வியாழன், 10 ஜூன், 2021

பாட்டி நிலவிலிருந்து அனுப்பிய வடை பார்சல்..

சித்திரை வெயிலின் புழுக்கம் தாங்காமல் மொட்டைமாடியில் வந்து மல்லாந்து படுத்துக்கொண்டே நிலவை உற்றுநோக்கிக்கொண்டு இருந்தேன். அந்தநேரம், வடை சுடும் பாட்டி என்னை நிலவிலிருந்து எட்டிப்பார்த்து, என்னடா பேரா பசிக்குதா உனக்கு, இந்தா வடை சாப்பிடு என்று இரண்டு மெது வடைகளை தூக்கி என்மீது வீசியமாதிரியே ஒரு உணர்வு!
இப்ப அந்த வடை பூமில இருக்க எனக்கு வந்து சேருமா, இல்லையாங்றத ஈர்ப்புவிசைதான் முடிவுசெய்யனும். ஈர்ப்புவிசைன்னு படிக்கிறோம், ஆனா அது உண்மையில் விசைதானா!?
பதிலறிய நவீன இயற்பியல் (modern physics) உதவியைதான் நாடவேண்டும்!
அப்டி என்ன அது சொல்லுது!? ஒன்றுமில்லைங்க, விண்வெளியில் இறைந்துகிடக்கும் பலமில்லியன் கோடி துகள்களுள் நம் கதிரவன் குடும்பமும் ஒன்று. புரிந்துகொள்ள எளிமையாக சொல்ல வேண்டுமானால், விண்ணிலுள்ள எல்லா கோள்களும், அண்டங்களும், பால்வழித்திரள்களும், நட்சத்திரங்களும் ஒரு மெல்லிய விண்வெளி துணியின் (space fabric) மீதுதான் அமையப்பெற்றிருக்கின்றன. தனக்கே உரித்தான எடைகளை கொண்டுள்ள அனைத்து துகள்களும், ஒருவிதமான குழிகளை உருவாக்குகின்றன. அதாவது ஒரு நீண்ட துணியை எடுத்து நான்கு பக்கங்களையும் இழுத்து கட்டிவிட்டு அதனுள் ஒரு சிறு பொருளை இட்டால் உருவாகுமல்லவா, அது போன்றதொரு குழியை உருவாக்குகிறது.
பெருவெடிப்பிலிருந்து ஒரேவேளையில் வெளியான அனைத்து துகள்களும் அந்த மெல்லிய விண்வெளி துணியின் மீதுதான் விழுகின்றன. விழுந்தவற்றுள் அதிக நிறைகொண்ட கதிரவன் மிகப்பெரிய குழியை உருவாக்குகிறது, பின் அதே வேளையில் அக்குழிக்குள் இயக்கநிலையில் விழுந்த மற்ற துகள்களெல்லாம் கதிரவ மையநோக்கு விசையுடனே அக்கதிரவனை சுற்றிவருவதே இயல்பு! இதுவே ஈர்ப்புவிசை.
அதேவேளை, அப்பெரிய குழிக்குள் விழுந்த தனிப்பட்ட அனைத்து கோள்களும் தன் நிறைசார்ந்து சிறு சிறு குழிகளை அந்த துணியின் மீது உருவாக்கும். அப்படி உருவாகிய குழிகளுக்குள் ஏதேனும் மிகச்சிறிய துகள் விழின் அது துணைக்கோளாய், அக்குழி உருவாக்கிய கோளை சுற்றுவரும்.
இப்படிதான் பூமியின் துணைக்கோளாய் நிலவு சுற்றிவருகிறது. நிலவும் சிறு நிறை கொண்ட துகளாய் இருப்பதால், விண்வெளி துணியின்மீது மிகச்சிறு குழியை ஏற்படுத்தும். இப்பொழுது, அந்த விண்வெளி துணியின் மீது, பால்வழித்திரளால் ஒரு பெருங்குழி, கதிரவனால் ஒரு குழி, பூமியால் சிறுகுழி, கதிரவனால் மிகச்சிறு குழியென, பலதரப்பட்ட குழிகள் உருவாகின்றன. அந்த குழிகளின் ஆழம் அந்தந்த கோள்களின் நிறையை பொறுத்ததாக இருக்கும், அதுவே ஈர்ப்புவிசையை தீர்மானிக்கும்.
இப்ப கதைக்கு வருவோம். அந்த பாட்டி எனக்காக வீசிய மெதுவடை மிகச்சிறு குழியால் ஏற்பட்ட ஈர்ப்புவிசையை தாண்ட முடியாமல் அங்கேயே நின்றுவிடும். எனக்கு வந்துசேர வாய்ப்பே இல்ல! ஆனால் அந்த மிகச்சிறு குழியால் உருவான ஈர்ப்புவிசையை எதிர்க்கவல்ல ஆற்றலை கொண்டு மெதுவடையை ஏவினால், எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

-சகா..
14/05/2019

2 கருத்துகள்: