புதன், 7 ஜனவரி, 2015

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்:



சக்திக்கு விதையாகி கொஞ்சம்
முற்றினாலும் வினையாகி
உயிர்பறிக்கும் உயிர்ப்பொருளே
உனதுகதை எழுதப் போறேன்...

ஆறுபங்கு கார்பனும். அதின்
இருமடங்கு ஹைட்ரஜனும்
பிணையப்போக... கார்பனோடே
நானிருப்பெனென கலந்துவிடும்
ஆக்சிஜனும்... .மொத்தமாய் முடிச்சிட்ட
மூலக்கூறே குளுக்கோசு.... இதை
சர்க்கரையென சமூகம் சொல்லும்....

அவனின்றி ஓரணுவும் அசையாததை
அறிவியலில் உட்புகுத்தி ஆராய்ந்தால்
இங்கு அவனென்பது இவனாகும்
ஆக.. ஆதாரமும் இவனேயாகும்...

அளவென்று வந்துவிட்டால் கண்டிப்பு
அத்துமீறிச் சென்றாலே தண்டிப்பு
இன்னல்கள் முடக்கிவிட இயற்கையோடு
இயக்குநீராய் இருக்கிறதே இன்சுலினும்...

சர்க்கரையின் சிதைத்தொடர் வழிப்பாதை
சாறு நொதி உடைத்திருக்கும் உயிர்ப் பாதை..
கிளைகாலிசிஸ் என்றுரைப்பார் உயர்மேதை...

குளுக்கோசு நொதிகலந்து உடைபட்டு
பைருவேட்டும் லாக்டேட்டுமாய் பரவியோட
பருகிவிட்ட பாகமெல்லாம் பாடிடுமே
பசிநிறைந்த தெம்போடு ஆனந்தமாய்...

இப்படியாக இயல்பாக நடந்திருக்கும்
இமை இதழ் இரைப்பையென சுகந்திருக்கும்...

கூடிவிட்ட ஒருபொருளின் நிலையதனை
கூப்பாடிட்டு நோயென்று பயம்கூட்டி
கொள்ளையிட கூட்டம்பல கடைவிரிக்க
கூடும்சனம் கூப்பாடிட்டுக் கொலைபயத்தில்...

என்னதான் நடக்கிறது இயக்கமதின் அடிப்படையில்....??
சர்க்கரை நிலை இரண்டு வகை...
சார்ந்தநிலை..(IDDM) சாரா நிலை (NIDDM)..
இன்சுலின் இல்லாமை முதல்நிலை..
இன்சுலினால் இயலாமை இரண்டாம் நிலை..

லாங்கர்ஹான் திட்டுகளின் பீட்டா செல்
நாளத்தின் நாதமதை நிறுத்திவிட்டால்
இன்சுலினின் தாளநயம் தீர்ந்துபோகும்
இல்லாத இன்சுலினால் ஏறிப்போகும்..
கிளைகாலிசிஸ் உடைக்காத சர்க்கரையும்..

இரண்டாம்நிலை என்னவென்று எடுத்துவைக்க
துணைக்கழைத்தேன் கொழுப்பென்னும் கொலஸ்டீராலை
இயக்குநீரின் வேகத்திற்கு வேலிகட்டி
இயங்கவிடா திசுக்கள்தனில் மழுங்கலேற்றும்
இந்நிரண்டாம்நிலை பெரும்பான்மை இந்தியாவில்....

இன்சுலின்பால் இசைந்திடாத செல்ல னைத்தும்
எரிப்பதில்லை குளுக்கோசுக் கூடுகுமிழை..
தீயுறிஞ்சி உடைபடாத சர்க்கரை யதுவும்
சேர்ந்ததுகாண் நீரிழிவாய் குருதிக்குள்ளே....

நீராகாரம் பருகிப்போன நெல்லுநாடன்
நீரிழிவால் படுத்ததில்லை முன்னொரு காலம்
பச்சைக்கீரை பழுத்தபயிறு தின்றநாவும்
ருசித்துப் போய் சேர்ந்ததுவே இனிப்புமென்று...

நெல்வித்தாய் நல்மரபாய் நாமு மிருந்தோம்..
நடுவில்வந் தேறியதே நச்சுமரபும்...
குளிர்தேசப் பதமாகி யடைத்த கறியும்
கொடுங்கோடை நிழலின்கீழ் மென்று வளர்ந்தோம்....

அடிவயிறு அக்குள்புறம் கொடியிடையென
அங்கமெங்கும் கருணையற்றுச் சதையும் பெருத்தோம்..
கொழுப்புதின்று இன்சுலினை கொலையுஞ் செய்தே
கோடிகளில் இறக்குமதி இன்றும் தொடர்ந்தோம்..

உடுத்துவதில் உனக் கிருக்கும் உரிமைபோல
உணவுதனில் நீயுங் கேட்டால் செத்துப் போவாய்...
தலைமுறைக்கு நோய்கொடுத்த தறுதலை யென
தவறாமல் காறித்துப்பி சந்ததி பழிக்கும்..

எப்படியும் தடுக்க விழை.....
வெள்ளென வெறும்வயிற்றில் நீர்நிரப்பு...
வேக்காட்டு அரைநிலையில் மென்று உண்...
வியர்வைத்துளி வழிந்தோட வேலைபழகு...
வீண்பகட்டு உணவுகளின் கதவை மூடு...

தமிழுணவில் வாழ்ந்துவிடு...
தரணி மீண்டும் வென்று எடு......


சர்க்கரை வியாதிக்கு ஒரு விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாக நான் படித்ததை எனக்குத் தெரிந்த அளவில் எழுதியிருக்கிறேன். இது கண்டிப்பாக விழிப்புணர்வுக்கு மட்டுமே.. எனக்கு இலக்கணம் தெரியாது. என் எந்தப் படைப்புகளும் போலவே இப்படைப்புகளும் இலக்கண விதிகளுக்கு உட்படாது. ஆகவே இலக்கண விதிகளை கற்றுத் தேர்ந்த மரபுக் கவிஞர்களும் தமிழறிஞர்களும் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்....! மீண்டும் நன்றி

திரு. சரவணன்

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. திரு. பெயரில்லா பெருமான், உங்கள் கருத்திற்கு நன்றி. தமிழில் தட்டச்ச பழகுங்கள், அதற்கு முன் உங்களுக்காய் ஒரு பெயரை சூட்டிக்கொள்ளுங்கள்....
      நன்றி.

      நீக்கு