால் எவ்வளவு பிரச்சினைகள்...
அத விடு.. உனக்கு பீட்டல் ஜூஸ் (Betelguese) தெரியுமா..
பீட்ரூட் ஜூஸ் தெரியும்.. அதென்ன அந்த பீடா ஜூஸ்..
பீடா இல்ல மின்மினி.. அது பீட்டல் ஜூஸ். அதுவும் உன்னைப் போலொரு மின்மினிதான்.. அதற்கு திருவாதிரை என்றொரு பெயரும் உண்டு..
மே பி.. மே பி.. எனக்கு ஒன்னுவிட்ட தம்பியா இருக்காலாம்.. ஏன்னா நாங்க ஒரே சாதிதான..
கொடும.. நீயும் சாதியப் பத்தியேதான் பேசுறியா..
எல்லாம் உங்கள பாத்து கத்துகிட்டதுதான்.. ஆமா, நீ பேசுறது ஏன் எனக்கு ரொம்ப லேட்டாவே கேக்குது..
நீ பேசுவதும் எனக்கு நேரம் கடந்துதான் கேட்கிறது.. ஏனென்றால் நீ பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறாய்..
அதென்ன ஒளிக்கு ஆண்டு.. பைத்தியக்காரனுங்கடா நீங்க..
அவசரப்பட்டு மனிதர்களைப்போல தவறான சொற்களை நட்டுவிடாதே. அப்புறம் மகசூலும் அதேதான் கிடைக்கும் உனக்கு..
கோவிக்காம, பதில சொல்லுங்க ஏட்டய்யா..
ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தொலைவு, ஒரு ஒளியாண்டு.. எடுத்துக்காட்டாக, நீ பத்து ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறாய் என வைத்துக்கொண்டால், நீ இப்பொழுது உமிழும் ஒளி பத்து ஆண்டுகள் கழித்துதான் எனக்கு வந்தடையும்.. அப்படியானால் ஒலி இன்னும் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்.. ஏனெனில் ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிக்கும்.. ஆனால் ஒலி, ஒளி போன்றல்ல, அதற்கு ஒரு ஊடு பொருள் வேண்டும்.. அதாவது கடத்தி.. பெருவெடிப்பு கூட மியூட் செய்யப்பட்ட பாடல் காட்சிபோலத்தான் நடனமாடியிருக்கும் அந்தரத்தில்..
அப்பறம் நாம எப்படி...
எட்டு கட்டங்களில் உச்சம் பெற்ற ஒருவன் பல கோடி ஓளியாண்டில் உள்ள மின்மினியிடம் போன் இல்லாமலும் பேசலாம்.. சரி அத விடு.. அந்த திருவாதிரைக்கு வருகிறேன்..
ஆமாமா.. மறந்துட்டேன்.. சொல்லு சொல்லு..
திருவாதிரை தற்பொழுது இல்லை.. அது கருந்துளையாக மாறிவிட்டது.. இருந்தும் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டேதான் இருக்கிறது.. இன்னும் சில நூறு கோடி ஆண்டுகள் கிடைக்குமாம்.. என்னே அறிவியலின் விந்தை பார்த்தாயா மின்மினி..
ஆமாம்.. ஒரு கேள்வி கேட்கலாமா உன்னிடம்..
அப்கோர்ஸ்.. ஒய் நாட்..
பெரு வெடிப்பு என்று சொன்னாயல்லவா, அந்த பெருவெடிப்புக்கு முன் உலகம் எப்படி இருந்தது.. பெரு வெடிப்பு எதற்காக நிகழ வேண்டும்.. முதல் அணுவின் பருப்பொருட்கள் உருவானது எப்படி..
அவ்..... கேட்டுபுட்டியே இப்படி ஒரு கேள்விய.. இதற்கு கடவுளென ஒற்றை சொல்லைக்கொண்டோ, இயற்கை என்று சொல்லியோ, இயற்கைதான் கடவுள் என்றோ சமாளித்துவிடலாம்.. ஆனால் அறிவியல் அப்படி சொல்லிக்கொடுக்கவில்லை.. பெருவெடிப்பின் காரணமோ, பெரு வெடிப்பிற்கு முந்தைய நிலையையோ அறியும் அளவுக்கு நாம் இன்னும் அறிவியலை வளர்த்தெடுக்கவில்லை.. உன் கேள்விக்கான பதிலை அறிவியல் என்றாவது ஒரு நாள் கொடுக்கும்.. நம்பிக்கையின் அடிப்படையிலானது இல்லை அறிவியல், சட்டென பதிலை கொடுத்துவிட.. அஃது ஆய்வுகளையும், முகாந்திரங்களையும், காரணிகளையும், நிரூபணங்களையும் அடிப்படையாகக் கொண்டது..
ஆகா.. நல்லா சமாளிக்குற.. இருந்தாலும் அறிவியலில் ஏதோ இருக்கிறது என்றே நினைக்கிறேன்.. யாரோ உன்னை கூப்புடுற மாதிரி இருக்கே..
ஆமாம். அப்பா கூப்புடுறாங்க.. நாளைக்கு திருவாதிரை திருவிழா.. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு இன்று இரவே செல்லவேண்டும்.. நாளைக்கு இரவு சந்திக்கலாம்..
டேய்டேய்.. இப்பதான் திருவாதிரை செத்து போச்சின்ன..
........... (சிறுவன் கயிற்று கட்டிலிலிருந்து எழுத்து சத்தமின்றி நடக்கத் தொடங்குகிறான்..)
-சகா..
04/05/2021


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக