புதன், 18 ஜூன், 2025

அறிவியல் பேசுவோம்#01: அறிமுகம்

 அறிவியல்... இன்னமும் நம்முடைய சமூகம் இதை எப்படி அணுகுகிறது? அறிவியல்வயப்பட்டதா நம் சமூகம்?

உண்மையை சொல்லவேண்டுமானால், அறிவியல் வளர்ச்சி என்பதை இயற்கைக்கு எதிரானது என்ற பார்வையில்தான் அணுகுகிறது நம் தமிழ்ச் சமூகம்..
அறிவியல் என்பது இயற்கையை அறிதல்தான்.. இயற்கை எப்படி வேலை செய்கிறது? எந்த மாயமந்திரமோ, கடவுளின் அருளோ இல்லாமல், மூலக்கூறுகளின் அமைப்பினாலோ, அம்மூலக்கூறுகளில் இருக்கும் நுண்ணிய அணுக்கள் மற்றும் துணை அணுத்துகள்களாலோ எப்படி இயற்கை இயங்குகிறது என்பதை அறிவதே இயற்கை.
ஆனால் தொழில்நுட்பம் என்பது, அறிவியல் கொண்டு தெரிந்துகொண்ட இயற்கை விதிகளை வைத்து அதனை மிமிக் செய்வதுபோல உருவாக்கப்படும் கருவி. அது அறிவியலின் வளர்ச்சி என்று கூறுவதைவிட, அறிவியலைக் கொண்டு மனிதன் உருவாக்கிக்கொண்ட, மனித வாழ்வை எளிமைப்படுத்தும் ஒரு பொறி என்றுவேண்டுமானால் புரிந்துகொள்ளலாம்.
எப்படி வெறும் மரக்கலப்பை கொண்டு உழுவது எளிதாக இல்லையென உலோகத்தில் கலப்பை செய்தோமோ, அப்படிதான்...
என்னதான் இயற்பியல் (அறிவியலில் ஆதி) விதிப்படி நேரத்தை முன் பின் என இருபுறமும் கடக்க இயலும் எனினும், ஒளியின் வேகத்தை எட்டிப்பிடிக்கும் ஒரு கருவி வரும் வரை, நாம் முன்னோக்கி மட்டுமே பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அப்படியான பயணம், ஒரு நிலைப்புதன்மையில் இருந்துவிடுவதில்லை.. அடுத்தடுத்த நிலைக்கு செல்வதுதான் வழக்கமான ஒன்று. அப்படிதான் வெற்றுடலாய் இருந்த மனிதனுக்கு இலைதழை வைத்து மறைக்கும் அறிவு கிட்டியது, பின் பருத்தியை தெரிந்துகொண்டான், அதை ஆடையாக்கினான்.. பட்டு, வுல் என சென்று பின் நைலான் போன்ற இயற்கை உதவியுடன் மனிதன் உருவாக்கிய இழைகள் கொண்டு ஆடை செய்தான்..
இன்னும் அடுத்த நிலையில் ஸ்மார்ட் ஆடைகள் வந்துவிட்டன.. அதுவே பெண்களின் மாதவிடாய் நேரத்தில் அணிய நாப்கின்களுக்கு பதில் ஸ்மார்ட் நாப்கின்கள் என்ற புதிய கண்டுபிடிப்பும் வந்திருக்கிறது. அதில் இருக்கும் சிறிய கருவி, அந்த மாதவிடாய் இரத்தத்தில் இருக்கும் சில பயோமார்க்கர்களை அறிந்துகொண்டு, அந்த பெண்ணுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என தெரிந்துகொள்ள உதவுகிறது.
எனில் அறிவியல் என்பது இயற்கை அறிதல்
தொழில்நுட்பம் என்பது மனித வாழ்வை எளிமைப்படுத்தும் பொறி உருவாக்கல்..
அந்த பொறி மனிதவாழ்வை மேம்படுத்தும், எளமைப்படுத்தும், மெருகூட்டும்.. ஆனால் சில வேளைகளில் அது மனிதனுக்கு எதிராகவும் அமையலாம். அதற்கு அறிவியலை, அதாவது இயற்கை அறிதலை குறை கூறுதல் அர்த்தமற்றது. அந்த அறிவியல் கொண்டு, தனி மனிதன், தன் லாபத்திற்காக, மனிதமற்று நடந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல் அது. எப்படி மன்னராட்சி முறை சமூகநீதிக்கு எதிராக இருந்ததால், அதனை அப்புறப்படுத்திவிட்டு மக்களாட்சி முறையை கொண்டுவந்து அதை முறைப்படுத்தி வைக்கிறோமோ, அப்படிதான் இந்த தொழில்நுட்பத்தையும் முறைப்படுத்த வேண்டும். பல ஆய்வுகள் நடக்கவேண்டும்..
அதைவிடுத்து, அறிவியலைவிட பாரம்பரியம், மரபு மட்டுமே முக்கியம் என நினைத்தால், ஆடையற்ற நிலைக்குதான் அந்த எண்ணம் கொண்டுபோய்விடும். அதனால் மரபையும் முழுவதும் மறக்கவேண்டுமன கூறவில்லை. மரபு என்பது தொடர்ச்சியற்ற அறிவியல்..
அதனை அடுத்தநிலைக்கு எடுத்துசெல்வதை விடுத்து இன்னமும் மரபையே பிடித்துக்கொண்டு இருப்பது, சமூகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவாது. அதன் விளைவுதான் இன்னமும் நம்மிடம் இருக்கும் சாதி, மத, சோதிட நம்பிக்கைகள்..
அறிவியல் பேசுவோம்#01
(அறிவியல் - இயற்கை அறிதல்
தொழில்நுட்பம் - அறிவியல் கொண்டு மனிதன் உருவாக்கிக்கொண்ட பொறி
மரபு - தொடர்ச்சியற்ற நிற்கும் அறிவியல்)
- சகா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக