புதன், 9 ஜூன், 2021

கிணற்றுத் தவளைகளா நம் குழந்தைகள்..!

நீண்ட நாட்களாக வெளியில் சுற்றித்திரிந்த தவளை ஒன்று எதிர்பாராத வேளையொன்றில் தவறி கிணற்றுள் விழுந்தது..
ஆகா
அருமையாக
இருக்கிறதே, நம்மை உண்ணும் பாம்புகள், பறவைகள் இங்கில்லையே, எப்பொழுதும் சில்லென தண்ணீர், விதவிதமான சுவையுடன் நீர்ப்பூச்சிகள் என அனைத்தும் இருக்கின்றனவே.. இதுதான் நம் முன்னோர்கள் சொல்லிய சொர்க்கமோ.. இவ்வளவு நாள் தெரியாத்தனமாக நரகத்தில் இருந்திருக்கிறோமோ.. என்றெல்லாம் பிதற்றியது அந்த தவளை..
நாட்கள் சென்றன.. தவளையோ உணவை பிடிக்க அதீத ஆற்றலை செலவழிக்க தேவையில்லை என்பதால் சற்றே பருத்திருந்தது..
ஒரு கட்டத்தில் பசி என்றால் என்னவென்றே மறந்திருந்த அந்த தவளைக்கு எந்த பூச்சியும் சுவை நல்குவதாக இல்லை..
தூக்கமும், உணவும் மட்டுமே வாழ்வென கழிந்த நாட்கள் என்னவோ தவளையின் கபாலத்திற்குள் பதிவாக மறுத்தன..
என்றோ ஒரு நாள் தன்னை பிடிக்க வந்த பாம்பிடமிருந்து தப்பிய அந்த நொடியும், தப்பித்த பின்னான மகிழ்வும், பசியும், பசித்தப்பின்னான உணவின் ருசியும், கபாலத்துள் கையாமுயாவென கத்தியது..
ஒரு நாள், தூங்கிக்கொண்டிருந்த தவளை சட்டென எழுந்து, ஏதோ நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்று எண்ணியது.. எண்ணிய மாத்திரத்தில், அதன் கபாலத்தில் உதித்தது ஒரு எண்ணம்..
இந்த பாம்பின் பிடியில் இருந்து தப்புவது கூட எளிது, ஆனால் இந்த சோம்பேறி தனமிருக்கே.. மிகவும் ஆபத்து..
சற்றே யாருக்கும் பயனற்று இந்த கிணற்றுள் வாழ்வதுதான் ஏனோ என்று சலிப்படைந்த தவளை, தட்டுதடுமாறி எப்படியோ கிணற்றிலிருந்து மேல்வந்து தன் இயல்பு வாழ்வை தொடர்ந்தது..
எந்த ஆபத்துமற்ற கிணற்றைவிட, பாம்புகள் நிறைந்த இந்த இடம்தான் நம் நிரந்தர வாழ்வென கருதி, பாம்பை எதிர்க்க கற்றுக்கொள்ள தொடங்கியது..
ஆக குழந்தைகளே,
தடைகளே நம்மை இயக்குகின்றன..
எதிரிகளே நம்மை உருவாக்குகிறார்கள்.. உழைப்பே நம்பை ஓய்வெடுக்க வைக்கிறது..
வலியே நமக்கான சுகத்தை கொடுக்கிறது..
எனில், வாருங்கள் குழந்தைகளே, பள்ளிக்குச் செல்வோம்...
நம்மின் அறிவுச் சிறகை விரிக்க நேரம் வந்துவிட்டதை எண்ணி பள்ளிக்கு செல்வோம்!
- சகா..
19/01/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக