திங்கள், 12 அக்டோபர், 2015

மலேரியா: நோய் முதல் நொபெல் வரை

மலேரியா நோய்க்கான காரணங்களும், அது ஏற்படுத்திய பாதிப்புகளும்

மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) எனும் தாவரத்திலிருந்து ஆர்மிசினின் (Artemisinin) எனும் உயிர்வேதிப்பொருளை பிரித்தெடுத்து, அது மலேரியாவுக்கு எதிராக வேலை செய்கிறது என்றும் நிரூபித்துள்ளார். இந்த தாவரத்தை, பாரம்பரிய சீன மருத்துவ முறையிலிருந்து அவர் தெரிவு செய்திருக்கிறார்.

மலேரியா என்பது ப்ரோட்டோசொவன் எனும் ‘ஒரு செல்’ உயிரியால் உருவாகும், அனபிலஸ் எனும் பெண் கொசுவின் உமிழ் நீரினால் பரப்பப்படும் ஒரு தொற்று நோயாகும். காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். முற்றிய நிலையில் இது மஞ்சள் சுரத்தையும், கோமா நிலையையும் உண்டு செய்யும், மிகவும் முற்றிய நிலையில் இது மரணத்திற்கும் கூட வழி வகுக்கும். தொற்றுநோய்க் கிருமி, கொசுவின் உமிழ் நீரில் இருந்து தாக்கப்படுபவரின் இரத்தத்தில் கலக்கிறது. பின்பு இக்கிருமி கல்லீரலை அடைந்து வளர்ந்து, முதிர் தன்மை அடைந்து மீண்டும் குருதியில் கலக்கிறது. பின்னர் குருதியில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் தங்கி வளர்ந்து, இனவிருத்தி அடைந்து பின்பு இவற்றை அழிக்கின்றன.

பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளின் மலேரியாவின் பாதிப்புகள் அதிகம், குறிப்பாக ஆப்பிரிக்காவில். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி, சுமார் 5,84,000 பேர் மலேரியாவின் கோரப் பிடியில் சிக்கி இறந்திருக்கிறார்கள். ஏழ்மைக்கும் இநோயிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவதில் எந்த அளவு உண்மை இருக்க முடியுமென தெரியவில்லை, ஆனால் தேங்கிய நீர் நிலைகளில் தான் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் குடிகொள்கின்றன. ஆகவே. இந்த கொசுக்களை கொல்வதே தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கை ஆகும். மேலும் இக்கொசுக்களை கொல்ல டிடிடி, சிப்ளுத்ரின் மற்றும் டெல்டாமெத்ரின் போன்ற மருந்துகளை தெளித்து அழிக்கவும், கொசுவலை பயன்படுத்துவதும் சிறந்த தற்காப்பு முறைகளாகும்.

மலேரிய தடுப்பு மருந்தின் ஆரம்ப நிலை

ஆண்டிஸ் மலைத்தொடரில் காணப்படும் ஒரு வகையான மரம் ‘சின்கோனா’. பெரு நாட்டின் மக்கள் இம்மரத்தின் பட்டைகளை ஊறவைத்து, அதன் தண்ணீரை குடிப்பதை (கியாயம்) காய்ச்சலை தணிக்கும் மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற சில மத போதகர்களின் மூலமாக இது லண்டனை அடைந்துள்ளது. சின்கோனா எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து தருவிக்கப்பட்ட வேதிப் பொருளான குய்னைன் தான் மலேரியாவிற்கு சிறந்த மருந்தாக இன்றளவும் பாவிக்கப்படுகிறது. ஆனால் இந்த நோய்க்கிருமிகள் தங்கள் மரபணுக்களை மாற்றியமைத்து இந்த மருந்துகளுக்கு மட்டுப்படாமல் எதிர்ப்புத் தன்மை பெற்றுவிட்டன. இவ்வாறான அக்கிருமியின் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே ஆர்மிசினின் கண்டறிய வேண்டியதற்கான தேவை உண்டானது.

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அமெரிக்கர்களில் சுமார் 60,000 பேர் மலேரியாவால் இறந்ததாக அறியப்படுகிறது. மலேரியா மருந்தான க்ளோரோகுய்நோன் சரிவர செயல்படாததால் (மருந்து செயல்படா தன்மை) தெற்கு வியட்நாமுடனான போரின்போது வடக்கு வியட்நாமின் துருப்புகள் அதிக அளவில் மலேரியாவால் இறந்து போயினர். தென் சீனத்தின் பல பகுதிகளிலும் மலேரியாவின் பாதிப்பு அதிகமாக இருந்ததாலும், வடக்கு வியட்நாம் கேட்டுகொண்டதற்கு இணங்கவும் அப்போதைய சீன அதிபர் சோவ் என்லை அவர்களால் ப்ராஜெக்ட் 523 (May 23, 1967) தொடங்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில், திருமதி டு அவர்கள், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் சீனாவின் ஹெய்னான் மாகாணத்திற்கு, நோயாளிகளை ஆராய்வதற்காக செல்லும்படி பணிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் பீஜிங் பல்கலைகழகத்தில் மருந்தாளுனர் பட்டம் பெற்றிருந்தார். மேலும் மேற்குலக நவீன மருத்துவம் படித்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "சீன பாரம்பரிய மருத்துவ" பயிற்சியையும் முடித்திருந்தார். இளம் தாவர-வேதியியல் அறிஞர்களையும், மருந்தியல் அறிஞர்களையும் உள்ளடக்கிய ப்ராஜெக்ட் 523 அதுவரை ஏதும் சிறப்பான மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், அவர்களின் பார்வை சீன பாரம்பரிய மருத்துவ முறையை நோக்கி விழுந்தது.



படம் 1: ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) தாவரம்.

தற்பொழுதைய மலேரிய தடுப்பு மருந்து உருவாக்கம்

முதலில் சுமார் 2000 தாவர சாறுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன, அதில் 640 மட்டுமே மலேரியாவிற்கு எதிரான செயலபாடுகளை காட்டின. அடுத்த கட்டமாக 200 தாவரங்களில் இருந்து பெறப்பட்ட 380 சாறுகள் சுண்டெலிகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிராக செயல்படுகிறதா என் சோதனை செய்யப்பட்டன. ஆனால் இம்முறையும் அவர்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைக்கவில்லை. ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) மலேரியா எதிர்ப்பு செயல்பாட்டை காட்டிய போதிலும், ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ ஏடுகளில் கொடுக்கப்பட்டுள்ளது போல சிறப்பானதாக இல்லை. அப்போது அவர், மனம் தளராமல் மீண்டும் அந்த மருத்துவ புத்தகத்தை வாசிக்கத தொடங்கினார். ஆழமாக வாசித்த போது ஓன்று புரிந்தது, அது சாறு எடுக்கும் முறையில் உபயோகப்படுத்தும் வெப்பத்தின் அளவை மாற்றம் செய்யலாம் என்பதே. அதிக வெப்பத்தினால், சாறு எடுக்கும் போது சில முக்கிய வேதிபொருட்கள் சிதைவடைய வாய்ப்பு இருப்பதாக கருதினார். அதனால் மீண்டும், அவ்வாய்வுகளை குறைந்த வெப்பத்தில் எடுக்கப்பட்ட சாற்றைக் கொண்டு செய்து பார்த்தார். இது அவருக்கு தக்க பலனை தந்தது, ஆம் இம்முறை சிறப்பான செயல்பாடு காணப்பட்டது. மேலும் அது சில பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, மனிதக் குரங்குகளில் சோதனையிடப்பட்டு, உறுதி செய்யப்பட்டது.

1970களில் புதிதாக கண்டறியப்பட்ட மருந்துகளை சோதிக்க தகுந்த வழியமைப்புகள் இல்லை. ஆகவே திருமதி. டு வும் அவரது குழுவினரும் ஒரு தைரியமான முடிவை எடுத்தனர். அவர்கள் அனைவரும் அந்த மருந்தை அருந்தினர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று உறுதியான பின்னரே, மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹுய்னான் மாகாணத்து நோயாளிகளுக்கு வழங்கி சோதித்தனர். எதிர்பார்த்தபடியே, நோய்க்கான அறிகுறிகள் குறைய ஆரம்பித்தன. மருந்து சிறப்பாக செயல்பட தொடங்கியதை உணர்ந்த குழுவினர், அடுத்ததாக அச்சாற்றின் மூலப் பொருட்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கினர். பின்னர் 1972 ஆம் ஆண்டு, 282 மூலக்கூறு எடையுள்ள ஆர்மிசினினை கண்டறிந்தனர். பீஜிங் அருகில் கிடைத்த செடிகளில் அதிக அளவு ஆர்மிசினின் இல்லை, ஆனால் அதுவொரு தேசிய செயல்திட்டம் என்பதால், தேசத்தில் பிற பகுதிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் மூலம் செறிவான ஆர்மிசினின் உள்ள தாவரம் கண்டறியப்பட்டது. பின்னர் மாத்திரையாக உருமாற்றப்பட்டு சோதித்தனர். ஆனால் பழங்காலத்து மாத்திரை உருவாக்கும் எந்திரத்தில் இருந்த சில குறைபாடுகளினால் எதிர்பார்த்த செயல்பாடு கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் கூடுடை மாத்திரைகள் மூலம் சோதித்தனர், இம்முறை சிறப்பான செயல்பாடு கிடைக்கப்பெற்றது. மேலும் அவர்கள் இதை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல, அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது. அதே சமயத்தில், அந்த தாவர சாற்றில் ஆராய்ச்சி செய்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டனர். ஆனால் சீன அறிவியல் கழகம் இவர்களின் ஆராய்ச்சியை அங்கீகரித்தது. பீஜிங்கில் 1981 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு நடத்திய "மலேரியா மருந்துகள்" எனும் ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கத்தில் திருமதி. டு இவ்வாராய்ச்சியைப் பற்றி பேசினார். பின்னர் இக்குழுவினர் அம்மருந்திலிருந்து பல வேதியியல் வழித்தோன்றல்களை உண்டாக்கி அதையும் பரிசோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டனர். அம்மருந்தை உலக சுகாதார மையம் (எசிடி-ஆர்மிசினின் கூட்டு மருந்து) உலக அளவில் அங்கீகரித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் லட்ச கணக்கானோர் இதனால் பயனடைந்தனர். திருமதி டு அவர்களின் கடும் உழைப்பிற்கு பலனாய், தற்பொழுது அவருக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.


படம் 2: மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டின் (2015) மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்கள்.

நாம் உற்று நோக்க வேண்டிய மூன்று விடயங்கள்

1. மேற்கத்திய அறிவியல் படித்தவர்களுக்கு சீன பராம்பரிய மருத்துவ முறை சார்ந்த பயிற்சியை அளித்தது. இது ஒரு சிறந்த முறை. ஏனெனில் ஒரு துறையில் உள்ளவர்கள், மற்றொரு துறையை பற்றி தெரிந்திருக்கும் பொழுதுதான் நிறைய பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். நிறைய துறை அறிஞர்கள் ஒரு புள்ளியில் கூட வேண்டும். அல்லது பல துறைகளையும் ஒரு அறிஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. சீன அரசின் ப்ராஜெக்ட் 523: அந்தத் துறையில் அனுபவம் மிக்க தேசத்தின் அனைத்து அறிஞர்களையும் ஓர் புள்ளியில் நிற்க வைத்தது. அதற்கான நிதி உதவியை தாராளமாக்கியது.

3. திருமதி. டு, எதிர்மறை முடிவுகளை கண்டு தொய்வுராமல், மீண்டும் மீண்டும் பரிசோதித்தது. மேலும் அந்த மருத்துவ ஏடுகளை மீண்டும் தெளிவாக படிக்க முற்பட்டது.

மேற்கண்ட விடயங்கள் நம்மை நம் சித்த மருத்துவத்தை நோக்கி பார்வையை செலுத்தத் தூண்டுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தின் நிலை மற்றும் எதிர்கால பார்வை

நமது சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் போகாமலில்லை. ஆனால் எந்த அளவு? சித்தர்பாடல்களை புரிந்துகொள்வதில் இருந்தே நமக்கு இடர்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தவறாக பொருள்விளக்கம் கொள்ளப்பட்டு பல மருந்துகள் கைவிடப்படுகின்றன அல்லது செயல் திறன் குறைவாக உள்ளன. சித்த மருத்துவ ஆராய்ச்சி இன்னும் ஏட்டளவில்தான் உள்ளன. சித்த மருத்துவ முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டி தேசிய சித்தா கழகத்தில் (சென்னை) இருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு படையெடுக்கின்றனர். ஒரு தேசிய நிறுவனம், தொன்மை வாய்ந்த ஒரு மருத்துவ முறையை ஆராய்ந்து மேற்குலகிற்கு நிரூபிக்க தேவையான அறிவியல் கருவிகளை கொணரக் கூடாதா? மாநிலத்தின், பல்வேறு பல்கலைகழகங்களில் தாவரவேதியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மேற்குலகம் எற்றுக்கொள்ளும்படியான நிரூபணங்களை தரக் கூடிய கருவிகளுக்கு எங்கே போவது? கூட்டு முயற்சி மட்டுமே ஒரு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பை வெளிக்கொணர உதவும், முக்கியமாக நாம் குறைந்த வசதிகளுடன் ஆராயும் போது. பத்து தமிழ் ஆசிரியர்கள், பத்து தாவரவியலாளர்கள், பத்து சித்த மருத்துவர்கள், பத்து வேதியியல் அறிஞர்கள், பத்து உயிர்-வேதியியல் அறிஞர்கள், பத்து நுண்ணுயிர் அறிஞர்கள், பத்து உயிர்-கணினி ஆய்வாளர்கள், பத்து மருந்தியல் அறிஞர்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கு சிறந்த தலைமையை உருவாக்கி, அவர்களுக்கு நல்ல ஊதியமும், அவர்களின் கீழ் பணிபுரியிம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நல்ல கல்வி உதவித்தொகையும், நுண்-அரசியல் அற்ற ஒரு ஆராய்ச்சிகூட சூழலையும், ஆராய்ச்சியாளர்களுக்கு நடுவே போட்டியற்ற ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவுமேயானால், சித்த மருத்துவத்திற்கு வருடத்திற்கு ஒரு நொபெல் பரிசு சாத்தியமே !!!


முனைவர். இர. வினோத்கண்ணன் தேன்மொழி
https://www.facebook.com/vinothkannan.ravichandiran 

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இயற்கை மருத்துவத்திற்கு கிடைத்த நொபெல் பரிசு

ஒரு மழைக்கால மாலை நேரத்தில், மண்ணில் உள்ள நுண்ணுயிர் கூட்டம் கொடுத்த நறுமணத்தினூடே அம்மண்ணில் சிறுகுழந்தைகள் விளையாட விருப்புவது இயல்பான ஒன்றுதான். அப்படி விளையாடிய பின் மறுநாள் அந்த குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம், பெற்றோர்களோ அதனை மிகவும் எளிதாய் எடுத்துக்கொண்டு அப்பிரச்சினையை வேறுகோணத்தில் அணுகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அக்குழந்தைக்கு இடையூறு அதிகமாகி எதை உண்டாலும் செரிமானமின்றி அப்படியே வெளியேறி, வெளியேறும் பாதைகளில் எரிச்சலையும் கொடுத்து பின் வெளிவரும் கழிவில் சிறு புழுக்களும் தென்படவும் வாய்ப்பிருக்கிறது. புழுதானே என்று இதற்கும் அப்பெற்றோர்கள் நினைப்பார்களாயின் அது பெரிய விளைவை உண்டாக்கும் பொழுதுதான் அறிவார்கள் அது சாதாரண புழுவல்ல, ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த, உயிரை உருக்கிக் கொல்லும், உருளைப்புழுக்களென்று.

அனைத்துவகையான ஓட்டுண்ணி புழுக்களும், இந்த வகையான இடையூறுகளை ஏற்படுத்தாவிட்டாலும் சிலவகை புழுக்களான நெகாடர் அமெரிசானசு, அன்சைகிலோசுட்டமா டியோடினேல் போன்ற புழுக்கள் மிகப்பெரிய பிரச்சினையை மனித சமூகத்திற்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுத்தவல்லது. நம் தமிழ் சமூகத்தால் எளிதாய் பார்க்கப்படும் இம்மாதிரியான ஒட்டுண்ணி உருளை, கொக்கிப்-புழுக்கள் ஏற்படுத்தும் இன்னலானது முதலில் சிறிய துன்பத்தை மட்டுமே கொடுத்தாலும் பின்னர் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்திவிடும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறு, இரத்தசோகை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, எடைகுறைதல் என்று உடலை முழுவதும் சிதைப்பது மட்டுமல்லாது, அறிவு வளர்ச்சியையும் தடைபடுத்தவல்லது. இவ்வொட்டுண்ணி புழுக்களின் முழு வீச்சை, அது ஒரு ஆண்டுக்கு எடுத்துசெல்லும் உயிர்பலியை வைத்து அறிந்துகொள்ளலாம். ஆம், உலக அளவில் ஏறத்தாழ ஆண்டுக்கு 14 மில்லியன் உயிர்களை காவு வாங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த ஒட்டுண்ணி உருளைப் புழுக்களானது, மண்ணில் மிக எளிதாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று. இதனை நுண்ணோக்கியின் உதவியுடன் பார்க்க இயலும். சில வேளைகளில் நம் வெறும் கண்களுக்கு கூட காட்சி கொடுக்கும் அளவுக்கு பெருப்பதும் உண்டு. இப்படிப்பட்ட புழுக்கள் மண்ணிலிருந்து, நம் தோலின் வழியாய் எளிதில் உடலுக்குள் புகுந்துவிடும். மேலும், நீர் மாசுபடுதல், கெட்டுப்போன உணவுப்பொருளை உண்ணுதல், சரியில்லா வாழ்க்கைத்தரம் போன்ற காரணிகளால் மிக எளிதில் அப்புழுக்கள் மனிதர்களின் உடலில் புகுந்துவிடுகிறது.

இந்த ஒட்டுண்ணி உருளைப்புழுக்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு 1970 களில் டிரிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனை. சேப்பல் மற்றும் கிட்டாசேட்டோ கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த முனை. ஒமுரா என்ற இரு நுண்ணுயிரியல் வல்லுனர்கள் தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அவர்களின் முயற்சியாலும், அவர்களுடன் பணியாற்றிய மாணவர்களின் உழைப்பின் விளைவாலும் 1978 ஆம் ஆண்டு ஏவர்மெக்டின் (avermectins) என்ற இயற்கையாய் கிடைக்கப்பெறும் உயிர் வேதிப்பொருளொன்றை கண்டறிந்தனர் [1-4]. இந்த வேதிப்பொருளானது 16 உறுபுகளைக்கொண்ட மிகப்பெரிய லேக்டோன் குடும்பத்தின் வழித்தோன்றலாகும். இது மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரிய நுண்ணுயிரி மூலம் நொதித்தல் மூலம் கிடைக்கப்பெற்ற வேதிப்பொருள் என்பது கூடுதல் தகவல். அதாவது, முனை. ஒமுரா அவர்கள், சப்பானில் உள்ள கிட்டாசேட்டோ கல்விநிறுவனம் அமைந்திருக்கும் கவானா பகுதியிலிருந்து மண்ணை சேகரித்து, அதிலிருந்து ஒருவகை நுண்ணுயிரியை (Streptomyces avermitilis) பிரித்தெடுத்தார், அந்நுண்ணியிரியானது பல்வேறு முறைப்படுத்தப்பட்ட திரவங்கள் நிரப்பட்ட கொள்கலன்களினுள் விடப்பட்ட பொழுது, அந்நுண்ணுயிர்கள் நொதித்தலின் மூலம் உருவாக்கிய பொருட்களே இந்த ஏவர்மெக்டின் என்ற லேக்டோன் குடும்ப வழித்தோன்றிகள். இவ்வேதிப்பொருளானது, சுண்டெலியினுள் செலுத்தப்பட்டு, எந்த வித வீரியமான பக்கவிளைவுகள் இன்றி உருளைப்புழுக்களுக்கெதிராக வேலைசெய்வதை உறுதி செய்தனர். (இந்த ஏவர்மெக்சினின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை வேதிப்பொருள்தான், நாம் எரும்பு மற்றும் சிறு பூச்சிகளைக்கொல்லும் மருந்தாக பயன்படுத்துகிறோம்).

இந்த கண்டுபிடிப்புக்காகத்தான், முனை. சேப்பல் மற்றும் முனை. ஒமுரா என்ற இரு நுண்ணுயிரியல் வல்லுனர்களுக்கும், இந்த ஆண்டின் (2015) மருத்துவத்துக்கான நொபெல் பரிசை கொடுத்திருக்கின்றனர். இவர்களுடன் முனை. யொயொ டு அவர்களும் அப்பரிசினை பகிர்ந்துகொள்கிறார். இவர் ஆர்ட்டிமிசினின் என்ற மலேரியா நோய்க்கான எதிர்ப்பு மருந்தை 1972 ஆம் ஆண்டு மாசிபத்திரி (wormwood - Artemisia absinthium) என தமிழில் வழங்கப்பெறும் [5] மூலிகைச் செடியிலிருந்து பிரித்தெடுத்தார். படம் 1 ல் ஏவர்மெக்டினின், ஆர்ட்டிமிசினின் மூலக்கூறுகளின் வேதிவாய்ப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.


படம் 1. ஏவர்மெக்டின், ஆர்ட்டிமிசினின் மூலக்கூறுகளின் வேதிவாய்ப்பாடு.


இக்கட்டுரையின் முகப்பில் கூறப்பட்டுள்ள மழை ஏற்படுத்தும் மண் நறுமணத்திற்கும், பின் ஏவர்மெக்டின் என்ற உயிர்வேதிப்பொருளை உருவாக்க பயன்படும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. 

இயற்கையே சிறந்த மருந்து:

நான் சிறுவயதாக இருக்கையில் வீட்டிற்கு வரும் நாட்டு மருத்துவர் ஒருவர், வாரம் ஒருமுறை ஞாயிறன்று ஒரு கருப்பு நிற உருண்டையான மாத்திரை ஒன்றைத் தருவார், அதனை வெறும் வயற்றில் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்கிலிருந்து ஆறு முறை கழிவானது புழுக்களுடன் வெளியேறிய பின் குளித்துவிட்டு சாப்பிட சொல்வார். அப்பொழுதைய காலங்களில் நமக்கு, இந்த உருளை, கொக்கிப் புழுக்கள் பெரும் இடையூறுகளை கொடுத்ததில்லை. நாம் அப்படிப்பட்ட இயற்கையான நாட்டுமருந்துகளில் நம் அறிவியல் ஆய்வை செலுத்தியிருந்தால், நாம் நம்மின் மருந்துகளை உலக மருத்துவர்களுக்கு பரிந்துரைத்திருக்கலாம், நம் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலரும் நொபெல் பரிசை பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மலேரியா தடுப்பு மருந்தான ஆர்ட்டிமிசினின் மூலக்கூறை பிரித்தெடுத்த முனை. யொயொ டு அவர்கள் கூட, ‘பல் கூறுகளையும் உள்ளடக்கிய இந்த இயற்கைதான் மருந்து உருவாக்கத்திற்கான ஆரம்பப்புள்ளி’ என்கிறார். நாமும் நம்மின் பண்பாட்டு இயற்கை மருத்துவத்தை மீட்டெடுப்பதற்கான காலம் வந்துவிட்டது என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளல் இன்றியமையாதது.

சுட்டிகள்:

1. http://www.nature.com/news/anti-parasite-drugs-sweep-nobel-prize-in-medicine-2015-1.18507

2. Ōmura, Satoshi; Shiomi, Kazuro (2007). "Discovery, chemistry, and chemical biology of microbial products". Pure and Applied Chemistry 79 (4).doi:10.1351/pac200779040581.

3. Ikeda, H.; Nonomiya, T.; Usami, M.; Ohta, T.; Omura, S. (1999). "Organization of the biosynthetic gene cluster for the polyketide anthelmintic macrolide avermectin in Streptomyces avermitilis". Proceedings of the National Academy of Sciences 96(17): 9509.

4. Burg, R. W.; Miller, B. M.; Baker, E. E.; Birnbaum, J.; Currie, S. A.; Hartman, R.; Kong, Y.-L.; Monaghan, R. L.; Olson, G.; Putter, I.; Tunac, J. B.; Wallick, H.; Stapley, E. O.; Oiwa, R.; Omura, S. (1979). "Avermectins, New Family of Potent Anthelmintic Agents: Producing Organism and Fermentation". Antimicrobial Agents and Chemotherapy 15 (3): 361. doi:10.1128/AAC.15.3.361.

5.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

சக்திவேல்

புதன், 29 ஏப்ரல், 2015

வெம்மை வெண்ணொளியின் தேவையும், ஈரோப்பியம் கொண்டு செரிவூட்டப்பட்ட கால்சியம் ஸ்ராண்டியம் சிலிகேட் படிம உருவாக்கமும்:

முன்பார்வை:

ஏறத்தாழ கிமு 15000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மனித இனம் இருளை அகற்றி, ஒளியின் உதவியுடன் வாழவிரும்பியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஒளிவிளக்குகளின் தோற்றம். நெருப்பை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு கற்றுக்கொண்ட மனிதன், அதனை பயன்படுத்தி ஒளிவிளக்குகளையும் உருவாக்க துவங்கினான். பின்னர் அதுவே பல்வேறு தோற்றத்தை பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படியான வளர்ச்சியில், அடுத்து உருப்பெற்றதுதான் டங்ஸ்டன் என்ற கனிமவேதித் தனிமத்தால் உருவாக்கப்பட்ட வெப்ப ஒளிரிகள். மின்சாரத்தை கண்டறிந்த பின், அறிவியல் மக்களை அடுத்த கட்ட வாழ்வுச் சூழலுக்கு இட்டுசென்றது. அப்படி 19 ஆம் நூற்றாண்டில் உருவான இந்த இரண்டாம் தலைமுறை வெப்பஒளிர் விளக்குகள், நம் மக்கள் அனைவரையும் வந்தடையும் முன்னரே பல தலைமுறை விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகை கடந்து சென்றுவிட்டன. தற்பொழுதைய சூழலில், உலகத்தவர்களால் உற்றுநோக்கப்படுவது ஒளிஉமிழ் சில்களே (படம் 1 மற்றும் அட்டவணை 1). இவற்றிலிருந்து வெம்மையான வெண்ணொளியை கொண்டுவருவது, தற்பொழுதைய நிலையில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த ஒளிஉமிழ் சில்லில், 450 nm அலைநீளம் கொண்ட ஒளியை உறிஞ்சு மஞ்சளாய் மாற்றி உமிழும் நிறமாற்றியை பொருத்தி வெண்ணொளியை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் அவ்வெண்ணொளி வெம்மையாய் அமையாமல் தண்மையாய் இருப்பதே இதன் மிகப்பெரிய இடையூறு.

அட்டவணை 1: ஒளிரிகளின் வளர்ச்சியும் அதன் காலமும்.
ஒளிரிகளின் வளர்ச்சி
திறன்
காலம்
தீபவிளக்குகள்
0.1 lm/W
கிமு ~ 15000
வெப்பஒளிரிகள்
16 lm/W
19ஆம் நூற்றாண்டு
உமிழ் ஒளிரிகள்
70 lm/W
20ஆம் நூற்றாண்டு
ஒளி உமிழ்சில்லு
300 lm/W
21ஆம் நூற்றாண்டு



படம் 1: ஒளிரிகளின் வளர்ச்சி. (அ) தீபவிளக்கு, (ஆ) வெப்பஒளிரி, (இ) உமிழ் ஒளிரி, (ஈ) ஒளி உமிழ்சில்லு.

ஏன், வெண்ணொளி தண்மையாய் அன்றி வெம்மையாய் அமையவேண்டும்:

எளிதாய், வெண்ணொளியை பலவழிகளில் பெறலாம் (படம் 2). மஞ்சள் நிறத்தை நீல நிறத்துடன் சேர்க்கும் பொழுதோ அல்லது அனைத்து நிறங்களின் கலவையின் விளைவாகவோ பெறலாம். அதில் முக்கியமானது RGB, அதாவது சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களின் குறிப்பிட்ட அளவிலான கலவை, வெண்ணொளியை கொடுக்கும். அதில் பச்சையுடன், நீலம் அதிகமாய் கலந்து, குறைந்த அளவு சிவப்பு அமையப்பெறும்பொழுது, அது தண்மையான வெண்ணொளியாக அமைந்துவிடுகிறது. இதுவே பச்சையுடன் குறைந்த நீலமும், அதிக சிவப்பும் அமையப்பெறும்பொழுது வெம்மையான வெண்ணொளி கிடைக்கிறது.


படம் 2: வெவ்வேறு வண்ணங்கள் கிடைக்கப்பெறுவதற்கான நிற சேர்மானம் (CIE diagram).

வெம்மையாய் அந்த வெண்ணொளியை அமைப்பதற்கான காரணம் அவ்வொளியை மனித உடல் எளிதில் ஏற்றுக்கொள்வதால்தான். இதற்கு பின்காரணியாய் அமைவது நாம் அன்றாடும் வாழ்ந்து பழகிய கதிரவன் தான். கதிரவனின் ஒளிகற்றைகளில் நிறங்கள் பல அமையப்பெற்றுள்ளன (படம் 3). இந்த பலவித நிறங்கள் இணைந்துதான் வெம்மையான சிவப்பு அதிகம் வெளிப்படும் வெண்ணொளி கதிரவனிடமிருந்து கிடைக்கிறது.

படம் 3: கதிரவ ஒளியில் அமையப்பெற்ற நிறமாலை. (அ) புற ஊதா நிறப்பகுதி, (ஆ) கண்பார்வைக்குட்ப்பட்ட நிறப்பகுதி, (இ) அகச்சிவப்பு நிறப்பகுதி, (ஈ) கதிரவன்.

 இந்த அறிவியலின் அடிப்படையில், வெம்மையான வெண்ணொளி உமிழும் சில்லு உருவாக்கத்தில் மிகப்பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Eu2+ பொதிக்கப்பட்ட CaSrSiO4 நிறமாற்றி உமிழும் படிமம்:

இந்த கட்டுரையில், Eu2+ பொதிக்கப்பட்ட CaSrSiO4 என்ற படிம உருவாக்கத்தினையும், அதனின் பண்பியல்புகளையுமே பார்க்க இருக்கிறோம். இந்த CaSrSiO4:Eu2+ நிறமாற்றி உமிழ்வானானது, கால்சியம் கார்பனேட், ஸ்ரேண்டியம் கார்பனேட், ஈரோப்பியம் குளோரைடு மற்றும் சிலிக்கா போன்ற மூலப்பொருட்களிலிருந்து, திடநிலை வினையின் மூலம் மீவெப்பநிலையில் உருவாக்கப்படுகிறது. இதில் முக்கியமாய், சிலிக்கா மூலக்கூறாக வெகுவாய் பயன்படுத்தகூடிய பொருட்கள் அல்லாது அதிநுண்துளை சிலிக்கா மூலக்கூறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சுட்டி 1). உருவாக்கப்பட்ட நிறமாற்றியின் படிம வடிவத்தை XRD (x-ray diffractometer) மூலமும், வெளிப்புற தோற்றத்தை SEM (scanning electron microscope) மூலமும், ஒளியியல் பண்புகளை PL (photo-luminescence spectrometer) மூலமும் கண்டறியப்பட்டுள்ளது.

உருவாக்கும் முறை:


(1-x): (1-y): 1: (x+y) என்ற விகிதத்தில் CaCO3, SrCO3, அதிநுண்துளை சிலிக்கா, EuCl3 போன்ற வேதிப்பொருட்களை, எளிதில் ஆவியாகும் பண்புடைய எத்தனாலில் கலக்கவேண்டும். அதனை சுழற்சியுடன் சரியாக 80 டிகிரி செல்சியசில் வெப்பமூட்டி 12 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். பின், எளிதில் ஆவியாகும் பண்புடைய எத்தனால் அனைத்தும் ஆவியாகி, திட கரைசல் மட்டுமே எஞ்சியிருக்கும். அந்த கரைசலை எடுத்து, சிறு உரலைக்கொண்டு நன்கு பொடித்து அதனை சிலிக்காவால் செய்யப்பட்ட, மீவெப்பநிலை தாங்கும் கோப்பையில் எடுத்துக்கொள்ளவேண்டும். இப்பொழுது அந்த பொடிக்கப்பட்ட கரைசலை 1200 டிகிரி செல்சியசில் 6 மணிநேரத்திற்கு, காற்றின் சூழலில் வெப்பப்படுத்த வேண்டும். குளிர்ந்த பின்னர், மீண்டும் அதனை பொடித்து நைட்ரஜன் (95%), ஹைட்ரஜன் (5%) சூழலில் 1200 டிகிரி செல்சியசில் 2 மணிநேரத்திற்கு வைக்கப்படவேண்டும். முதலில் காற்றின் சூழலில் வெப்பமேற்றபட்ட பொழுதே Eu3+ பொதிக்கப்பட்ட CaSrSiO4 படிமம் உருவாகிறது. பின், அதனை ஹைட்ரஜன் சூழலில் வைக்கப்படும்பொழுது CaSrSiO4 படிமத்தில் பொதிக்கப்பட்டுள்ள Eu3+, Eu2+ ஆக குறுக்கப்படும். கடைசியாய் CaSrSiO4:Eu2+ நிறமாற்றி உமிழும் படிமம் உருவாக்கப்பட்டுவிட்டது.

பண்பறிதல்:


இப்பொழுது உருவாக்கப்பட்ட படிமத்தில் உருவையும், வெளி வடிவையும் கண்டறிய வேண்டும். அதன் பொருட்டு முதலில் XRD கருவியில் படிமத்தை வைத்து 10 முதல் 80 டிகிரி வரையிலான 2 தீட்டா வில் x-கதிர்கள் கொண்டு தாக்கி அதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. அந்த XRD தகவலானது படம் 4 ல் காட்டப்பட்டுள்ளது. மேலும், அதனுடன் சேர்த்து அதே படிமத்தில் நிலைபு தகவல்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்ட படிமத்தில் தகவல்களை பார்க்கும் பொழுது, அது முழுவதும் நிலைபு தகவல்களை ஒத்திருப்பது தெரிகிறது. எனவே, மிகவும் நேர்த்தியான CaSrSiO4 படிமம் உருவாக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படுகிறது. மேலும், அந்த படிமத்தில் ஒளியை உரிந்து உமிழ்வதற்காக பொதிக்கப்பட்டிருக்கும் Eu2+  எந்த விதத்திலும் படிமத்தின் உருவை பாதிக்கவில்லை.

படம் 4. CaSrSiO4:Eu2+ படிமத்தின் XRD (அ) மற்றும் அதன் நிலைபு தகவல் (ஆ).

வெளிவடிவை தெரிந்துகொள்ளும் பொருட்டு, சிறு படிமத்தை எடுத்து அதனை SEM கருவியில் வைக்கப்பட்டு, எதிர்மின்னயணி கொண்டு தாக்கப்படுகிறது. அந்த முதல் நிலை எதிர்மின்னயணி தாக்கியதால் உருவான இரண்டாம் நிலை எதிர் மின்னயணிகளைக்கொண்டு படிமத்தின் வெளி வடிவம் கண்டறியப்படுகிறது. படம் 5 ல் காட்டப்பட்டுள்ள படி உருவாக்கப்பட்ட படிமத்தின் வெளி வடிவம் சற்று ஒத்த பரப்பையே கொண்டிருக்கிறது.

படம் 5. படிமத்தின் வெளிப்பரப்பை காண்பிக்கும் SEM படம்.

ஒளியியல் பண்புகள் (Optical Properties):


ஒரு நிறமாற்றிக்கு ஒளியியல் பண்பே மிகமுக்கியமான தேவையாக அமைகிறது. அதன்படி, அந்த உருவாக்கப்பட்ட புதிய CaSrSiO4:Eu2+ நிறமாற்றியின் ஒளி கிளர்வு மற்றும் உமிழும் பண்புகளை அறிய, நன்கு பொடித்துவிட்ட அதனை மிகவும் கவனத்துடன், மூடிய பிடிப்பினுள் வைத்து, அதனை PL கருவியில் பொருத்தப்படுகிறது. மூடிய பிடிப்பில், ஒரு பக்கம் ஒளி எளிதில் எந்த தடையுமின்றி நுழைந்து வெளியேறும் பொருட்டு, சிறப்பு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இப்பொழுது குறிப்பிட்ட அலைநீள வரிசை கொண்ட ஒளியானது அந்த நிறமாற்றி உமிழ்வானின் மீது பாய்ச்சப்படுகிறது. பாய்ச்சப்பட்ட அலைநீள வரிசையில் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் அந்த நிறமாற்றி உமிழ்வானது கிளர்வுறுகிறது. கிளற்வுறுதலின் பின்னணியில், தாழ்நிலையிலுள்ள படிமத்தின் எதிர்மின்னயணியானது ஒளியினை உறிஞ்சி கிளர்வுற்று மேல் நிலைக்கு சென்றுவிடுகிறது, அந்த கிளர்வுற்ற நிலையானது, நிலையற்ற ஒன்று. எனவே, அந்த கிளர்வுற்ற எதிர்மின்னயணி, தான் பெற்ற ஆற்றலை தன் அருகில் இருக்கும் Eu2+ ற்கு கடத்திவிடுகிறது. அப்படியாய் கடத்தப்பட்ட ஆற்றல், தாழ்வு நிலையிலுள்ள Eu2+ அயணியிலுள்ள எதிர்மின்னயணியை கிளர்வுரவைக்கிறது.

இந்த Eu2+ அயணியின், கிளர்வுற்ற நிலையும் நிலையற்றது என்பதால் உடனே அவ்வாற்றலை உமிழ்ந்து, தாழ்வு நிலைக்கு வந்தடைந்து நிலைப்புதன்மையை பெறுகிறது. அவ்வாறு உமிழ்ந்த ஃபோட்டான் எனசொல்லப்படும் ஆற்றலே நமக்கு வேறொரு நிற ஒளியாக கிடைக்கப்பெறுகிறது.

அதாவது, குறைந்த அலைநீளத்தில் (அதிக ஆற்றல்) ஒரு ஒளியானது உறிஞ்சப்பட்டு, கிளர்வுற்று பின்னது உமிழா மாற்றத்திற்குட்பட்டு (non-radiational transition), பக்கத்து எதிர்மின்னயணியை கிளர்ந்தெழுப்பி, பின் அதே அயணி தாழ்வு நிலைக்கு வரும்பொழுது, அதிக அலைநீளத்தில் (குறைந்த ஆற்றல்) ஒளியானது உமிழப்படுகிறது. இப்படி ஒரு அலைநீளத்தில் ஒளியை உறிஞ்சி, மற்றொரு அலைநீளத்தில் உமிழ்வதால்தான் இதற்கு நிறமாற்றி உமிழ்வான் எனவும் பெயர்பெறுகிறது.

நம்முடைய CaSrSiO4:Eu2+ நிறமாற்றி உமிழும் படிமமானது, நீல நிற ஒளியினை உறிஞ்சி, மஞ்சள் நிற ஒளியாக உமிழ்கிறது (படம் 6). அதனின் நிற சேர்மங்களை ஆராயும் பொழுது, (0.42, 0.35) என்ற வகையில் பச்சை குறைவாகவும், சிவப்பு நிறம் கலந்த மஞ்சள் அதிகமாகவும் அமையப்பெற்றிருக்கிறது (படம் 2ல், பச்சை புள்ளியை கவனிக்க).

படம் 6. CaSrSiO4:Eu2+ நிறமாற்றி உமிழும் படிமத்தின், கிளர்வு (அ) மற்றும் உமிழும் பண்பு (ஆ).

இதன் மூலம் இந்த நிறமாற்றி உமிழ்வானானது, நீல ஒளியுடன் இணைந்து வெம்மையான வெண்ணொளியை கொடுக்கவல்லது என்பது புலப்படுகிறது.

 படம் 7. நாம் உருவாக்கிய CaSrSiO4:Eu2+ படிமத்தின் உதவியுடன் செய்யப்பட்ட நீல உமிழ் சில்லு, வெம்மையான வெண்ணொளி நல்குவதை பார்க்கலாம்.

ஆய்வின் புரிதல்:

மேற்கண்டவற்றின் மூலம் நாம் கீழ்வாறான புரிதலுக்கு உட்படலாம்,
  • உலகில் முதன்முறையாக அதிநுண் துளை சிலிக்கா பொருளின் உதவி கொண்டு CaSrSiO4:Eu2+ என்ற நிறமாற்றி உமிழும் படிமம் உருவாக்கப்பட்டுள்ளது,
  • அந்நிறமாற்றி உமிழ்வானின் படிம உருவம், அதனின் நிலைவு படிம தகவலை ஒத்திருப்பது உறுதிசெய்யப்படுகிறது,
  • அதன் வெளித்தோற்றமும் மிகவும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது,
  • அதனின் ஒளி உமிழ்வு தன்மை மிகவும் சிறப்பு வாய்ந்ததாய் அமைவதோடு மட்டுமல்லாது, வெம்மையான வெண்ணொளியை, நீல நிறத்துடன் இணைந்து கொடுக்கும் சிறப்பையும் பெற்றிருக்கிறது,

சுட்டிகள்:

6. S Gandhi, K Thandavan, BJ Kwon, HJ Woo, SS Yi, JH Jeong,  KW Jang, DS Shin. Regulation of Phosphor's Color Gamut Area Using Mesoporous Silicate Source—A New Paradigm for the Solid‐State Lighting Segment. Journal of the American Ceramic Society 2015DOI: 10.1111/jace.13494.
7. S Gandhi, K Thandavan, BJ Kwon,  HJ Woo,   CH Kim,   SS Yi,  JH Jeong,  KW Jang, DS Shin. Highly efficient warm white light emitting Eu2+ activated silicate host: Another fabulous work of mesoporous silica. Journal of Materials Chemistry C 2014, DOI:  10.1039/C4TC00711E.
   
சக்திவேல்




வியாழன், 8 ஜனவரி, 2015

ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை: குருத்தணு ஆய்வாளர்களின் அடுத்த இலக்கு

குழந்தையின்மை என்பது உடல்ரீதியான குறையாகவே கருதப்படும் இக்கால நிலையிலும், அது ஒரு சமூகரீதியான குறையாகவே நம்மூரில் பார்க்கப்படுவது சற்று மனம்தளர வைக்கும் செய்தியே. இருப்பினும், இக்குறையை சரிகட்ட அறிவியல் ஆய்வுகள் பலவாறான சாளரங்களை அமைத்துக்கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆய்வுகளின் அதீத வடிவம்தான் தற்பொழுது குருத்தணுக்களை வைத்து மனிதனின் விந்தணுவையும், கருமுட்டையையும் உருவாக்கி காண்பித்திருக்கும் நிலை. உலக அளவில் மருத்துவத்துறையில் நடைபெறும் ஆய்வானது பல நிலைகளைக் கடந்து இன்று அறிவியல் அறியா ஒருவன் கனவில் கூட நினைத்துப்பார்க்கமுடியா உயரத்தை எட்டிப்பிடித்துவிட்டது. எனில் இன்றைய மருத்துவம் அறிய, சற்று அறிவியல் அறிந்திருப்பது மிக முக்கியமே. பொருளாதாரத்திற்கு மட்டும் பரிவட்டம் கட்டி, வளரும் இச்சமூகத்தில் எண்ணெற்ற புதுவிதமான நோய்க்கிருமிகள் தாக்கிக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுள் பலவற்றிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இயலாதது இன்னுமொரு பேரதிர்ச்சிதான். அவற்றுள், உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ், எபோலா, சார்ஸ், மெர்ஸ் என்று சொல்லப்படுகிற மத்திய கிழக்கு பகுதிகளை தாக்கும் சுவாச நோய் போன்றவை அடங்கும். இவ்வாறான நோயெதிர்ப்பு மருந்துகளே இல்லாத நோய்களுக்கும், மிகக்கடினமாய் செயல்பட்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை எளிமைப்படுத்தும் விதமாகவும் பலவாறான ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்றவாறே உள்ளன. இருந்தும், குழந்தையின்மை என்ற கேட்க எளிதான தனிமனித குறை என்பது பெருகிக்கொண்டே வந்தால் ஒரு இனமே அழியும் நிலை ஏற்படலாம். இதனை முன்னிறுத்தி பல ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுகளை முன்னோக்கி பயணப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இதன்பொருட்டு விளைந்ததுதான், தற்பொழுது ஆய்வாளர்களின் மத்தியில் கொண்டாடப்படும் ‘குருத்தணுவின் உதவியுடன் மனிதனின் விந்தணுவும், கருமுட்டையும் உருவாக்கியிருக்கும் செயல்.

படம் 1: (அ) குருத்தணு, (ஆ) அணு பெருக்கமடைதல், (இ) குருத்தணு, வேறுஏதேனும் அணுவாய் மாற்றம் பெறுதல்.

நம் உடலில் பாக்டீரிய நுண்ணுயிர்களைவிட குறைவாய் இருக்கும் நம்மின் அணுக்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பண்புகளுடன் காணப்பட்டாலும் அனைத்தும் ஒரே உயிரியல் பண்பு கொண்டதே. எடுத்துக்காட்டாய், நம் இதயத்திலுள்ள அணுக்கள் அது சுருங்கி விரியும் தன்மைக்கேதுவாகவும், கை,கால்களிலிலுள்ள அணுக்கள் அவை மடக்கி விரிக்கும் தன்மைக்கேதுவாகவும் அமையப்பெற்றுள்ளது. ஆனால், இந்த குருத்தணுக்கள் என்பது குழந்தையைப் போல என வைத்துக்கொள்ளலாம். குழந்தை எப்படி தான் பார்த்து வளர்பவரின் பண்புகளைப்பார்த்து தன் பண்புகளையும் மாற்றிக்கொள்கிறதோ, அதேபோல்தான், குருத்தணுக்களும் தான் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் உள்ள அணுக்களின் பண்புகளையே பிரதிபளிக்கும் அணுவாக மாறும் தன்மைகொண்டது. இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த குருத்தணுக்களை வைத்து பலவாறான நோய்களுக்கு மருத்துவ தீர்வு கண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதில் ஒன்றுதான் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மனிதனின் விந்தணுவும், கருமுட்டையும். இதனை மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து, இஸ்ரேலிய, ஐரோப்பிய ஆய்வாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

முன்னரே, ஜப்பானிய அறிவியலாளர் முனை. மிட்டினொரி சைடோ [1], கியோட்டா பல்கலைகழகத்தில் தன் ஆய்வகத்தில் முதன் முதலாய் 2012ல் செயற்கை கரு அணுக்களை (PGCs – primordial germ cells) உருவாக்கிக்காட்டினார். இந்த கரு அணுவானது, இயற்கையாய் கருவளர்ச்சியின் பொழுது உருவாகும் ஒன்று. இவைதான் பின்னர் ஆணிடம் விந்தாகவோ, இல்லை பெண்ணிடம் கருமுட்டையாகவோ மாற்றம் பெறுகிறது. இதனை, முனை. சைடோ செயற்கையாய் உருவாக்கி காண்பித்துவிட்டார். உருவாக்கப்பட்ட செயற்கை கரு அணுக்களை, உடலிலுள்ள விந்தணுவுடனோ, கருமுட்டையுடனோ சேர்கையில், அவையும் விந்தணுவாகவோ, கருமுட்டையாகவோ மாற்றம் பெறுகிறது. பின்னர், முற்றிலும் வளர்ந்த அந்த விந்தணுவையும், கருமுட்டையையும் உடலில் இருந்து பிரித்து செயற்கை வெளியில் (in-vitro) கருத்தரிக்க செய்ய இயலுகிறது. ஆனால், அவரால் அந்த விந்தணுவையும், கருமுட்டையையும் கரு அணுவிலிருந்து செயற்கைவெளியிலேயே உருவாக்க இயலவில்லை. இப்படிப்பட்ட சூழலில், முனை. சைடோவின் ஆய்வை அடிப்படையாய் வைத்து, செயற்கை வெளியில் மனிதனின் விந்தணுவையும், கருமுட்டையையும், கரு அணுவிலிருந்து இஸ்ரேலிய (ஜாக்கப்), ஐரோப்பிய (அஸிம் சுரானி) அறிவியலாளர்கள் உருவாக்கி காண்பித்துவிட்டார்கள். இதன் உதவியால், ஒரு செயற்கை வெளியில், தோல் அணுக்களை வைத்து மனிதனின் விந்தணுவும், கருமுட்டையும் உருவாக்கி, அதனை அச்செயற்கை வெளியிலேயே கருத்தரிப்புக்கு உட்படுத்தி, பின் அதனை உடலினுள் செலுத்தி வளரவைக்க முடியும். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், இரு ஆண்கள் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான். ஆம், ஒரு ஆணிண் தோலிலிருந்து விந்தணுவையும், மற்றுமொரு ஆணிண் தோலிலிருந்து கரு முட்டையையும் உருவாக்கி, இரண்டையும் செயற்கை வெளியில் கருத்தரிப்பு செய்து, ஒரு பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.


எது எப்படியோ, இவையெல்லாம் ஒரு செயற்கை பரிணாம வளர்ச்சிக்கு மனித இனத்தை இட்டுச்செல்கிறதே தவிர இயற்கையான பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய உதவும் ஆய்வாய் அமையவில்லை என்பது என் கருத்து.

தரவுகள்:

http://www.sciencemag.org/content/338/6109/971

சொற்களஞ்சியம்:

அணு-Cell; குருத்தணு-Stem cell; கரு அணுக்கள்-Primordial germ cells; அணு பெருக்கம்-Cell multiplications.

புதன், 7 ஜனவரி, 2015

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்:



சக்திக்கு விதையாகி கொஞ்சம்
முற்றினாலும் வினையாகி
உயிர்பறிக்கும் உயிர்ப்பொருளே
உனதுகதை எழுதப் போறேன்...

ஆறுபங்கு கார்பனும். அதின்
இருமடங்கு ஹைட்ரஜனும்
பிணையப்போக... கார்பனோடே
நானிருப்பெனென கலந்துவிடும்
ஆக்சிஜனும்... .மொத்தமாய் முடிச்சிட்ட
மூலக்கூறே குளுக்கோசு.... இதை
சர்க்கரையென சமூகம் சொல்லும்....

அவனின்றி ஓரணுவும் அசையாததை
அறிவியலில் உட்புகுத்தி ஆராய்ந்தால்
இங்கு அவனென்பது இவனாகும்
ஆக.. ஆதாரமும் இவனேயாகும்...

அளவென்று வந்துவிட்டால் கண்டிப்பு
அத்துமீறிச் சென்றாலே தண்டிப்பு
இன்னல்கள் முடக்கிவிட இயற்கையோடு
இயக்குநீராய் இருக்கிறதே இன்சுலினும்...

சர்க்கரையின் சிதைத்தொடர் வழிப்பாதை
சாறு நொதி உடைத்திருக்கும் உயிர்ப் பாதை..
கிளைகாலிசிஸ் என்றுரைப்பார் உயர்மேதை...

குளுக்கோசு நொதிகலந்து உடைபட்டு
பைருவேட்டும் லாக்டேட்டுமாய் பரவியோட
பருகிவிட்ட பாகமெல்லாம் பாடிடுமே
பசிநிறைந்த தெம்போடு ஆனந்தமாய்...

இப்படியாக இயல்பாக நடந்திருக்கும்
இமை இதழ் இரைப்பையென சுகந்திருக்கும்...

கூடிவிட்ட ஒருபொருளின் நிலையதனை
கூப்பாடிட்டு நோயென்று பயம்கூட்டி
கொள்ளையிட கூட்டம்பல கடைவிரிக்க
கூடும்சனம் கூப்பாடிட்டுக் கொலைபயத்தில்...

என்னதான் நடக்கிறது இயக்கமதின் அடிப்படையில்....??
சர்க்கரை நிலை இரண்டு வகை...
சார்ந்தநிலை..(IDDM) சாரா நிலை (NIDDM)..
இன்சுலின் இல்லாமை முதல்நிலை..
இன்சுலினால் இயலாமை இரண்டாம் நிலை..

லாங்கர்ஹான் திட்டுகளின் பீட்டா செல்
நாளத்தின் நாதமதை நிறுத்திவிட்டால்
இன்சுலினின் தாளநயம் தீர்ந்துபோகும்
இல்லாத இன்சுலினால் ஏறிப்போகும்..
கிளைகாலிசிஸ் உடைக்காத சர்க்கரையும்..

இரண்டாம்நிலை என்னவென்று எடுத்துவைக்க
துணைக்கழைத்தேன் கொழுப்பென்னும் கொலஸ்டீராலை
இயக்குநீரின் வேகத்திற்கு வேலிகட்டி
இயங்கவிடா திசுக்கள்தனில் மழுங்கலேற்றும்
இந்நிரண்டாம்நிலை பெரும்பான்மை இந்தியாவில்....

இன்சுலின்பால் இசைந்திடாத செல்ல னைத்தும்
எரிப்பதில்லை குளுக்கோசுக் கூடுகுமிழை..
தீயுறிஞ்சி உடைபடாத சர்க்கரை யதுவும்
சேர்ந்ததுகாண் நீரிழிவாய் குருதிக்குள்ளே....

நீராகாரம் பருகிப்போன நெல்லுநாடன்
நீரிழிவால் படுத்ததில்லை முன்னொரு காலம்
பச்சைக்கீரை பழுத்தபயிறு தின்றநாவும்
ருசித்துப் போய் சேர்ந்ததுவே இனிப்புமென்று...

நெல்வித்தாய் நல்மரபாய் நாமு மிருந்தோம்..
நடுவில்வந் தேறியதே நச்சுமரபும்...
குளிர்தேசப் பதமாகி யடைத்த கறியும்
கொடுங்கோடை நிழலின்கீழ் மென்று வளர்ந்தோம்....

அடிவயிறு அக்குள்புறம் கொடியிடையென
அங்கமெங்கும் கருணையற்றுச் சதையும் பெருத்தோம்..
கொழுப்புதின்று இன்சுலினை கொலையுஞ் செய்தே
கோடிகளில் இறக்குமதி இன்றும் தொடர்ந்தோம்..

உடுத்துவதில் உனக் கிருக்கும் உரிமைபோல
உணவுதனில் நீயுங் கேட்டால் செத்துப் போவாய்...
தலைமுறைக்கு நோய்கொடுத்த தறுதலை யென
தவறாமல் காறித்துப்பி சந்ததி பழிக்கும்..

எப்படியும் தடுக்க விழை.....
வெள்ளென வெறும்வயிற்றில் நீர்நிரப்பு...
வேக்காட்டு அரைநிலையில் மென்று உண்...
வியர்வைத்துளி வழிந்தோட வேலைபழகு...
வீண்பகட்டு உணவுகளின் கதவை மூடு...

தமிழுணவில் வாழ்ந்துவிடு...
தரணி மீண்டும் வென்று எடு......


சர்க்கரை வியாதிக்கு ஒரு விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாக நான் படித்ததை எனக்குத் தெரிந்த அளவில் எழுதியிருக்கிறேன். இது கண்டிப்பாக விழிப்புணர்வுக்கு மட்டுமே.. எனக்கு இலக்கணம் தெரியாது. என் எந்தப் படைப்புகளும் போலவே இப்படைப்புகளும் இலக்கண விதிகளுக்கு உட்படாது. ஆகவே இலக்கண விதிகளை கற்றுத் தேர்ந்த மரபுக் கவிஞர்களும் தமிழறிஞர்களும் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்....! மீண்டும் நன்றி

திரு. சரவணன்