ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தொடரும் ஆய்வுப்பணி..

இந்த ஆண்டின் உங்கள் ரிசொலியூசன் என்ன என்று கேட்டார் ஒரு மாணவர்.. அப்பொழுது இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டு பிறந்திருந்தது.. எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லாமல், இந்த ஆண்டாவது நான் முனைவர் பட்ட ஆய்வை முடித்துவிடவேண்டும் என கூறினேன்..
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் என்னால் முடிக்கமுடிந்தது..

நான் ஆய்வகத்தில் உருவாக்கிய மெட்டீரியல்ஸ் பல நாடுகளுக்கு பறந்துசென்றிருந்தது.. குறிப்பிட்ட சில கருவிகளைத்தவிர ஏனையவற்றை நான் எங்கோ யாரிடமோதான் உதவியாக கேட்டு பெறமுடிந்தது.. இந்தியாவிற்குள் கூட TIFR, AIIMS, IISc, IITM என பல ஆய்வு நிறுவனங்களையும், TA instruments, Bruker, Micromeritics, Perkin Elmer, Agilent போன்ற ஆய்வு கருவிகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களையும் சார்ந்து இருக்கவேண்டி இருந்தது..

சுருக்கமாக சோல்லவேண்டுமானால், காந்தத்தன்மை வாய்ந்த சிலிக்காவை, 7 நானோமீட்டர் துளைகளுடன் உருவாக்கி அதன் உட்புறத்தில் புற்றுநோய்க்கான மருந்தை புற தூண்டல் மூலம் (எக்ஸ்டர்னல் ஸ்டுமுலய்) வெளியேறுவது போல வைத்து வெளிப்புறத்தில், புற்று நோயை சரியாக கண்டறிந்து, அதனை சென்றடைவது என்றவாறு வேதியியல் மாற்றம் செய்யப்பட்டது. பிற்பாடு சில காரணங்களுக்காக 7 நானோமீட்டர் துளைகளின் சுவர்கள் எங்கும் 1-2 நானோமீட்டர் அளவுள்ள துளைகள் உருவாக்குவது என முடிவு செய்து, அதுவும் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டது..

மூன்று கோணங்களில் இந்த மெட்டீரியலை ஆய்வு செய்யவேண்டியிருந்தது.
1. மெட்டீரியல் சரியாக உருவாக்கப்பட்டிருக்கிறதா?
2. துளைகளுக்குள் உட்பொதிக்கப்பட்ட, காந்தப்புலம் கொடுக்கும் இன்னொரு பொருளான அயர்ன் ஆக்ஸைடு வெளியில் வராமலும், அதே வேளை சரியாகவும் வேலை செய்கிறதா?
3. இன்விட்ரோ என்று சொல்லப்படுகிற, எந்த ஒரு உயிரியல் சூழலின் சார்பற்ற நிலையில் (Cell viability, Bioimaging, in-vitro MRI imaging) அந்த மெட்டீரியல் எவ்வாறு தீங்கிழைக்காமல் வேலை செய்கிறது? இன்வைவோ எனப்படுகிற ஒரு உயிர்ச்சூழலில், ஒரு மாதிரி விலங்கின் உட்புறத்தில் (Biodistribution, Biocompatibility, Tissue compatibility, in-vivo MRI imaging, Theranostics) எவ்வாறு தீங்கிழைக்காமல் செயல்படுகிறது?

இவற்றை எல்லாம் செய்துமுடிக்க அன்றைய காலகட்டத்தில் எங்களிடம் பெரும்பாலான கருவிகள் கைவசம் இல்லை. என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளரும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலரும் உறுதுணையாக என்னை ஆதரித்ததன் விளைவால், பல ஊர்களுக்கு பயணப்பட்டேன்.. TEM, BET, 29Si NMR, MRI, VSM, ICPMS, SAXS என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்..

மும்பையில் தங்கி ICPMS எடுத்தபொழுதும், பெங்களூரில் தங்கி TGA, DSC எடுத்தபொழுதும் ஒரு நாள் கூடுதலாக தங்கி அந்தந்த கருவிகளை தனியாக இயக்க கற்றுக்கொண்டது, இதுநாள் வரையில் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.. AIIMSக்கு சென்று விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் சிறப்பு MRIஐ பயன்படுத்த கற்றுக்கொண்டபொழுது, யாரிடமும் சொல்லாமல் ஆக்ராவிற்கு சென்று தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு திரும்பியது எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது..

நான் என்னதான் இந்தியா முழுவதும் இதற்காக சுற்றித்திரிந்தாலும், என்னுடைய மெட்டீரியல்ஸ் அதனையும் தாண்டி நாடு நாடாக சுற்றித்திரிந்தது.. என்னைவிட என் மெட்டீரியல்ஸ்தான் அதிகமாக தன்னை விளங்கிக்கொள்ள பெரிய சிரத்தை எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன்..

எல்லாம் முடிந்து, ஒருவழியாக ஆய்வறிக்கை முடித்து அனுப்பியவுடன் காத்திருந்தது இன்னொரு சோதனை.. ஆமாம், 300க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட அந்த ஆய்வறிக்கை, பரிசோதனைக்காக சென்று சேர்ந்த இடம் ஐஐடி கல்கத்தாவில் பணியை நிறைவு செய்யும் நிலையில் இருந்த பேராசிரியரின் கையில்.. அவர், வைவாவிற்கு வந்திருந்தபொழுது சொன்ன முதல் சொல், இன்னொரு ஆய்வறிக்கை இருந்தால் எனக்கு அனுப்பிவை, என்னுடைய மனைவிக்கும் ஒரு தலையணை வேண்டுமாம் என்றார்..

ஆனால் அந்த வைவா எனக்கு ஆய்வின் மீதான தாகத்தை குறைந்திருந்தது.. வேறு ஏதேனும் செய்யலாமே தவிர எதற்கு மேலும் ஆய்வுப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது அந்த ஐஐடி பேராசிரியரின் கேள்விகள்.. பெருங்கூட்டத்தின் மத்தியில், என்னுடைய ஆய்வறிக்கையிலிருந்து ஒரு கேள்வியை கூடவா அவரால் எடுத்துவைக்கமுடியவில்லை என பெருத்த ஆதங்கம் என்னுள் தேங்கத்தொடங்கியது.. கண்களிலும் அது வெளிப்பட்டது, யாருமில்லா தனியரங்கில்.. இருந்தாலும் அவர் கேட்ட மிகவும் எளிமையான கேள்விகளுக்கு பதில்சொல்லமுடியாத நிலை எனக்கு ஏற்பட்டதற்கு காரணமும் இருந்தது, அது அவரின் ஸ்லாங்.. அவரின் ஆங்கிலம், பெங்கால் சாயலில் இருந்தது.. அப்பொழுது எனக்கு பீடித்த பதட்டமும் என் காதுகளை இறுக்கமாக அடைத்துக்கொண்டது.. பல ஆண்டுகளாக என் தூக்கத்தையும், என் உணவுகளையும், மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் பறித்துக்கொண்ட அந்த முனைவர் பட்டம், என்னை வந்து அணைக்கையில்,  அவ்வளவாக அது மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை..

இருந்தும், காலம் என்னை ஆய்வுப்பணியிலேயே தொடர நிர்பந்தித்தது.. இதோ தொடர்ந்துகொண்டிருக்கிறேன், வெற்றியும் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.. ஆனால், திருப்தி அடைந்தேனா என்றால்.. இல்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும்.. இந்த 2008 முதல் 2025 வரையான ஆய்வுப்பணி, எனக்கு பல மனிதர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது, பலவற்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.. என்றோ கற்றுக்கொண்ட பாடங்கள் இன்றும் எனக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன, நானும் பலருக்கு முகம் சுளிக்காமல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.. கற்றுக்கொள்ளுவதைவிட, கற்றுக்கொடுப்பது ஒரு மகிழ்ச்சியை உணரவைத்திருக்கிறது.. ஆனாலும் ஏதோ ஒன்று என்னை நிம்மதியாக இருக்கவிடமறுக்கிறது.. அது என்ன என்பதை இப்பொழுது ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறேன்..


- சகா..
04/01/2025 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக