வெள்ளி, 29 நவம்பர், 2019

black hole கருந்துளை

ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky way) எண்ணலாம். மொத்த பால்வழித்திரளும் உயிர்ப்புடன் இருக்க காரணம் இறந்த விண்மீன்கள்தான், அதாவது கருந்துளைகள் (black holes). 

கருந்துளைகள் எனப் பெயர்பெற காரணம், உண்மையில் அவைகள் ஒளியையும் விட்டுவைக்காது விழுங்கும் தன்மையினால்தான். எளிமையாக கூறினால், நான்கு பக்கங்களை இறுக்கமாய் கட்டிய ஒரு துணியில் பந்துகளை போட்டு, அத்துணியின் நடுவில் ஒரு துளையினை இட்டால், அந்த பந்துகள் எப்படி அந்த துளை நோக்கி ஒடி, கீழ் விழுமோ அப்படிதான் பந்துகள் போலுள்ள கோள்களும், விண்கற்களும், சூரியன்களும், விண்மீன்களும், கருந்துளையினால் ஈர்க்கப்பட்டு வீழ்ந்துவிடுகின்றன. 

நமது சூரியக்குடும்பம் இருக்கும் பால்வழித்திரளிலே மூன்று வகையான கருந்துளைகள் இருப்பதாக நாசா குறிப்பிடுகிறது. ஒன்று அணு அளவில் இருக்கும் கருந்துளைகள், இரண்டாவதாக stellar வகைகள் (interstellar படம் ஞாபகம் வருகிறதா), மூன்றாவது super massive வகைகள். கருந்துளைகள் என்றாலே அதன் ஆற்றல் அதிகமென்பதை நாமறிவோம். ஆற்றல் (energy), நிறையுடன் தொடர்புடையது, எப்படி? அதாங்க நம்ம நித்யானந்தா சொன்னாரே, sorry sorry, ஐன்ஸ்டீன் சொன்னாரே, E = mc2. இதனையும் நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்ள, ஒரு சிறு கயிறை எடுத்து ஒரு முனையில் 100 கி கல் ஒன்றை கட்டி, மறுமுனையை உங்கள் கையில் வைத்து வேகமாக சுற்றுங்கள், 100 கி கல்லின் எடை அதிகமாவதை உணர்வீர்கள். அதாவது, பொருளிலிருந்து வெளிப்படும் ஆற்றல், எடையாய் மாறும் (E = mc2) அது போலவே, ஒரு அதீத நிறைகொண்ட விண்மீன் இறக்கையில், அது ஆற்றலாய் மாறுகிறது, அப்படி வெளிப்படும் ஆற்றல் அதன் நிறையை மேலும், மேலும் அதிகரிக்கிறது. அப்படிதான் கருந்துளைகளின் ஆற்றலோ, நிறையோ அதிகமாகிறது. அப்படி அதிகமாகையில், தனக்கருகில் இருக்கும் அனைத்து விண்மீன்களையும், கோள்களையும் விழுங்கிவிடுகின்றன, அவற்றை விழுங்குவதாலும் அதன் நிறையும் ஆற்றலும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.

அப்படிதான், சிறிய அணுவளவு கருந்துளைகள், மலையளவு நிறைகொண்டதாக இருக்கிறது, Stellar எனப்படும் கருந்துளைகள் சூரியனை விட 20 மடங்கு அதிக நிறைகொண்டதாகவும், super massive வகைகள் சூரியனை விட 1 மில்லியன் மடங்கு அதிக நிறைகொண்டதாகவும் இருக்கின்றன. நம்பால்வழித்திரளின் நடுவே இப்படியொரு super massive கருந்துளை இருப்பதாலேயே நம் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாமிருக்கும் சூரியக்குடும்பத்தில் ஒரு கருந்துளை உருவாக வேண்டுமானால், அத்துளை, சூரியன் இறப்பால்தான் நிகழ முடியும். அப்படி நாளைக்கே சூரியன் இறந்து கருந்துளையை உருவாக்கினாலும், அடுத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அக்கருந்துளையை (bcz, mass increases due to increasing energy) சூரியக்குடும்ப கோள்கள் சுற்றிவர வாய்ப்பிருக்கிறது!

கல் விழுந்த இடம்தான், அந்த super massive கருந்துளை! சிறுகற்கள் - stellar வகைகள்! உருவாகும் அலைகள் தான் - ஈர்ப்பலைகள் (gravity)! அந்த அலைகளின் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் சூரியக்குடும்பம் இருக்கிறது, அப்புள்ளியின், ஒரு ஓரத்தில்தான் பூமியும் உருண்டு கொண்டிருக்கிறது உயிர்ப்புடன்!

-சக்தி

வியாழன், 24 அக்டோபர், 2019

தமிழில் அறிவியல்

ஒருவரின் எண்ண வெளிப்பாடுகளை அறிவு-சார், உணர்வு-சார் என்று பொத்தாம் பொதுவாக பிரிப்பது நம்முடைய நடைமுறை. ஒரு செயல், அறிவியலுக்கு ஒவ்வாதவையாகவோ, தம்முடைய எண்ணஓட்டத்திற்குள் அடங்காதவையாகவோ இருந்தால் அச்செயலை உணர்வு-சார் பெட்டிக்குள் அடைத்துவிடுவது நம் பழக்கம். அப்படி உணர்வு-சார் செய்கைகளெல்லாம் அறிவுசார்ந்து இருப்பதில்லையா எனக்கேட்டால், இல்லை என்பதே பெருப்பாலானவர்களின் பதிலாக இருக்கக்கூடும்.

இப்படியாய் நாம் புரிதலற்று பொத்தாம் பொதுவாய் உணர்வு-சார் பெட்டிக்குள் மட்டுமே காலம்காலமாய் அடக்கிவைத்த ஒன்றுதான் மொழி. தம் தாய்மொழியைப் பற்றி யாரேனும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்துவிட்டால் போதும், அவர் அன்றிலிருந்து வெறும் அறிவற்ற வெற்று மொழி உணர்வாளர் என்றளவிலேயே மதிக்கப்படுவர். தாய்மொழி என்பது வெறுமனே ஒருவனின் உணர்வு மட்டுமல்ல, அஃது ஒருவனின் மண்சார்ந்த வாழ்வியலை, பண்பை, இயல்பை, கோபத்தை,  கலையியலை, இறையியலை, கற்பியலை, கல்வியை இன்னும் பலவற்றை பறைசாற்றும் ஒரு சாளரம். அப்படியாயின், அந்த சாளரம் அறிவற்றோ, அறிவுக்கு புறம்பாகவோ, அறிவை முற்றிலும் சாராமலோ இயங்க வாய்ப்பே இல்லை.

அறிவின் களஞ்சியம்தான் மொழி. தான் பெற்ற தனியறிவை, மற்றவர்களுக்கு பயன்படும் பொது அறிவாய் மாற்ற இங்கு மொழியென்ற மிகப்பெரிய அறிவு ஆயுதம் இன்றியமையாதது. அப்படி ஆயுதம் ஏந்திய இந்த மொழித்தீவிரவாதியை விருது கொடுத்து தட்டிக்கொடுத்திருக்கிறது கொரிய தமிழ்ச் சங்கம் (KTS).

நான் பெறும் முதல் 'தமிழ்' விருது இது. நான் இதுவரை அறிவியல் ஆய்விற்காக பெற்ற விருதுகள் அனைத்திற்கும் தலையாய விருது இது என்று கூறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழகத் தமிழர்களை விட மூன்றரை மணிநேரம் முன்பே கதிரவனை சுற்றித்திரிந்துகொண்டிருக்கும் கொரிய வாழ் தமிழ் நண்பர்களுக்கும், என்னை இவ்விருதுக்காக வழிமொழிந்த நண்பர்களுக்கும், தமிழிற்கும் எனது நனிமிகு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

-சக்தி

Halo பரிவேடம் அகல்வட்டம்

Halo - பரிவேடம் - அகல்வட்டம்
'அகல்வட்டம் பகல் மழை' என்பர்!
பொதுத்தமிழில் கோட்டை கட்டுதல் என்றுகூட சொல்வர்!
'வானம் கோட்ட கட்டுதுடா, காயவச்ச நெல்ல அள்ளி பத்தாயத்துல கொட்டுங்கடா'ன்னு எங்க அப்பா சொல்வார்!
Halo is nothing but photon (light) refraction by crystalized water.

As like Selected Area Electron Diffraction (SAED) create patterns of crystals, photons that comes from sunlight gets scattered by the crystalized water molecules present in the cloud!
So, this phenomena may be named as Selected Area Photon Refraction (SAPR)!

மிக எளிமையாய் கூறவேண்டுமானால், இது ஒரு நிறப்பிரிகை நிகழ்வுதான். மேகத்தில் ஒருங்கிணையும் நீர் மூலக்குறுகள், தங்களுக்குள் ஹைட்ரஜன் பிணைப்பினை ஏற்படுத்தி ஒத்துருபடிகத்தை (crystalization - ice formation) அடைகின்றன. அப்படிகமான நீர் மூலக்கூறுகள் முப்பட்டக கண்ணாடி (prism) போல செயல்பட்டு பரிதி (கதிரவன்) ஒளியையோ, நிலவொளியையோ சிதறடிக்கின்றன. இப்படியான நிகழ்வால்தான் Halo என்று அழைக்கப்படும் பரிவேடம் - அகல்வட்டம் - கோட்டை கட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

சக்தி.
பதிவு: 08/09/2019, தஞ்சையிலிருந்து.

#தமிழ் #இயற்பியல் #physics #chemistry_of_physics #chemistry #physicalchemistry #physics_of_chemistry #halo #haloscience #refraction #scattering #ramanscattering #ice #cloud #naturephotography #nature #naturelover #cryatalization #crystal #hydrogenwater #hydrogenbonding

வியாழன், 5 செப்டம்பர், 2019

சிறந்த ஆசிரியன்

நண்பரொருவர், உங்கள் அலைபேசியில் MS word இருக்கிறதா என்றார், இருக்கிறதே, ஆனால் தேடுவது கடினம் என்று மைய பொத்தானை (Home key) நீண்ட நேரம் அழுத்தி, Hey google, open MS word என்றேன், உடனே MS word திறக்கப்பட்டது. அதைக் கண்டு அசந்து போன அதில் பரிச்சயம் இல்லா அந்த நண்பர், Google தான் சிறந்த ஆசிரியரென்றார்.

அவர் கூற்றுப்படி, கற்பிப்பவரெல்லாம் ஆசிரியரென்றால் இவ்வுலகின் மிகப்பெரிய அறிவு களஞ்சியமும், செயற்கை நுண்ணறிவை சிறுகச்சிறுக பெற்றுக்கொண்டிருக்கும் கையடக்க மிடுக்கலை பேசியே உலகின் ஆகச்சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும்!

ஆனால், அறிவாற்றல் மட்டுமே ஒருவனை ஆசிரியனாய்  உருமாற்றிவிடாது. அஃது அறிவுடன் கூடிய மனிதத்தின் உச்சமாகவே நான் எண்ணுகிறேன். பொருளிருந்தால் போதும் இவ்வுலகில் எதனையும் எளிதில் பெற்றுவிடமுடியும் என்ற பொதுபுத்திக்குள் அடங்காத ஒரே பண்டம் அறிவுதான். அப்படிப்பட்ட அறிவை ஊட்டவல்ல ஒருவர் எப்படி இருக்கவேண்டும், எப்படியான ஆடையை அணிய வேண்டும், ஆங்கில மொழியில் பேசவேண்டும், என்பதான தட்டை வடிவத்தைதான் சுற்றத்தார் பலர் சிறந்த ஆசிரியனுக்கு கொடுக்கிறார்களே ஒழிய ஆசிரியனின் கற்பித்தல் திறனை மதிப்பிடுவதே இல்லை. கற்பித்தல் திறனென்பது, ஆசிரியர் எவ்வாறு தாம் பெறும் அறிவை, தம்மின் உணர்வுகளுக்கோ, தற்பிடித்தத்திற்கோ, இடமளிக்காமல், ஒரு மாணவனுக்கு மடைமாற்றம் செய்கிறார் என்பதைப் பொறுத்தது!

உணர்வு மற்றும் தற்பிடித்தம் என்பது ஒருவற்கு பாலினம், குடும்பம், அரசியல், மதம், சாதி என்று எந்தவித தளத்திலும் இருக்கலாம். அப்படியான தமக்கான இறுக்கத்தையெல்லாம் பொருட்படுத்தாது, அறிவுக்கு எது உகந்ததோ அதனை மட்டும் மூளைகளுக்கிடையே பகிர்பவரே சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். மற்றபடி அவ்விறுக்கத்தை, தற்பிடித்தத்தை சார்ந்தே ஒருவரின் கற்பித்தல் இருக்குமாயின், அவர் சிறந்த பேச்சாளனாய் ஆகலாம், சிறந்த ஆசிரியனாய் அல்ல!

வாருங்கள் சிறந்த ஆசிரியனை உருவாக்க!

சக்தி.